தலையங்கம்
இந்திய சமூகத்தின் அதிகார அமைப்பில் தற்பொழுது மூன்று நகைச்சுவை கதாபாத்திரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவர்கள் பண்ணுகின்ற சேட்டைகள் நகைச்சுவைகள் கலந்ததாகவும், அருவருப்பு நிறைந்ததாக அபத்தாமனதாக இருக்கின்றது.
1. சேது சமுத்திர திட்டத்திற்காக ராமேஸ்வரம் கடலில் இருப்பதாக கூறப்படும் ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு ஒன்று பிறப்பித்த நீதிபதி ஒ.பி.ஷா தனது தனிப்பட்ட கருத்தாகவும் ஒன்றை பதிவு செய்திருக்கிறார். அவரின் தனிப்பட்ட கருத்து ராமர்பாலம் எனக் கூறப்படும் அமைப்பு இயற்கையாக உருவான அமைப்பு என்றாலும் அதனை இடிக்கக் கூடாது. பெரும்பாலான மக்களின் நலனுக்கான திட்டங்களுக்காக இத்தகைய நினைவுச் சின்னங்களை இடிக்கலாம் என்றால் தாஜ்மஹாலை இடிக்க முடியுமா?
விஷம் தடவப்பட்ட கருத்துக்களை நீதிபதி வெளிப்படுத்தி இருக்கிறார். இராமர் தொடர்பான புராணக் குறியீடுகள் இந்திய சமூகத்தை சென்ற முப்பது ஆண்டுகளில் எவ்வளவு தூரம் சிதைத்திருக்கிறது என்ற சிந்தனை எதுவுமின்றி தன் தனிப்பட்ட கருத்தை இவ்வளவு வெகுளித்தனமாக அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். அதுவும் தாஜ்மஹாலை துணைக்கு அழைத்துக் கொண்டு. தாஜ்மஹால் முகலாய மன்னன் ஒருவனால் உருவாக்கப்பட்டது. அவனது காதலின் வெளிப்பாடு அது. கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும், கோடிக்கணக்கான பணமும் அதில் செலவழிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் மீறி இந்தியக் கட்டிடக் கலை வரலாற்றின் மிகச்சிறந்த குறியீடு தாஜ்மஹால். இந்தியாவில் கட்டிடக்கலை எவ்வளவு உயர்ந்த தொழில் நுட்பத்தில், அழகியலில் இருந்தது என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அது. மேலும் அது கண்ணுக்கு தெரிகிற அடையாளம். ராமர் பாலம் அப்படிப்பட்டதல்ல.
2. இந்திய முதல் குடிமகள் பதவிக்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி இடது 7 கட்சிகளின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் பிரதிபாபாட்டிலின் திருவாய் மலர்ந்தருளல்கள் நமக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மற்றுமொரு நகைச்சுவை கதாபாத்திரம். இந்திய ஜனாதிபதியாக கிடைக்கிற விடுகிறது என்ற சந்தோஷத்தையும் சங்கடத்தையும் தந்திருக்கிறது.
தனக்கு விசுவாசமாகவும், கூட்டணி கட்சிகளுக்கு ஏற்புடையதாகவும் என்ன ஒருவரை ஜனாதிபதி வேட்பாளருக்கு காங்கிரஸ் கட்சி தேடியபோது கிட்டத்தட்ட ஐந்துபேர் பரிசீலனையில் இருந்து பின்பு பெண் ஒருவர் என்ற நிலையில் அவரசரமாக கிடைத்தவர் பிரதிபாபாட்டீல். ஏற்கனவே பர்தா உடைமுறை பற்றிய (முகலாய மன்னர்களுக்கு பயந்து போடப்பட்ட உடைதான் பர்தா என்ற) அவரின் அரைவேக்காட்டுத்தனமான கருத்து.
பல்வேறு தரப்பிலும் கடுமையான விமர்சனத்திற்கும், கண்டனத்திற்கும் உள்ளானது. இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு அபத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பிரம்மகுமாரிகள் அமைப்பில் அவர் பேசும் போது ‘தனக்கு உயர்பதவி கிடைக்கும் என்று அருள்வாக்கு கிடைத்தது என்று அங்கே கூறி இருக்கிறார்.
அவரை வேட்பாளராக முன் மொழிந்த தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மற்றும் இடதுசாரிகள், காங்கிரஸ் இவர்களின் மதச்சார்பற்ற எண்ணங்களுக்கு மாற்றாக அருள்வாக்கையும் ஜோதிடத்தை நம்புகிற இவர் விஞ்ஞான வளர்ச்சியை அறிவார்ந்த சிந்தனையை குடியரசுத்தலைவர் பதவிக்கான பல ஆண்டுகள் உழைப்பை பிரதிபலிக்காமல் பேசியிருப்பது. நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் திருளின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கும் ஒருவரிடமிருந்து வரலாற்றுப் புரிதலற்ற மதிப்பீடுகளும், அறியாமைக்கான சிந்தனைகளும் வெளிப்படுவதைப் பார்க்கும்போது சங்கடமாகவும் பயமாகவும் இருக்கிறது.
3. இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் எம்.கோபாலசாமி தான் பதவியிலிருக்கும் காலத்திற்குள் எல்லா வழிபாட்டுத் தலங்களுக்கும் இன்பச்சுற்றுலா சென்று வர திட்டமிட்டுள்ளார் என்று தெரிகிறது. கடவுளை நம்புவதும், அவரை வழிபடுவதும் அவரவரின் தனிப்பட்ட விசயங்கள். அதில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. அவர் வழிபடும் கடவுளுக்கு அல்லது கோவிலில் உள்ளவர்கள் வந்திருருக்கும் தான் யார்? எந்த சாதியைச் சார்ந்தவன் என்பதை அடையாளப்படுத்த சட்டையில்லாமல், தெரிய சுயசாதி அடையாளத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் கோவிலுக்கு வெளியில் வந்து அதே சுயசாதி அடையாளம் வெளியே தெரிய தான் பொறுப்பு விகிக்கும் தேர்தல் ஆணையம் சார்ந்த கருத்துக்களை தங்களோடு பகிர்ந்து கொள்வது கொஞ்சமும் நேர்மையுடைய செயல் அல்ல. இவர் பொறுப்பு வகிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே இப்படி வழிபாட்டுத் தலங்களுக்கு வெளியே சுயசாதி அடையாளம் வெளித்தெரிய பேட்டி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். மிகவும் கண்டனத்துக்குரியது.
இந்திய அரசின் செயல்பாட்டை நாம் மதச்சார்பற்ற தன்மையில் செயல்படுவதாக சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிகாரத்தின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள், மந்திரி பிரதானிகள் இவர்களின் செயல்பாடுகள் மதநம்பிக்கைகள் சார்ந்தும், சுயசாதி அடையாளம் சார்ந்துமே இருக்கின்றன.
சமூகத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகிவிடும், சமயப் போர்வையில் செயல்பாடு உள்ளவர்களோடு ஒட்டி உறவாடுவது, அவர்களுடைய விழாக்களில் பங்கேற்பது. அவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் கூட்டத்தை முறைப்படுத்துவதும், அவர்களின் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் சில சமயங்களில் அது வழிகாட்டுதல்களாக அமைந்துவிடுகிற ஆபத்து தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இந்திய மதச்சார்பற்ற தன்மைக்கு எதிரானது மட்டுமல்ல. ஆபத்தானதும் கூட.
- நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|