சிரிப்பு தரும் சிந்தனைகள்
சுடசுடச்சொல் - சுடும்படி சொல்லாதே
நீலம் மதுமயன்
சொல் என்னும் ஆயுதத்தின் கூர்மை தெரியாமல் அதை பயன்படுத்தினால், அது வீசியவனுக்கும் ஆபத்தை விளைவிக்கும். உன்னிடமிருந்து வெளிப்பட்ட எந்த சொல்லுக்கும் எக்ஸ்பரிடேட் என்ற ஒன்று கிடையாது. அது வில்லில் இருந்து வெளிப்பட்ட அம்மைப்போல, தாக்குதலை முடித்துவிட்டு வலியாகத் தங்கிவிடும் என்பதை நினைத்துப் பேசு.
சுடச்சுடச் சொல்லி நீ சுறுசுறுப்பானவன் என்பதை பதிவு செய்வதை விட, சுடும்படி சொல்லாத சுவைஞன் எனறு பெயரெடுக்கப் பார். சிலர் உடனுக்குடன், சுடச்சுடப் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசரத்தில் கேட்பவனுக்கு சூடு போட்டு விடுவார்கள். நாவினால் சுட்ட வடுவின் வலி சுடு பட்டவர்களுக்குத்தான் தெரியும். சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறிவதில்லைதானே. சுடச்சுடச் சொல்லும் சொற்கள் உங்கள் சுறுசுறுப்பையும், அறிவின் வீச்சையும், தாங்கி வரலாம். நெருப்புக் கற்களைத் தாங்கி வந்து தாக்கிவிடக் கூடாது.
எதற்கெடுத்தாலும் அவசரப்பட்டு அடுத்தவருக்கு முன்பாக சுடச்சுடச் சொல்லி நகைச்சுவையால் அதிரவைத்து சிரிப்பவர்களும் உண்டு. சுடும்படிச் சொல்லி நகைச்சுவையால் அழ வைப்பவர்களும் உண்டு. நகைச்சுவை அடுத்தவரை அழவைக்கும் ஆயுதமல்ல. சிரிப்பால் அதிர வைக்கும் ஆயுதம்.
மாற்றிப் பயன்படுத்துவது மனிதத்தை ஏமாற்றுப் பாதைக்கு அழைத்துச் சென்றுவிடும்.
ஆசிரியர் வகுப்பறையில் மாணவர்களைப் பார்த்து, “ஒரு கோழி ஒன்பது முட்டைகள் போட்டன. அதில் ஒரே ஒரு முட்டை மட்டும் வாத்து முட்டை. இதிலிருந்து உனக்கு என்ன தெரிகிறது?” - என்று கேட்டார். யோசித்துப் பதில் சொல்ல நெடுநேரம் ஆகும் என்று எண்ணி இருக்கையில் ஒரு மாணவன் எழுந்து, “சார், அந்த கோழிக்கு நடத்தை சரியில்லண்ணு தெரியுது”- என்றான்.
சுடச்சுடச் சொன்னாலும் சுடும்படிச் சொல்லவில்லைதான்.
தமிழாசிரியர் வகுப்பில் இலக்கணம் நடத்திக் கொண்டிருந்தார். ஆண்பால் பெண்பால் வேறுபாடுகள் குறித்து சுவையாகச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். “தம்பி, அன் என முடிந்தால் அது ஆண்பால். கந்தன், கடம்பன், வேலன், ராமன், மாதவன், மணியன் என்னும் பெயர்கள் எல்லாம் அன் என முடிகிறதைப் பார்த்தாயா? எனவே அன் என முடிந்தால் அது ஆண் பால்” - என்று கூறி வாயை மூடுவதற்குள் ஒரு மாணவன், “அய்யா அப்படிண்ணா சிம்ரன் ஆண்பாலா?- என்று சுடச்சுட நகைச்சுவைகளை சுட்டெடுத்து பரிமாறினான்.
சுடச்சுடச் சொன்னாலும் இதுவும் சுடும்படிச் சொல்லப்பட வில்லைதான். இப்படிச் சொல்வதில் ஏற்றம் இருக்குமே தவிர, ஏமாற்றமிருக்காது.
ஆங்கில ஆசிரியர் ஆங்கில மாதங்களை வரிசைப்படுத்தி சொல்லி விட்டு, ‘டேய் முதல் மாதம் ஜனவரி, இரண்டாம் மாதம் பெப்ரவரி, இப்படியே போனா பத்தாவது மாதம் என்ன வரும்?”- என்று கேட்டுவிட்டு தலை நிமிர்வதற்குள், “டெலிவரி சார்”- என்றான். எல்லாரோடும் சேர்ந்து அவரும் நகைச்சுவைத் தேரை இழுத்தது நன்றாகத்தான் இருந்தது. நிலை நிறுத்தத்தான் நெடு நேரமாயிற்று.
இதுபோல் எத்தனை நகைச்சுவைகளை சுடச்சுடப் போட்டாலும் மென்று ரசிக்கலாம். ஏனெனில் இவை சுட்ட நகைச்சுவையே தவிர கடும் நகைச்சுவை இல்லை.
மாமா ஒருவர் சிங்கப்பூரில் இருந்து வந்திருந்தார். நெடுநாட்களுக்குப் பிறகு வந்ததால் அவர் அந்த இளைஞனோடு பேசிக்கொண்டிருந்தார். அவனும் ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தான், அவரும் அவரது அனுபவங்களை அவனுக்கு பக்குவமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
“டேய் நான் அஞ்சு வருசத்துக்கு முன்னால வெறும் டவுசரோடு சிங்கப்பூருக்குப் போனேன், இப்ப அஞ்சு லட்சம் வச்சிருக்கேன்”- என்றார். உடனே அவன், “அஞ்சு லட்சம் டவுசர வச்சி என்ன பண்ணுவீங்க மாமா?”- என்றான். அவ்வளவுதான் சிரிப்பில் சிந்தனை ஆவி பறந்தது. அவர் அஞ்சு லட்சம் என்றது பணத்தைத்தான் என்பது புரிந்தும் சுடச்சுட வாரிப் போட்டதால் சுவையாகத்தான் இருந்தது.
சுடச்சுடச் சொல்லி சுவையேற்றும் நகைச்சுவைகளால் எப்போதும் சூடாகும் வாய்ப்புகள் குறைவு. ஆனால் நேராகச் சொல்லும் போது சூட்டை அமத்திச் சொன்னாலும் அது வேகமாகப் பத்திக் கொள்ளும்.
மேடையில் ஒரு பேச்சாளரை உட்கார வைத்துவிட்டு அவரை வரவேற்க வந்தவர், “இவர் மிக நன்றாகப் பேசுவார். சிரிப்பும் சிந்தனையும் கலந்து பேசுவார். நல்ல குரல் வளம்”- என்று புகழ ஆரம்பித்ததும் பேச்சாளருக்கு கைகால் புரியவில்லை. மீண்டும் தொடர்ந்த அவர், “அது மட்டுமல்ல அடுக்கு மொழியிலும் பேசுவார் என்று நான் கேள்விப் பட்டிருக்கின்றேன். இவர் பேசுவதை எத்தனை மணி நேரம் என்றாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஆனால் காதுகளை மட்டும் பொத்திக் கொள்ள வேண்டும்”- என்றரே பார்க்கலாம்.
இது சுடச்சொன்ன சுடு சொல் என்பதை மறந்து விடக்கூடாது. இதிலும் சிரிப்பு எழலாம். ஆனால் அதற்குள்ளும் ஒரு தணல் ஆறாத வடுவை உண்டாக்கி விடும்.
வகுப்பில் ஆசிரியர், “ஒரு மிகச் சிறந்த அறிஞர் பெயர் சொல்லு”- என்று கேட்டதும் மாணவன் எழுந்து, “சார் நீங்க தான் சார்”- என்றான். உடனே அவர், “அது சரி, இனி ஒரு மிகச்சிறந்த பொய் சொல்லு”- என்றார். உடனே அவன் தாமதமின்றி, சுடச்சுட, “சார் நான் இப்ப சொன்னதுதான்”- என்று சுட்டெடுத்து விட்டான்.
மனம் புண்படும் படி பேச முடியவில்லை என்றாலும், மனம் புண்படாமல் பேசப் பழகுவது உயர்ந்தது
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|