தமிழகம் - பாரம்பரியச் சின்னங்கள்
கவிதையாய் மிளிரும் நீலகிரி மலை ரயில்
அரவிந்தகோஷ் – தமிழில்: வி. கீதா
தென்னை மரத்தில் வேக வேகமாக ஏறி உச்சிக்கு சென்று அனாயாசயமாக தேங்காய்களை பறித்து போடுவதை பார்த்திருக்கிறீர்களா? உயரமான இந்த மரத்தில் கொஞ்சம்கூட சறுக்காமல், சரசரவென்று தொழிலாளர்கள் ஏறுவதை பார்க்கும் பொழுது பிரமிப்பு ஏற்படுகிறது. இதே மாதிரி பிரமிப்புதான் நீலகிரி மலை ரயில்பாதையை பார்க்கும் பொழுதும். மேட்டூரில் இருந்து குன்னூர் வரையிலான இந்த தொன்மையான மீட்டர்கேஜ் பாதையில், நான்கைந்து பெட்டிகளையுடைய சின்னஞ்சிறு ரயில் மலையேறுவது கவிதையை ஒத்த அழகுதான்.
நீராவி எஞ்சினையுடைய இந்த ரயில் ஒன்றுக்கு 12 என்ற செங்குத்து விகிதத்தில் மலையேறுகிறது. அதாவது சமதளத்தில் 12 அலகுகள் பயணம் செய்வதற்கு ஒப்பான ஒரு அலகு விகிதத்தில் செங்குத்தான மலையில் இந்த ரயில் பயணிக்கிறது, கீழ்நோக்கி கொஞ்சமும் சறுக்கிவிடாமல். சில பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தாலும், ரயிலை மேல்நோக்கி இழுப்பதற்கும், மெதுவாக கீழே செலுத்துவதற்கும், இந்த நீராவி எஞ்சினுக்கு குறிப்பிட்ட அளவு செயல்திறன்தான் உள்ளது. அப்புறம் எப்படி தடுமாறாமல் ரயில் செல்கிறது? தென்னை மரத்தின் மீது ஏறி இறங்கும் நுட்பம்தான் இங்கேயும். பெயர் மட்டும்தான் மாறுபடுகிறது.
நீலகிரி நீராவி எஞ்சின், வழக்கமான மீட்டர்கேஜ் ரயில் பாதைக்கானது அல்ல. இது ‘எக்ஸ்’ எனப்படும் சிறப்பு பிரிவாகும். இதன் அடியில், கனமான பற்களையுடைய சக்கரம் அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பற்சக்கரம் ‘பினியன்’ எனப்படுகிறது. இரண்டு தண்டவாளங்களுக்கிடையே பொருத்தப் பட்டுள்ள தொடர்ச்சியான நாடாவைப் போன்ற இரும்பு பிளேட்டில் இருசக்கரம் இறுக்கமாக பதிகிறது. இந்த தொடர் ‘பிளேட் ரேக்’ எனப்படுகிறது. பாதை வளைவுகளிலும் ரயில் சீராகச் செல்வதற்கு ஏற்றவாறு இவ்விரண்டும் அமைக்கப்பட்டுள்ளன. நீராவி எஞ்சின் குன்னூரை நோக்கி செல்லும் பொழுது, ரயிலை இழுக்க முடியவில்லையென்றால் ரயில் உடனடியாக நின்றுவிடும்படி அமைக்கப் பட்டுள்ளது. இந்த எஞ்சின் ரயிலின் ஒரு புறத்தில் மாத்திரமே எப்பொழுதும் இருக்கும். அதாவது ரயில் மலையில் ஏறும் பொழுதும் எஞ்சின் மட்டும் மேட்டுப்பாளையத்தை நோக்கியே இருக்கும். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் பிரேக்கை இயக்குவதற்காக ரயில்வே பணியாளர்கள் இருப்பார்கள். இதனால் ரயிலுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்படுகிறது.
45.88கி.மீ. நீளமுள்ள மேட்டுப்பாளையத்தையும், உதகமண்டலத்தையும் இணைக்கும் நீலகிரி மீட்டர்கேஜ் ரயில் பாதை யுனெஸ்கோவின் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலத்தில் இதற்காக அமைக்கப்பட்ட கல்வெட்டை மத்திய ரயில்வேதுறை இணையமைச்சர் ஆர்.வேலு திறந்து வைத்தார். ‘ஊட்டி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் உதகமண்டலம் 2,200மீ உயரத்தில் அமைந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் உள்ள டர்பன் நகரில் இந்த ஆண்டு நடைபெற்ற கூட்டத்தின் போது நீலகிரி மலை ரயில் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. டார்ஜிலிங் - ஹிமாலயன் ரயில் பாதைக்கு ஏற்கனவே உலக பாரம்பரிய சின்னம் அந்தஸ்து 1999ல் வழங்கப்பட்டது.
இமாச்சலப்பிரதேத்தில் உள்ள கல்கா - சிம்லா ரயில்பாதை, பதன்கோட் - ஜோகிந்தர்நகர் ரயில் பாதை மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள மாதேரன் லைட் ரயில்பாதை ஆகியவற்றை உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இணைக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவை மூன்றும் இரண்டு அடி கேஜ் ரயில் பாதைகளாகும். இன்றும் இயங்கி வருகின்றன.
ஆங்கிலேய அரசாங்கம், தங்கள் முதலீட்டில் ஆண்டுதோறும் 5ரூ திருப்பித் தரவேண்டும் என்று ரயில்வே நிறுவனங்கள் நிபந்தனை விதித்த ஒரு காலத்தில் இத்தகைய மலை ரயில் பாதையை எப்படி அமைக்க முடிந்தது? வைஸ்ராய் லிட்டன் பிரபுதான் இதற்கு முக்கிய காரணம். உதகமண்டலத்தில் அவர் கண்ட அற்புதமான மண்ணில் அழகான ஆங்கில மழைச்சாரல் தான் மலை ரயில் பாதைக்கு வழி வகுத்தது. உதகமண்டலம் என்று ஆங்கிலேயர்களால் உச்சரிக்க முடியாமல் அது ஊட்டியானது. ‘உதகமண்ட்’ என்பதன் பொருள் தோடர்களின் குடிசைக் கூட்டம். லிட்டன் பிரபு ஊட்டியின் அழகை வர்ணித்து எழுதியுள்ளார்.
ஊட்டியில் வழக்கமாக சுற்றுலாப் பயணிகள் பார்க்கும் இடங்கள் ரோஜாத் தோட்டம், ஏரியும் தான். ஆனால் தொட்டபெட்டா சிகரத்திற்கு அவசியம் நீங்கள் சென்று பார்க்க வேண்டும். நீலகிரி மலைத் தொடர்களின் அழகை கண்டுகளிக்க தொலைநோக்கியுடன் கூடிய கோபுரம், சிறுகடைகள், தோட்ட பசுமை மாறாத புத்தம் புது தேயிலை என்று மனதை ஈர்க்கும் விஷயங்கள் பல.
சில வருடங்களுக்கு முன்பு, மேட்டுப் பாளையத்தில் இருந்து ஊட்டி வரையிலான மலை ரயில் பாதையில் நீராவி எஞ்சினை அகற்றிவிட்டு மின்சார ரயில் எஞ்சினை இயக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. இதற்கு நீராவி எஞ்சின் நேசர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அம்முயற்சி கைவிடப்பட்டது. ஊட்டி மலை ரயில், தனது அன்றாட பயணத்தில் நீர் நிரப்புவதற்காக இடையில் நிற்கும். ஆனால் இது அந்த மலை ரயில் பயணத்தை ரசிப்பதற்கு தடையாக இல்லை. இந்த ரயில் பாதை 16 குகைகளை கடந்து செல்கிறது. இதில் 208 வளைவுகள் உள்ளன. இவற்றில் சில மிக செங்குத்தானவை. கனமழை பெய்யும் இந்த பகுதியில், ரயில் பாதையில் 250 பாலங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|