கட்டுரை
கடமையின் நிறம் இரத்தக்கறை
பிரேம்குமார்
ஹரியான மாநிலம் குர்காவோன் நகரில் ஹோண்டா கார் மற்றும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர்களில் சிலர் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து ஜுலை 25-ல் ஆர்ப்பாட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் ஜனநாயக உணர்வுள்ள மக்களை பதற்றமடையச் செய்துள்ளது.
தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கேயும் தாக்குதல் நடத்தி வெந்த புண்ணில் வேல்பாய்ச்சி மனிதாபிமானத்தை கேள்விக்குறியாக்கி உள்ளனர்.
பிரிட்ஷஷ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஜாலியன் வாலாபாக் கொலைவெறித் தாக்குதலோடு ஒப்பிட்டுப் பேசப்படுகிற இந்த காக்கித் தாண்டவத்தில் 700 பேருக்கு மேல் காயமடைந்ததாக ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால் ஹரியானா முதல்வர் நவீந்தர் சிங் ஹுடா அதை மறுக்கிறார். 93 தொழிலாளர்களும் 30 காக்கி சீருடையினரும் மட்டுமே காயமடைந்துள்ளனர் என்பது அவரது பதில்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களைப் பார்க்கச் சென்ற அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் ஹரியானா காவல்துறை கடமையின் நிறம் இரத்தக்கறை என்பதை எல்லோருக்கும் உணர்த்தியுள்ளது.
இதே ஹரியானா காவல்துறை தான், இந்த மாநிலத்திலுள்ள ஜாஜர் என்ற இடத்தில், ‘கோமாதாவை கொன்று தின்றுவிட்டார்கள்’ என்று 5 தலித்துகள் கொலை செய்யப்பட்டபோது, நீதியை நிலை நாட்ட பசுவைக் கொன்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த வரலாற்றுப் பெருமை மிக்கது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலக் காவல்துறையின் பெருமை அணிசேர்க்கும் வகையில் ஹரியானா மாநிலத்தில் மாறிவரும் அரசுகளும் சாதனை படைத்துள்ளன. 1996-ல் பன்சிலால் அரசு 700 பெண்கள் உட்பட ஏராளமான தொழிலாளர்களை எஸ்மா சட்டத்தின் கீழ் 70 நாட்கள் சிறையிலடைத்ததற்கு ஈடான நிகழ்வு வேறு எந்த மாநிலத்திலும் இதுவரை நடந்தேறவில்லை. தொழிற்சங்கங்களை பதிவு செய்ய மறுப்பதில் முதலிடம் வகிக்கின்ற தொழிலாளர் நலத்துறை செயல்படுவதும் இங்கேதான்.
மாநிலத்தின் அரசும் காவல்துறையும் தனக்கே உரிய பெருமைகளைக் கொண்டிருப்பது போல் தான் குர்காவோன் நகரமும் சமூகவியலுக்கு தக்க எடுத்துக்காட்டு. டெல்லியில் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் பங்களாக்களாகவும், பண்ணை வீடுகளாகவும், வணிக வளாகங்களாகவும் மாற்றியமைக்கமேட்டுக்குடியினர் தேர்வு செய்துள்ள சொர்க்கபூமி. வீடுகளையும் , விளை நிலங்களையும் விற்றுவிட்டு வேலையில்லாதவர்களாய் அலையும் மண்யீணணின் மைந்தர்களைப் பற்றி யாருக்கும் கவலை இல்லை. நாளுக்கு நாள் வனப்புக் கூடி வரும் புதிய குர்காவோனில் அனைத்து சௌபாக்கியங்களும் நிலவ தனிக்கவனம் செலுத்துவதில் ஆளும் தரப்பு ஒரு போதும் தவறிழைத்ததில்லை. இந்த ‘புதிய குர்காவோன்’ வாசிகளுக்கு, ‘பழைய குர்காவோனில் ஒரு வேளை உணவுக்குக் கூட உத்திரவாதம் இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களில் அடிமை வேலை செய்யும் சாதாரணத் தொழிலாளர்களைப் பற்றியோ, அவர்களது வியர்வை கலந்த மண்தான் காங்கரீட் வனமாக மாறி இருக்கிறது என்ற வரலாறு பற்றியோ அக்கறை கிடையாது. எனவே தான் ‘தொழிலாளர்கள் தூண்டியதால் தான் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர்; காவலர்களும் மனிதர்கள் தானே!’ என்று மின்னஞ்சல் வழி வாசகர் கடிதம் மனநிலை அவர்களுக்கு இருக்கிறது.
இந்த பன்னாட்டு நிறுவனத்திற்கு எதிரான தொழிலாளர்களின் போராட்டம் இந்தியாவில் குவிந்து கொண்டே இருக்கும் வெளிநாட்டுக் கழிவுகளின் வரத்து குறைந்துவிட காரணமாக அமைந்து விடக்கூடாது என்று கவலைப்படுகின்ற, ‘இந்திய தொழிலதிபர்கள் கூட்டமைப்பின்’ தேச பக்தியை பாராட்ட வார்த்தைகளே கிடையாது. அதனுடைய தலைவர் ‘தாராளமய பொருளாதாரத்திற்கு ஏற்றபடி தொழிற் சட்டங்களில் தளர்வுகளை இந்தத் தருணத்தில் யோசிக்க வேண்டும்’ என்று தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். ‘கடந்த 13 ஆண்டுகளாக திறந்த வெளி பொருளாதாரத்திற்காக சேவை செய்து கொண்டு தானே இருக்கிறோம். ’
குர்காவோன் அடக்குமுறையின் போது கூடவே இருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் எம்.பி. குருதாஸ் குப்தாவும் அவருடைய கூட்டாளிகளான இடது சாரிக் கட்சிகளும் தான் தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்க்க வைப்பதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றனர். ‘கொஞ்சம் பொறுங்கள்; எங்களுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கட்டும்’ என்ற ரீதியில் ‘மன்மோகமாமிக்ஸ்’ பேசுகிற அரசியல் தலைவர்களாய் தான் பன்னாட்டு மூலதனம் கொஞ்சமாவது இந்தியாவுக்கு வருகிறது என எழுதுகின்ற மேதைகளுக்கு குறையேதுமில்லை.
அதனால் தான் ஜப்பான் நாட்டுத் தூதர் யானோக்கி, ‘‘இந்த சம்பவம் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இந்தியா பற்றிய தவறான தோற்றத்தை உருவாக்கும்’’ என்று சொன்ன போது, முசாரபுக்கு ஒன்றுக்கு நான்கு பதில் பேசுகிற நீள் நாக்குகளெல்லாம் குடலுக்குள்ளே சுருங்கிக் கொண்டன. வேடிக்கை என்ன வென்றால், ஜப்பான் நாட்டில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் தொழிற் சங்கம் அங்கே யானை பலமிக்கது. அங்கே இப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் ஹோண்டா நிறுவனத்தின் தலைமை மேலாளர்கள் பலரது வேலை பறிபோயிருக்கும் என்பது தான் உண்மை.
குர்காவோன் ஒரு நிகழ்வல்ல. அது ஒரு மாற்றத்தின் துவக்கம்.
புதியகாற்று இதழில் வெளியான கட்டுரை
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|