படைப்பாளியை அவமதிக்கும் எஸ்.ராமகிருஷ்ணன் மீதான பதிவு
களஞ்சியம்
வெகுசனம்-தீவிரம் என்ற எல்லைகளை உடைத்துப்போட்டு விட்டு நவீனம் தாண்டி எழுத்துக்கள் எல்லா தளங்களிலும் ஊடுபாயும் காலமிது. தீவிரம், உன்னதம், என்று பேசி அலைந்த நவீன எழுத்தாளர்கள் வெகுஜன இதழ்களிலும், வெகுஜன திரைப்படங்களிலும் இன்று பயணிக்கிறார்கள். இவர்கள் நவீனத்துவ சிறுபத்திரிகை உலகம் குவித்துப் போட்டிருக்கும் சில குப்பைகளையும் சுமந்து கொண்டே பயணிக்கிறார்கள். நவீனத்துவவாதிகள், முதலில் கோட்பாட்டு ரீதியாக இடதுசாரிகளைத் திட்டினார்கள். அதில் திருப்தி கிடைக்காத போது தங்களுக்குள் திட்டித் தீர்த்தார்கள். அதிலும் உச்சம் தொடமுடியாதபோது ஒருவரையொருவார் தாக்கத் தொடங்கினார்கள். சக சிறுபத்திரிகைகளை காவல்துறையை வைத்து மிரட்டி காலி செய்தார்கள். இத்தகைய மனோபாவம் கொண்ட குப்பைகளைப் ‘பெருக்க’த் தொடங்கிய நவீனத்துவ பிதாமகர்கள் போய் சேருமிடம் சேர சிஷ்யவாரிசுகள் இப்பொழுது ‘பெருக்கு’கிறார்கள். தமிழில் நவீனத்துவ சிறுபத்திரிகை உருவாக்கிய மோசமான கலாச்சாரம் இது.
தமிழ் மரபில் நவீனத்துவத்திற்கு முன்பு இதுபோன்ற கலாச்சாரத்தைப் பார்க்க முடியவில்லை. முகத்துக்கு நேராக ‘நன்னா பேசினேள்’ என்று சொல்லிக் கொண்டே முகத்துக்கு பின்னாடி ‘அவாள் இருக்காளே’ என்ற குசும்பு செய்கின்ற அக்கிரகாரத்து கலாச்சாரத்தின் நீட்சி இது. இதன் இன்னொரு வெளிப்பாடுதான் ‘சண்டக்கோழி’ திரைப்படத்தில் குட்டி ரேவதியின் பெயர்குறித்து அவரை அவமரியாதைச் செய்யும் காட்சியும் வசனமும் இடம் பெற்றது. இலக்கியப் பரப்பில் மட்டுமே நடைபெற்ற இந்த அசிங்கங்களை திரைப்படத்துக்கும் கொண்டு சேர்க்கும் புண்ணியத்தை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். அவரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|