தலையங்கம்
வெற்றி பெறுமா - தந்திர விளையாட்டு?!
ஆசிரியர்
இந்திய அமெரிக்க நாடுகளிடையேயான அணுவிசை ஒப்பந்தம் முழுமை பெறுவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் உருவாகிவிட்டன. இந்த ஒப்பந்தத்தில் மூன்று முக்கிய கூறுகள் இருக்கின்றன. 1. அணுசக்தியை இந்தியா ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். 2. இந்தியா தன்னுடைய அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுவிசை ஏஜென்சி பார்வையிட அனுமதிக்கவில்லை. 3. இந்திய அணுவிசை திட்டங்களுக்கு தேவையான உபகரணங்களையும் தொழில் நுட்பங்களையும் அமெரிக்க வழங்கும்.
இந்த இடத்தில் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்வோம். இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானுக்கு எதிராக அணுகுண்டை முதன் முதலில் பயன்படுத்திய நாடு அமெரிக்கா. இந்தியா இதுவரையிலும் எந்த நாட்டுக்கெதிராகவும் அணுகுண்டை பயன்படுத்தியதில்லை. வல்லரசு நாடுகள், வளரும் நாடுகள் என்ற பாரபட்சம் காட்டப்படுவதால் சர்வதேச அணுவிசை ஏஜென்சியில் கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்து வந்தது. இந்திரா காந்தி இதில் உறுதியாக இருந்தார். இப்போது இந்த உறுதி தகர்கிறது. அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்க இருக்கக்கூடிய அணுமின் உதவி என்பது செறிவூட்டப்பட்ட யுரேனியம். அமெரிக்காவில் யுரேனிய விற்பனைச் சந்தை மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதை தூக்கி நிறுத்த இந்தியா போன்ற புதிய சந்தைகள் அமெரிக்க முதலாளிகளுக்கு தேவைப்படுகின்றன. இந்தியா பியூசன் டெக்னாலஜி முறையில் தனக்குத் தேவையான அணுமின் மூலப்பொருட்களை தன்னிறைவோடு தயாரித்து வந்திருக்கிறது. இப்பொழுது அமெரிக்காவிடமிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குவதன் மூலம் முழுக்க முழுக்க அமெரிக்காவை சார்ந்திருக்கக்கூடிய ஒரு நிர்பந்தம் உருவாகப் போகிறது.
சுதந்திர இந்திய வரலாற்றின் எந்த காலகட்டத்திலும் அமெரிக்கா இந்தியாவின் நம்பகமான நண்பனாய் இருந்ததில்லை. நேரு தொடங்கி நாம் கண்டு வரும் உண்மை இது. பிஜேபி ஆட்சியின் போதுதான் அமெரிக்காவை நோக்கி இந்திய குதிரைகள் வேகப்பாய்ச்சல் எடுத்து ஓடின. இப்பொழுது மன்மோகன் சிங் ஆட்சியில் தறிகெட்டு ஓடுகின்றன. கிட்டத்தட்ட அமெரிக்காவின் ஓர் அங்கமோ இந்தியா என்ற எண்ணம் தோன்றியிருக்கிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியாவுடனான உறவை வளர்த்துக் கொள்வதில் அதற்கு சில நீண்ட கால திட்டங்கள் இருக்கின்றன. ஆப்கானில் அதனுடைய தளம் தக்கவைக்கப்படுவது, ஈராக், ஈரான் போன்ற நாடுகளோடு அதனுடைய இராணுவ நடவடிக்கைகளை செயல்படுத்துவது. இவற்றுக்கு இப்போது உள்ள சூழ்நிலையில் பாகிஸ்தானை விடவும் இந்தியாவே அதற்கு உதவியாக இருக்கும் என்று நினைக்கிறது. ஈராக் யுத்தத்தின் போது அமெரிக்க போர் விமானங்கள் இந்திய தாழ்வாரங்களில் இருந்து பறந்ததையும் அமெரிக்க இந்திய படைகளின் கூட்டுப் பயிற்சிகள் இந்திய மண்ணில் அரங்கேறியதையும் இந்திய பெட்ரோல் கிடங்குகளிலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் தங்கள் இரைப்பைகளை நிரப்பிக் கொண்டதையும் நாம் அறிவோம்.
அது போல இந்த வட்டாரத்தில் சீனா ஒரு பெரும் சக்தியாக உருவாகி வருகிறது என்ற செய்தி அமெரிக்காவுக்கு நல்ல செய்தி அல்ல. சீனா, ரஷ்யா, இந்தியா இந்த நாடுகளுக்கு இடையிலான உறவுகள் பலப்படுவதையும், ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயுகள் இந்தியாவுக்குள் வருவதையும் அமெரிக்கா அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ளாது. அதனால் தான் மணிசங்கர் அய்யர், நட்வர் சிங் போன்ற அமைச்சர்கள் தூக்கி வீசப்பட்டார்கள்.
இன்றைய சூழலில் இந்தியா, தந்திரமான நடவடிக்கை போல ஒரு பக்கம் அமெரிக்காவுடன் அணு ஆயுத ஒப்பந்தம், இன்னொரு பக்கம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து தகுதி, இன்னொரு புறம் சீனா, ரஷ்யா நாடுகளுடன் நல்லுறவு, ஈரானில் இருந்து எரிவாயு என்று தன் செயல்திட்டத்தை வைத்திருக்கிறது. இந்தியாவின் இந்த தந்திர விளையாட்டு வெற்றி பெறுமா?
-எஸ். ராஜா ஹஸன், ஆசிரியர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|