தொகுதி மறுசீர் ஆணையமும் தமிழக பாராளுமன்ற (தனித்) தொகுதிகளும்
இராபர்ட் சந்திரகுமார்
சுதந்திரமடைந்து ஏறத்தாழ 60 ஆண்டுகள் கடந்து போன சூழலில் ‘‘மிகப் பெரும் ஜனநாயக நாடு’’, ‘‘சட்டத்தின் ஆட்சி’’ நிலவும் நாடு என உலகளாவிய அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில் பட்டியலின மக்களுக்கு அரசியல் ரீதியான பங்கேற்பினை உறுதி செய்யும் வகையிலான உரிமை முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது.
சட்டமன்ற, பாராளுமன்ற பொதுத்தொகுதிகள், தனித்தொகுதிகளின் எல்கைகள், எண்ணிக்கைகள் போன்றவைகளை வரையறுக்க 1952 ஆம் ஆண்டில் மத்திய அரசால் ‘‘தொகுதி மறுசீர் சட்டம்’’ இயற்றப்பட்டது. தொகுதி மறுசீர் சட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மத்திய அரசால் அவ்வப்போது இயற்றப்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு இதுவரையிலும் நான்கு முறை தனியே சட்டம் இயற்றியுள்ளது.
முதல் இரண்டு பொதுத்தேர்தலின் போதும் அமலில் இருந்த ‘‘இரட்டை வாக்குமை’’ முறை நீக்கப்பட்டு நடப்பில் உள்ள தனித்தொகுதி முறை அமலாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ‘‘தொகுதி மறுசீர் சட்டம் 2002’’-ம் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை தலைவராகக் கொண்டும், மத்திய தலைமை தேர்தல் ஆணையரையும், மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையரையும், மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐவரையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவரையும் இணைந்த உறுப்பினர்களாகக் கொண்டும் ‘‘தொகுதி மறுசீர் ஆணையம்’’ செயல்படுகிறது.
தமிழகத்திலுள்ள (234) சட்டமன்ற, (39) பாராளுமன்றத் தொகுதிகளில் நடப்பில் உள்ள எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை. ஆனால், பட்டியலின மக்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனித் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதுடன், நடப்பிலுள்ள பல தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. எல்லைகளும் மாநிலம் முழுவதும் பரவலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
தொகுதி மறுசீர் சட்டம் 2002, ‘‘பட்டியலின மக்களுக்கான தனித் தொகுதியானது, மாநிலம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் அந்தந்த பகுதிகளில் பட்டியலின மக்கள் எண்ணிக்கையில் ஒப்பீட்டளவில் அதிகமாகவும் இருக்கும் தொகுதியாக இருக்க வேண்டும்’’ என்றும் கூறுகிறது.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கருத்துரையில் பட்டியலின மக்களுக்கான, 7 பாராளுமன்ற (தனித்) தொகுதிகளும் தமிழகம் முழுவதும் பரவலாக ஒதுக்கீடு செய்யப்படாமல் (திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், நாகப்பட்டினம்) வட மாவட்டத்தில் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தெற்கு, மேற்கு, கிழக்கு, மத்திய பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்றத் தொகுதிகளில் தனித் தொகுதிகள் எதுவும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
தொகுதி மறுசீர் சட்டத்திற்கு முற்றிலும் எதிராக தற்போதைய ஒதுக்கீடு அமைந்துள்ளது. சமமின்மையை ஈடுசெய்து தேசமெங்கும் நிலவும் சமமற்ற நிலையை அகற்றுவதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை கொள்கை ஆகும். தமிழகத்தில் வசிக்கும் 19 விழுக்காடு பட்டியலின மக்களும் குவியலாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரவலாக வசித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தனித் தொகுதியானது மாநில முழுவதும் பரவலாக அமையப் பெறுவதே இயற்கை நீதியாகும்.
தனித்தொகுதி முறையானது இந்திய அரசியல் சாசனத்தால், பட்டியலின மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அரசியல் ரீதியான உமைகளில் தலையாயதாகும். அதன் அடிப்படையில் பட்டியலின சாதியினர் அரசியல் பங்கேற்பு செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, தனித்தொகுதி முறையானது பட்டியலின மக்களுக்கு அடிப்படை உமையே அன்றி எவரும் மனம் கசிந்து வழங்கும் சலுகை அல்ல.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மறுசீர் ஆணையத்தின் தமிழக அளவிலான கருத்துரையானது இந்திய அரசியலமைப்பு சாசனத்தால் உறுதி செய்யப்பட்டுள்ள சமத்துவத்தை சீர்குலைப்பதுடன் சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் ஏனைய அடிப்படை மதிப்பீடுகளையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் வாழும் பட்டியலின மக்களைப் பொருத்தவரையில் இந்திய அரசியல் சாசனத்தின் சரத்துக்கள் 14 மற்றும் 21 ஆகியவை மீறப்பட்டுள்ளன.
அரசியல் அமைப்புச் சட்டம் பட்டியலின மக்களின் அரசியல் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் வழங்கியுள்ள உமையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே தனித்தொகுதி முறையாகும். அப்படியிருக்க, மாநிலம் முழுவதும் அனைத்து பட்டியலின பிரிவு மக்களும் பங்கேற்பு செய்ய இயலாத வகையில் அனைத்து தொகுதிகளையும் ஒரே பகுதியில் மட்டுமே ஒதுக்கியுள்ளது ஓர் உரிமைப் பறிப்புச் செயலே ஆகும்.
தற்போது, தமிழகத்தில் அமலிலிருக்கும் தனித் தொகுதிகளான ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் தென்காசி (தெற்கு) பொள்ளாச்சி, ராசிபுரம் (மேற்கு), நாகப்பட்டினம் (கிழக்கு) பெரம்பலூர் (மத்தி) சிதம்பரம், திருபெரும்புதூர் (வடக்கு) என மாநிலத்தின் அனைத்து பகுதியிலுள்ள பட்டியலின மக்களுக்கு பிரதிநிதித்துவரி வாய்ப்பளிப்பதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் பொது விசாரணை நடைபெறும் என்றும் அதில் வரும் கருத்துக்கள், ஆலோசனைகள், கவனத்தில் கொள்ளப்படும் என்றும் கண்துடைப்பிற்காக தொகுதி மறுசீர் ஆணையம் அறிவித்து அந்த அடிப்படையில் 4 மாவட்டங்களுக்கு மொத்த கால அளவு 3 மணி நேரம் (சராசரியாக ஒரு மாவட்டத்திற்கு 45 நிமிடங்கள் மட்டுமே) ஒதுக்கப்பட்டது. மேலும், 8 மாவட்டங்களுக்கு ஒரே இடத்தில் வைத்து பொது விசாரணை நடைபெற்றதன் காரணமாக அனைத்து பகுதி மக்களும் அதில் பரவலாக பங்கேற்பு செய்ய இயலாமல் போனது.
பொது விசாரணை முடிந்த பிறகு மாநில அளவிலான இணைந்த உறுப்பினர்களுடன் அமர்ந்து கலந்தாலோசித்து, இறுதியாக குடியரசுத் தலைவரது ஒப்புதலுடன் செப்டம்பர் மாதம் அரசிதழில் இறுதியறிக்கை வெளியிடப்படும் என தேசிய தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு செய்துள்ளார். அரசிதழில் வெளியிடப்பட்ட இறுதியறிக்கையை இந்திய நாட்டின் எந்த நீதிமன்றத்திலும், கேள்விக்குட்படுத்த முடியாது என இச்சட்டமும், இந்திய அரசியல் சாசனமும், உச்சநீதிமன்றமும் தெளிவாகக் கூறுகிறது. அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026ல் தான் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் தமிழகத்தின் தெற்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்கள் மூன்று தலைமுறையினர் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இச்சட்டத்தில் தனித் தொகுதிகளின் சுழற்சி முறை குறித்து எதுவும் கூறப்படவில்லை என்பதும், குறிப்பிடத்தக்கது.
ஆகவே, சட்டத்திற்கும், இயற்கை நீதிக்கும் எதிராக, முரணாக, தற்போது வெளியிடப்பட்டுள்ள தொகுதி மறுசீர் ஆணையத்தின் தமிழக அளவிலான கருத்துருவானது திரும்ப பெறப்பட்டு, தொகுதி மறுசீர் சட்டத்தின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பட்டியலின மக்களின் பிரதிநிதித்துவம் பெறும் வகையில், மாநிலத்தின் தெற்கு, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என அனைத்து பகுதிகளிலும் பரவலாக பாராளுமன்றத் (தனித்) தொகுதிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|