வசதியாய் மறந்துபோன 8 மணிநேர வேலை
எலீனார் மார்க்ஸ்
நாம் இங்கே தொழிலாளர்களுக்காக, அவர்களது தற் காப்புக்காகவும், உமைகளைக் கேட்டுப் பெறவும் குழுமி இருக்கிறோம். எட்டு மணி நேர வேலை மசோதாவை நிறைவேற்றக் கோரி விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில் நாம் ஹைட் பூங்காவில் கூடிய நாட்களை நினைத்துப் பார்க்கிறேன். கைப்பிடி எண்ணிக்கை இன்று நூற்றுக்கணக்காகி, நூற்றுக் கணக்கு ஆயிரக்கணக்காகி, இன்று இந்தப் பூங்கா நிரம்பி வழியும் மட்டும் குழுமி இருக்கிறோம். நாம் வேறொரு ஆர்ப்பாட்டம் நடப்பதின் முகத்துக்கு எதிராக நிற்கிறோம். ஆனால் பெருந்திரள் மக்கள் நம் பக்கமே உள்ளனர் என்பதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
சரக்குக் கப்பல்துறை வேலை நிறுத்தம், எரிவாயுத் தொழிலாளர் வேலை நிறுத்தம் என்று பல்வேறு போராட்டங்களின் துயர்மிக்க நேரங்களில் நம்மைச் சுற்றி ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கூடி நின்றதைப் பார்த்தோம். நாம் தேவையான அளவுக்கு வேலை நிறுத்தங்கள் செய்துவிட்டோம். தற்போது ‘எட்டு மணி நேர வேலை’ என்பதைச் சட்டபூர்வமாகப் பெறுவதில் உறுதியாக உள்ளோம். அப்படிச் (சட்டபூர்வமாக) செய்யவில்லை என்றால், அது நம்மிடமிருந்து மீண்டும் பறித்தெடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
நான் இந்த மதிய வேளையில் ஒரு தொழிற் சங்கவாதியாக மட்டும் பேசவில்லை. ஒரு சோசலிஸ்ட் ஆகவும் பேசுகிறேன். சோசலிஸ்டுகள் எட்டு மணிநேர வேலை என்பதுதான் முதலாவதும் முதன்மையானதுமான நடவடிக்கை என்று நம்புகிறார்கள். இனி இந்தச் சமூகத்தில் ஒரு வர்க்கம் வேறு இரண்டு வர்க்கங்களைத் தாங்குகிறது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் சமூகத்தின் மேற்தட்டிலும் அடித்தட்டிலும் நிலவும் வேலை செய்யாத நிலைமை முற்றிலுமாக நீக்கப்படும்.
இது போராட்டத்தின் முடிவு அல்ல. துவக்கம் மட்டும்தான். இங்கே வந்து எட்டு மணிநேர வேலைக்காக ஆர்ப்பாட்டம் நடத்தினால் மட்டும் போதாது. நாம் சில கிறிஸ்தவர்கள் வாரத்தில் ஆறுநாட்கள் பாவம் செய்துவிட்டு ஏழாவது நாள் பாவமன்னிப்பு கேட்கப் போவது போல் இருக்கக் கூடாது. நம்முடைய உமைகளையும் கோக்கைகளையும் பற்றித் தினந்தோறும் பேச வேண்டும். நாம் சந்திக்கும் மனிதர்களிடம், குறிப்பாக பெண்களிடம் பேசி அவர்களை நமக்கு உதவியாக நம் அணியில் சேர்க்க முயற்சிக்க வேண்டும்.
‘‘எண்ணி அழிக்க முடியாத
எண்ணிக்கையில்
துயில் விழிக்கும்
சிங்கங்களென
எழும்புங்கள்...
உறக்கத்தில் உங்கள் மேல்
பிணைக்கப்பட்டச்
சங்கிலிகளை
பனித்துளிகளென
தெறித்தெறியுங்கள்...
நீங்கள் நிறையப் பேர் -
அவர்களோ மிகக்குறைவு...!’’
(எலீனார் மார்க்ஸ் மாமேதை கார்ல் மார்க்ஸின் கடைசி மகள். இங்கிலாந்தில் சோசலிஸ்ட் தலைவராக விளங்கிய அவர் 1890-ல் Hyde Park-ல் நடத்திய மே தின உரையின் ஒரு பகுதி. ‘The Voice of Working Women’பிரசுரம் செய்ததிலிருந்து தமிழாக்கம் : ஆர். பிரேம்குமார்)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|