தலையங்கம்
தேவை ஜனநாயக அணுகுமுறை
நிறுவனர் எஸ். ராஜா ஹாசன்
குடியரசு தின கொண்டாட்டங்கள் இந்தியாவின் மாநில, மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இந்தியத் துணைகண்டத்தின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் வெடிகுண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தன. பிரிட்டனின் காலனித்தளையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் விடுதலைப் பெற்று இந்தியா என்னும் தேசம் நிலவியல் அரசியல் ரீதியாக உருவாக்கம் பெற்றது. அதனைத் தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் உருவாகின.
வாழ்வியல், அரசியல், மொழியியல், சமூக நிலையில் பன்முகத் தன்மை கொண்ட, பண்பாட்டு பின்புலங்களைக் கொண்ட வெவ்வேறு நிலப்பரப்புகள் இந்தியா என்னும் கூட்டரசு குடையின் கீழ் ஒன்றுபட்டன. மொழிவாரியாக இந்திய மாநிலங்கள் உருவாகி அதன் ஐம்பதாவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் மாநிலங்கள் தோறும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த ஐம்பதாண்டு கால இந்திய கூட்டாட்சி வரலாறு சிறப்பாக இருந்ததா? இந்தியா என்னும் தேசத்சை இதுவரை ஆட்சி செய்த மய்ய அரசுகள் மாநிலங்கள் சார்ந்து என்ன விதமான அணுகுமுறைகளை மேற்கொண்டன என்பது எல்லாம் இன்று நம்முடைய மீள் பரிசீலனைக்குரிய ஒன்றாக இருக்கிறது.
ஒரு காலத்தில் தமிழகத்தில் ஒலித்த தனித் தமிழ்நாடு குரல், காஷ்மீரில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிற குரல்கள், எண்பதுகளில் பஞ்சாபில் ஒலித்த காலிஸ்தான் குரல்கள், மணிப்பூரில், திரிபுராவில், அஸ்ஸாமில், நாகலாந்தில் இன்னும் வடகிழக்கு மாநிலங்களில் ஒலிக்கின்ற பிரச்சனைகள் குறித்து மத்தியிலே ஆளுகின்ற மய்ய அரசுகள் என்றாவது கவலை கொண்டதுண்டா?
வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் நமக்கு கவலையைத் தருகின்றன. ஆயுதந்தாங்கிய வன்முறையை நாம் நிராகரிக்கிறோம். அரை நூற்றாண்டு காலம் ஜனநாயகத்தின் திசைவழிகளில் பயணப்பட்டு வந்திருக்கிற நாம் வன்முறையின் வாசல்கள் அடைபட வேண்டும் என்று விரும்புகிறோம். அதேவேளையில் காஷ்மீரில், அஸ்ஸாமில் இன்னும் வடகிழக்கு மாநிலங்களில் இளைஞர்கள், மாணவர்கள், வேலைவாய்ப்பற்றோர் ஆயுதந்தாங்கி நிற்பதற்கு எது காரணம் என்று நாம் யோசித்தோமா?
நேபாளத்தில், பாலஸ்தீனத்தில், லெபனானில், இலங்கையில் என எல்லா தேசங்களிலும் ஆயுதந்தாங்கிய போராளிகளோடு அந்த நாடுகளின் அரசாங்கங்கள் உட்கார்ந்து பேசுகின்றன. நோபளத்திலும், லெபனானிலும், பாலஸ்தீனத்திலும் போராளிகள் ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு அமைச்சரவையில் பங்கேற்கிறார்கள். ஏன் இந்தியாவில் அது சாத்தியமில்லாமல் போகிறது. ராஜீவ் காலத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஜனநாயகப் பாதைக்கு திரும்பி, மய்ய அரசிலும் பங்கேற்ற அஸ்ஸாமியர்கள் மீண்டும் ஆயுதந்தாங்கி போராடுகிறார்கள். முதலில் வங்கதேசத்திலிருந்து வந்த வங்கதேச முஸ்லிம்களை மட்டுமே எதிர்த்தவர்கள் இப்பொழுது இந்தி பேசுகிறவர்கள் அனைவரும் அஸ்ஸாமை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார்கள். இந்திய ஆட்சியாளர்கள் பல்வேறு காலகட்டங்களில் அஸ்ஸாமியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதா? அஸ்ஸாமியர்கள் ஏமாற்றப்பட்டார்களா?
வங்காளிகள் உள்ளிட்ட அஸ்ஸாம் மண்ணுக்கு வெளியே உள்ளவர்கள் அஸ்ஸாமில் குடியேறியதால் அஸ்ஸாமியர்களின் தனித்தன்மையும், பொருளாதார வாய்ப்புகளும் சிதைக்கப்படுவதாக உச்சநீதி மன்றத்தை அஸ்ஸாமியர்கள் அணுகியபோது உச்ச நீதிமன்றம் அதை ஒப்புக் கொண்டு 1951ஐ ஓர் அலகாக வைத்து 1951-க்குப் பிறகு குடியேறிய வெளிமாநிலத்தினரை அஸ்ஸாமை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஆணையிட்டது. அது நடைபெறவில்லை. அதன் பின்னர் 1971ம் ஆண்டை மறு அலகாகக் கொண்டு வரையறை செய்யப்பட்டது. அதுவும் நடைபெறவில்லை.
இதுபோன்ற தொடர் ஏமாற்றங்கள் அஸ்ஸாமிய இளைஞர்களை வன்முறை நோக்கித் தள்ளுகின்றன. மணிப்பூரில் அந்த மக்கள் மணிப்பூர் மாநிலத்தில் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்கும் சந்தேகப்படும் யாரையும் எந்த விசாரணையும் இன்றி சுட்டுக்கொல்லும் சிறப்புச் சட்டத்தை (Armed to Forces Special Protection Act) திரும்பப் பெற வேண்டும் என்று போராடுகின்றனர். அஸ்ஸாமிலும் இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. காஷ்மீரிலும் இருக்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். வடகிழக்கு மாநிலங்கள் பெரும்பாலானவற்றில் இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்தச் சட்டத்தில் பழிவாங்கப்பட்டதில் சமீபத்தில் பெரிய துர்சம்பவமாக பங்கஜம் மனோரமா இந்திய ராணுவத்தால் மணிப்பூரில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
எனவே மய்ய அரசு இந்த மாநிலங்களின் பிரச்சினைகளை ஜனநாயக ரீதியில் அணுக வேண்டும். தேசீய இனப்பிரச்சனைகள் கூர்மைப் பெற்றுவரும் நிலையில் இந்திய இறையாண்மையின் உறுதிக்கு ஜனநாயக நடைமுறையே உகந்ததாகும் என்பதை மய்ய அரசு எப்போது ஏற்கும்?
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|