அத்தா நாற்காலி
இரா. முகம்மது ரஃபீக்
அத்தாவை விட
பயமூட்டியபடி இருந்தது
அத்தா நாற்காலி
அவரற்ற பொழுதுகளிலும்
கண்காணிப்பின் நிழல்கள்
எம் மீது படிந்திருந்தன
நாற்காலியின் வழியாய்
துவட்டி முடித்த துண்டு
முகச்சவர உபகரணங்கள்
காயப் போட்ட உள்ளாடை
மறந்து விட்டுப்போன கண்ணாடி
இவைகளன்றி
பிறர் அமர்ந்ததாய்
ஞாபகமில்லை எனக்கு.
பாட்டி அளவுக்கு எச்சரிக்காவிட்டாலும்
பெருக்கும் போது
நகர்த்தி வைக்கும் நிதானத்தில்
அம்மாவும் உணர்த்தி வந்தாள்
நாற்காலியின் இருப்பை
விருந்தினர் எவரும்
அமர முற்படுகையில்
காலொடிந்ததாகச் சொல்லப்படினும்
இன்னமும் கம்பீரமாகவே நிற்கிறது அது.
உட்கார்ந்த உடனே
பயந்தெழுந்த கனவின் முடிவில்
நனைந்திருந்தது படுக்கை விரிப்பு.
அவர் கண்ணெதிரிலேயே
கால்மேல் காலிட்டு
அக்கா மாப்பிள்ளை
அமர்ந்த பிறகு
யாரும் அழைப்பதில்லை அதனை
‘அத்தா நாற்காலி’ என்று.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|