கட்டுரை
மறுமலர்ச்சி அளிக்கும் அணைக்கும் கரங்கள்
இமரா
1979ம் ஆண்டு. பணிப்பாதுகாப்புக் கேட்டு கல்லூரிப் பேராசிரியர்கள் ஆயிரக்கணக்கில் சிறைசெல்ல நேர்ந்தபோது 15 நாட்கள் சிறையில் இருந்தவர்தான் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர். டாக்டர். எஸ்.டி.நோவா.
கொடூரமான குற்றவாளிகள் நிறைந்த சிறையில் சாதாரண குற்றம் புரிந்த புதிய குற்றவாளிகள் சிறைக்குள் சென்றதும், அந்தப் பயங்கரமான குற்றவாளிகள் இவர்களுடன் சேர்ந்து பழகுவதால் அவர்கள் கெட்டுப் போய் இன்னும் அதிக குற்றங்கள் செய்ய ஏதுவாகிறது. இதனைக் கண்ட நோவா தமிழக அரசுக்கு இதுபற்றி எழுத, அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அளித்த அரசு உத்தரவுப்படி அணைக்கும் கரங்கள் அமைப்பு துவங்கப்பட்டது.
தமிழகச் சிறைகளில் தொடங்கப்பட்ட இந்த பணி இந்தியச் சிறைகளுக்கும் அந்தமான் தீவுகளில் உள்ள சிறைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. சிறைகளில் இருக்கும் கைதிகளுக்கு ஆரம்பக் கல்வி, உயர்கல்வி, பல்கலைக்கழக அஞ்சல் வழி கல்வித் திட்டத்தின் மூலம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பல்வேறு வகையான தொழில் நுட்பக் கல்வியையும் பேராசிரியர்களின் உதவிகளோடு கொடுக்கப்படுகிறது. சிறைக்கைதிகளின் குழந்தைகளுக்கு இலவசமாக பள்ளிக் கட்டணம், யூனிஃபார்ம், புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்வகுதன் மூலம் சிறைக்கைதிகள் மனந்திருந்த முற்படுவது சாத்தியமாகிறது.
காந்தீய சிந்தனை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதில் நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்ச்சி அடைந்துள்ளனர். பல்கலைக்கழக துணைவேந்தர்களை சிறைக்குள் அழைத்துச் சென்று பட்டமளிப்பு விழாக்கள் பலவற்றை நடத்தியுள்ளனர். இது உலகிலேயே நடைபெறாத ஒரு பெரிய சேவைத் திட்டம். இதன் மூலம் கல்லூரிப் பேராசிரியர்களாக, தொழில் வல்லுநர்களாக, வழக்கறிஞர்களாக விடுதலை பெற்ற பலர் ஆயிரக்கணக்கில் சமுதாயத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். விடுதலை பெற்றவர்களின் மறுவாழ்வுக்கான குடும்பம், தொழில் உள்ளிட்ட அனைத்திலும் வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. சிறையில் மருத்துவ முகாம்கள், கலை இலக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு சிறையில் இருப்பவர்களின் திறன்கள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
வங்கி அதிகாரிகளை சிறைக்குள் அழைத்துச் சென்று கைதிகள் விடுதலையானதும் சொந்தமாக தொழில் துவங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருந்தி விடுதலை பெற்ற சிறைக் கைதிகளுக்கு சைக்கிள், தையல் மிஷின்கள், கிரைண்டர்கள், அயர்ன் பாக்ஸ்கள் வழங்கி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான சிறை நண்பர்கள் தங்கள் தொழில்களை நேர்மையான முறையில் நடத்தி சம்பாதித்து வருகிறார்கள்.
“குற்றங்கள் குறைய வேண்டுமானால் குற்றவாளியே திருந்த வேண்டும்” என்பது தான் நிதர்சனமான உண்மை. அதை ‘அணைக்கும் கரங்கள்’ அமைப்பு செயல்படுத்துவது பாராட்டுக்குரியது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|