சிவசங்கர் கவிதைகள்
யுகம்
உங்கள் அறையில் மெல்லிய
நீள் வெளிச்சம் படர்ந்திருக்கும்
அவன் தீண்டலில்
உணர்ந்திருப்பாய் என்னை
அந்த நேரத்தில்
உன் மார்பிலும், மடியிலும்
தழுவிச் சென்றிருக்கும்
என் கண்ணீரின் காலடிச் சுவடு
அவன் நிச்சயம்
அவனுக்கானதாய் புரிந்திருப்பான்
எனக்கான உன் நேஸத்தை
எல்லாம் முடிந்ததும்
முடிவில் கேவிக் கேவி
அழுதிருப்பாய்
உன் நினைவுக்குள்
வந்திருக்கும் என்
திக்கும் காலும்
நொண்டும் வாயும்...
கொடைக்கானல்
போர்வை குளிரத் தொடங்குகிறது
உன் நினைவுகளால்
போர்த்த தொடங்குகிறேன் என்னை
உன் உடம்பின் சூடைவிட
எனக்கான உன் அன்பின் சூடு
உன்னதமானது
நிலவும் சூரியனும்
கண்ணுக்குப் புலப்படாமல்
சூட்சமமாக கவிதைகள் தருகிறது
நீயில்லாத இந்த நாட்களில்
யாதுமான உன்னை பார்த்துக் கொண்டிருக்கிறேன்
வாழ்ந்து தொலைக்கிறேன்
நடிப்பின் உச்சக்கட்ட வரையறையில்
உணர்ச்சிமிக்க ஒரு வாழ்வு வாழ
என் புலன்களில் ஒன்றை
இழத்தல் இப்போது அத்தியாவசியமாகிறது.
கனிவு
என் பின் வைக்கப்படும்
விளக்குகள் தரும்
நிழல்களின் பிரம்மாண்டம்
அச்சம் தருவதாக
அவள் கூறினாள்
என்னால் இடமாறவியலாது
விளக்குகளை இடமாற்றச் சொன்னேன்
அவள் விளக்குகளை
வைத்தாள்
சற்று தூரமாக
இருந்த திசையிலேயே...
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|