Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthiya Kaatru
Puthiya Kaatru
ஆகஸ்ட் 2006
விஞ்ஞான விந்தை
பேரா. அப்துல் காதர்

அகிலமெல்லாம் அமெரிக்காவைப் பார்த்து அஞ்சுகிறது. அமெரிக்கா மனிதரைப் பார்த்து அஞ்சுகிறது. அவர்தான் அப்துல்கலாம். புகழ்மிக்க அமெரிக்கப் பத்திரிகையாளர் நியூமென் ஜோ புளகித்துக் கூறும் பொறிபறக்கும் வரிகள் இவை. Dollerகளால் வெல்ல எண்ணும் அமெரிக்காவை Scholarகளால் வெல்ல வல்லது என்ற பெருமையை இந்தியாவிற்குச் சேர்த்த அறிவியல் அடையாளம் அவர் I.T. என்றால் INFORMATION TECHNOLOGY என்றழைத்த உலகை INDIAN TECHNOLOGY உறுதிபட உரைக்க வைத்த உயர்தினை அறிவாளர். ‘தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது’என்றார்கள் நபிகள் நாயகம் (ஸல்). பாரதத்தாயின் பாதத்திற்குக் கீழிருக்கும் இராமேசுவரத்தில் பிறந்தேன். ஆம் சொர்க்கத்தில் பிறந்தேன் என்ற தன் பிறப்பிடத்தின் பெருமையை அவர் பேசுகிறார். காலடியில் பிறந்த கடற்கரைச் சிப்பி ஒன்று, இந்தியத் தாயின் மகுட முத்தாக ஆனது கீழிருந்து மேல்நோக்கி நிகழ்ந்த அவதார அதிசயம். தீபகற்ப தேசத்தைக் கரையேற்றியது கட்டுமரம். இசுலாமியர் வாக்கு எமக்குத் தேவையில்லை என்ற வாஜ்பாய் நாக்கு ஜனாதிபதி பதவிக்கு அப்துல்கலாம் பெயரை முன்மொழிந்தது. அத்வானி ரதமோ அவரை இராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துச் சென்றது. ஏதேன் தோட்டத்துப் பாம்பு பாங்கு சொன்னதைப் போல.

Abdul Kalam குறளின் இருவரிகளைப் போன்ற உதடுகள். மேல் வரிசைப் பற்களாய் பகவத் கீதை, அடிவரிசைப் பற்களாய் பைபிள். குர்ஆனைப் போன்ற ஏகத்துவ நாக்கு. நெஞ்சில் ஒற்றுமை உணர்வு. சின்னஞ்சிறு வயதில் பறவைகளைப் போலச் சிறகடித்துப் பறக்க ஆசைப்பட்டதை நினைவுபடுத்தும் இரு இமைச் சிறகுகள். வெண்மணற் பரப்பில் ஓயாஸிஸ் போல வெள்ளை விழியில் கருத்த பாவை. விஞ்ஞானத்தின் விளையாட்டு மைதானமான நெற்றி. முக்கியமானது இம்மூளை என்று இரண்டு அடிக்கோடிட்டதைப் போன்ற புருவங்கள். அந்தத் தலைமைச் செயலகத்துக்குப் பொன்னாடை போர்த்தியதைப் போலத் தோள்வரை தாழும் தலைமுடி, சிந்தனையோடு போட்டியிடும் வேகநடைக் கால்கள், விஞ்ஞானப் பூட்டுக்களைத் திறக்கும் கிரணச் சாவிக்கொத்தாய் கைவிரல்கள். அண்மையில் ஒரு நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க வந்து குத்துவிளக்கு ஏற்றுகிறார். தொடர்ந்து

“குத்துவிளக்கு
இந்துமதப் பாரம்பரியம்
ஏற்ற என் கையில் இருப்பது
மாதாகோவிலில் எரியும் மெழுகுவர்த்தி
ஏற்றுவது
அப்துல்கலாம்
இந்திய ஒருமைப்பாட்டின்
குறியீடு இதுதான்”

என்று பேச்சைத் தொடங்குகிறார். அவர் பேச்சு மட்டுமல்ல, அவரே நம் பண்பாட்டின் அடையாளம்தான்.

ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் செயற்கைக் கோள், இந்திய விஞ்ஞானிகள் குழுவோடு இவரால் வடிவமைக்கப் படுகிறது. விண்ணை நோக்கிய அறிவியல் பந்தயத்தில் இந்தியாவா? அது பிச்சைக்காரர் நாடாயிற்றே. அத்துணை அறிவு இந்தியர்கட்கு உண்டா? என ஏகாதிபத்தியவாதிகள் ஏகடியம் பேசிக் கொண்டிருந்த போது, பிரயமாகப் புறப்பட்டது ஆரியபட்டா. அடுத்த ஐந்தாம் நொடியில் கடல் தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது. ஆரியபட்டாவிற்கு நாட்டுப் பற்று அதிகம். அதனால் தான் விண்ணை நோக்கிச் செல்லாமல், அன்னை மண்ணை நோக்கித் திரும்பி விட்டது என்ற எள்ளல்கள் காத்திப் பிடுங்க, மீண்டும் 3 வராத்திற்குள் புதிதாக மற்றொரு செயற்கைக்கோளை அப்துல்கலாம் உருவாக்குகிறார். அக்கினி என்று அதற்குப் பெயர் சூட்டுகிறார்.

ஏன் இந்தப் பெயர்? என்று பத்திரிகையாளர் கூட்டம் வினா எழுப்பியது. பழந்தமிழ் இலக்கியத்தைச் சான்று காட்டி ‘அக்கினிக்கு விளக்கம் சொல்கிறார். ஆரியபட்டா புறப்பட்ட வேகத்தில் கவிழ்ந்து விழுந்துவிட்டது. அப்படிப்பட்ட அவலம் இனி வரல் ஆகாது. தீப்பந்தத்தைக் கவிழ்த்தாலும் நிமிர்ந்து தான் எரியும். இந்த அக்கினியும் கவிழ்த்தாலும் நிமிர்ந்து விண்ணோக்கிச் செல்லும் என்ற நம்பிக்கையில் ‘அக்கினி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றார். சீறிப் பாய்ந்து சென்றது வானில் அக்கினி. இந்தச் சாதனையைப் பாராட்ட உள்ளங்கை முழுக்க நட்சத்திர அட்சதைகளை வைத்துக் காத்திருந்தது வானம். உலகமே மெய்மறந்து கை தட்டியது.

தன் பதவி ஏற்பு விழாவிற்கு முன்வரிசையில் மந்திரிகள் அமர வேண்டாம். படிக்கும் மாணவர்கள்தான் அமர வேண்டும் எனப் பணித்தார். ‘மாணவர்க்காக எழுத்துக்களாக கரையும் சுண்ண மெழுகுவர்த்திகள்தான் ஆசிரியர்கள், முப்படைத் தளபதியானாலும் அடிப்படையில் நான் ஒரு ஆசிரியன்’ எனச் சொல்லி ஜனாதிபதி மாளிகையிலேயே வகுப்புகள் நடத்தி வருபவர்தான் நம் குடியரசுத்தலைவர். தன் ‘அக்கினிச் சிறகுகள்’ என்ற நூலைத் தன் ஆசியர்க்கும், பெற்றோர்க்கும் சமர்ப்பித்த அப்துல்கலாம், தன் ‘எழுச்சி தீபங்கள்’ என்ற நூலை, வேலூர் மாவட்டம் சக்கரமல்லூர் என்ற சிற்றூரை சார்ந்த மாணவிக்குச் சமர்ப்பித்துள்ளார். அதற்குக் காரணம் சொல்கிறார். மாணவிகள் அடங்கிய கூட்டம் ஒன்றில் கேள்வி ஒன்றைக் கேட்கிறார். “மாணவிகளே இந்தியாவின் எதிரி யார்?” பெரும்பாலான மாணவிகள் “பாகிஸ்தான்” என்ற போது குடியரசுத் தலைவர் சிரிக்கிறார். எரிமலைக்கு முன்பு பொரிமலையா என்பதைப் போல மெல்லிய புன்முறுவல். சரியான விடை தருக என்கிறார். சக்கரமல்லூர் சர்க்கரைக்குட்டி

“வறுமை”

என்ற போது, தாவியது நம் நரைத்த நிலா. அந்தப் பிள்ளை அல்லியை உச்சிமோந்து பாராட்டுகிறது. ‘எழுச்சி தீபங்கள்’ சமர்ப்பண சரித்திரமாகி விட்டது.

பெங்களூருக்குக் கலாம் வருகிறார். வழக்கம் போல் மாணவர்களைச் சந்திக்கிறார். மாணவிகளை நோக்கி “ஐஸ்வர்யராய், சுஷ்மிதா சென், லாரா தத்தா - இம்மூவரும் யார்?” எனக் கேட்கிறார். ஒருமித்த குரலில் “இவர்கள் அனைவரும் உலக அழகிப் போட்டியில் முதற்பரிசு பெற்ற இந்தியப் பெண்கள்” என்று சொன்ன மாணவிகளைப் பார்த்து

“அவர்கள் வெற்றி பெற்றதற்குக் காரணம் என்ன?”

எனக் கேட்டார். சில மாணவிகள் “அவர்கள் மிகச் சிறந்த அழகிகள் என்பதுதான் காரணம்” என்றனர். சில மாணவியர் அழகிப் போட்டியில் கடைசிச் சுற்றில் கேட்கப்படும் அறிவுப் பூர்வமான கேள்விக்கு மிகப் பொருத்தமான விடைகளைச் சொன்னதே இப்பெண்கள் சர்வதேச அழகிப் போட்டியில் முதலிடம் பெற்றதற்கான காரணம்” என்றனர். குடியரசுத் தலைவர் “நான் எதிர்பார்க்கும் விடை வரவில்லையே” என்கிறார். ஒரு பிஞ்சுப்பிறை

“அம்மூன்று பெண்களும் சர்வதேச அழகிப் போட்டியில் முதலிடம் பெற்றதற்குக் காரணம்” எனச் சொல்லி நிறுத்த நிசப்தம். தொடர்ந்து அந்த மாணவி “நான் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளாததே” என்று முடித்த போது அரங்கம் அதிர்ந்தது. எவரெஸ்ட் குனிந்தொரு கூழாங்கல்லை எடுப்பது போல அந்தக் குழந்தையைத் தூக்கி எடுத்தார். ‘கூழாங்கல் இல்லை இது இந்த தேசத்து வைரம்’ என்று குறிப்பிட்ட போது ஆங்கில நாவலன் எட்மண்ட் பர்க் (Edmud Burrke)

“Educational Institutions polish pebble
but dims diamonds”

(கல்வி நிறுவனங்கள் கூழாங் கற்களைப் பளபளபாக்குகின்றன; வைரங்களை ஒளி குன்றச் செய்கின்றன) என்ற கூற்றை நினைவு படுத்தியது. குடியரசுத் தலைவரின் கேள்விகள் வைரங்களைப் பட்டை தீட்டக் கூடியவை என்பதால் அவரே ஓர் அதிசயமான பல்கலைக்கழகம் என்பது புலனாகிறது.

Illustrated weekly of India ஆசிரியர், ஜெயில்சிங் குடியரசுத் தலைவர் ஆன போது

“குடியரசுத் தலைவர்கள் ரப்பர் ஸ்டாம்புகளாகி விடுவது வழக்கம். ஆனால் ஜெயில்சிங் குடியரசத் தலைவராகி இருப்பது. முதன் முதலாக ரப்பர் ஸ்டாம்ப் ஜனாதிபதி ஆகியது போல”

என்று எழுதினார். ஆட்சியாளர்கட்கு ஜால்ரா தட்டுவதே ஜனாதிபதிகட்கு வழக்கமாகி விட்ட சூழலில், அப்துல் கலாம், ஆதாயம் தரும் பதவி குறித்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் திருப்பி அனுப்புகிறார். சில நாடாளுமன்ற உறுப்பினர்களை, அமைச்சர்களைக் காப்பாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அந்த மசோதாவின் ஜனநாயக விரோதத் தன்மையைச் சுட்டிக்காட்டி நாடாளு மன்றத்திற்குத் திருப்பி அனுப்பிய போது, ஜப்பானியக் கவிஞர் டான் சூய் (Ton su) எழுதிய

“அரசனுக்குக் கூட
தொப்பி எடுத்து வணங்குவதில்லை
வயற்காட்டுப் பொம்மை”

என்ற ‘ஹைகூ’தான் நினைவுக்கு வந்தது. இந்திய ஜனாதிபதிப் பதவியும் ‘வயக்காட்டுக் காவல் பொம்மைதான். ஆனால் அது கூட தொப்பி எடுத்து அரசனுக்கு வணங்குவதில்லை என்ற தன்மானக் குறிப்பு அப்துல்கலாமுக்குச் சரிவரப் பொருந்துகிறது. அந்த வயற்காட்டுப் பொம்மைக்குள் வைக்கோல். ஆனால் இந்திய வயற்காட்டுப் பொம்மைக்குள் செங்கோல்.

“இராமேசுவரக் கடலில்
இருந்து புறப்பட்ட
இந்திய ஆறு
அதற்கு வயது
எழுபத்து ஆறு!

110 கோடி மக்கள்
ஆளுக்கொரு ஆண்டெனக் கொடுக்கும்
அட்சதைத் துளிகளால்
ஆண்டவன் ஆயுள்காலம் வரை
ஆறு ஓடட்டும்!

விளக்கணைக்கும் பள்ளியறை
விலக்கி
விளக்கேற்றும் பள்ளியறை நோக்கி
விருப்பமுறவரும் மாப்பிள்ளையே!

உன்
மூளையில் நிகழ்ந்த
முதல் இரவால்
விண்ணில் செயற்கைக் கோள்

உன்
இதயம் நடத்திய
இல்லறத்தால்
மண்ணில் செயற்கைக் கால்
முன்னது கனமானது
தாயின் கர்ப்ப வயிறுபோல்
பின்னது லேசானது
குழந்தையின் சிரிப்பைப் போல்

விஞ்ஞான விந்தை நீ!
பூமிக்குள் அதிர்கையில்
பொக்ரான் பேரிகை
மேலே
எங்கள் குழந்தைகள் கையில்
ஏவுகணைத் தூரிகை!

அசல் காந்தியும்
காமராச
நிழல் காந்தியும்
பிசைந்து உன்னைப்
பிரமன் படைத்தாலும்
நகல்படுத்த முடியாத
நடுநிலையாளன் நீ
உன்
வகிட்டைப் போல
2020இல் வல்ல நல்லரசாகும்
இந்திய கனவுக்கு
இளைஞர்கள் இருவிழியாய்
இருப்பினும் நீயே
இருப்பாய்க் கருவிழியாய்!


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com