நகுலனின் நினைவை கவிதையின் காலடித் தடங்களால் கடந்து செல்லும் ஹவியின்
மஞ்சள் நிறப் பூனை
நகுலனைப் போய்
எல்லாம் பார்க்கிறார்களே
அதைப் பற்றி
நீ என்ன நினைக்கிறாய்
என்று நவீனனிடம் கேட்டேன்
ஒவ்வொரு முறையும்
நம்மை கடக்கும் பூனையை
நாம் அடையாளம் காண்பதில்லை
நிழல்களை கடப்பவர்கள் யாருமில்லை
என்று சொல்லிச் சென்றான்
புரிந்தும் புரியாத
ஒரு போதத்தில் நின்ற
பொழுது
சுசிலா வருவது போலத்
தான் தெரிந்தது
அவளைக் கேட்கலாம்
என்றால்
நீல வெள்ளை வளையங்கள்
கண்ணுக்குள் அலைந்த படி
காட்சியை மறைத்து
விழித்து பார்ப்பதற்குள்
கடந்து மறைந்தாள்
பிறகு சாவதானமாக
நான் நாளை நகுலனை சந்தித்த போது
கேட்டேன்
நேற்று நவீனைப் பார்த்தேன்
என்றேன்
நீங்கள் தான் நவீனனா என்றார்
விடை பெற்றுக் கொண்டேன்
**********
இந்த தனிமை எனக்கு எதைச் சொல்கிறது
நான் தனித்திருப்பதை பற்றியா
தனிமை தனித்திருப்பதைப் பற்றியா
தனித்து இருப்பது என்பதை பற்றியா
தனிமை என்பது தனித்து இருப்பது
தனிமை என்பது தனித்திருப்பது
தனித்திருப்பது தான் தனிமை
தனிமை தான் தனித்திருக்கிறது
தனித்திருக்கிறது தனிமை தான்
தனித்திருப்பது தனிமை தான்
தான் தான் தனிமை தான்
தனிமை தான் தனிப்பது
தனியே தனிமை தனித்து
தனித்து தனிமையே தனியே தன்
வழியே இருக்கிறது தனிமை
தனித்து தன்னந்தனிமையாய்
நகுலன் கை யெழுத்தில்
அந்த மஞ்சள் நிறப் பூனை
குட்டியை கண்டேன்
வாலசைத்துக் கொண்டு
பக்கத்தில் இருந்தது
‘அதை கொண்டு வந்து
விட வேண்டும்’
என்று நினைத்திருந்தோம்
நானும் அவனும் பேசி
கொண்டிருக்கையில்
அது பேசியது :
‘பிராந்தி என்பது கூட ஒரு மனநிலை’
அப்படியும் சில சமயம்
நினைத்துக் கொண்டு
இருக்கையில்
கடந்து சென்றது நிழல்
பூனையின் கால்களுடன்
நகுலன் கை எழுத்தில்
பூனை பேசியது
இல்லை
பூனை எழுத்தில்
நகுலன் பேச்சு
எங்கும் பூனைகள்
பல நிறம்
எங்கும் நிழல்கள்
ஒரே நிறம்
அப்பொழுது நிழல்கள் என்பது கூட
சரியில்லை
எப்பொழுதும் நிழல் தான்
எப்பொழுதும்
நழுவும் நிழல்
தாவும் பூனை
பூனை கூட ஏதோ
ஒன்றின் நிழல்
சில சமயம்
நிழலே பூனை
கவிதை என்பதே எழுத்தில்
அர்த்தத்தை தள்ளி போடும் முயற்சி
தான் என்றார் நகுலன்
மரணத்தைத் தள்ளிப் போடும்
முயற்சி தான் என்கிறான்
இதை எழுதுகிறவன்
சொல்லிவிட்டு
மரணத்தையும் அர்த்தத்தையும்
பற்றி குழம்பத் தொடங்கியது கவிதை
இந்த இடத்திலிருந்து.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|