தலையங்கம்
மேற்குக்கு எதிரான கலகக்குரல்
ஆசிரியர்
மக்கள் எப்போதும் மார்க்ஸை மேற்கோள் காட்டி (மதம்) ‘மக்களின் ஓபியம்’ (போதைப் பொருள்) என்று சொல்வார்கள். அதற்கு முந்தைய வாக்கியத்தை யாரும் மேற்கோள் காட்டுவதில்லை. அந்த வாக்கியம் ‘‘மதம் ஆன்மா அற்ற உலகின் ஆன்மா’’ என்கிறது. 1978 -ம் வருடத்தில் இஸ்லாம் ஈரானிய மக்களின் போதைப் பொருளாக அமையவில்லை. மாறாக ஆன்மா அற்ற உலகின் ஆன்மாவாக அமைந்தது என்று நாம் சொல்லலாம்.
- பூக்கோ.
1980-களில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களிடம் உரையாடிய அமெரிக்க அதிபர் தன்னுடைய பக்கத்தில் அமர்ந்து இருந்வர்களை இப்படி அறிமுகம் செய்கிறார். ‘‘இவர்கள் முஜாஹிதீன்கள் - அமெரிக்க விடுதலையைப் பெற்றுத் தந்த ஜெபர்சன் போன்ற அமெரிக்க தந்தையர்க்கு நிகரானவர்கள்’’என்றார்.
முஜாஹிதீன்களை அமெரிக்க தந்தையரோடு ஒப்பிட்ட அதிகார உதடுகள் இப்பொழுது அவர்களை சர்வதேச பயங்கர வாதிகள் என்று அடையாளப் படுத்துகிறது. ஆப்கானிஸ்தானின் காபூல் தெருக்களில் இருந்து சோவியத் படைகளை விரட்டியடித்திட அமெரிக்காவாலும் ஐரோப்பிய நாடுகளாலும் நிதியும், ஆயுதமும் தாராளமாய் வழங்கப்பட்டு வளர்த்து விடப்பட்டவர்கள் முஜாஹிதீன்கள். இன்று அமெரிக்க, ஐரோப்பிய காவல் துறை பாகிஸ்தானின் மதரசாக்களில் முஜாஹிதீன்களை தேடி அலைகிறது. நம் ஊடகங்கள் பாகிஸ்தான் மதரசாக்களை பயங்கரவாதிகளை உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகளென சிறப்புச் செய்திகளை பரப்புகின்றன. ஆனால் இந்த மதரசாக்களுக்கும் முஜாஹிதீன்களுக்கும் கச்சாப் பொருட்களையும்கட்டுமானங்களையும் வழங்கியது அமெரிக்க ஐரோப்பிய அதிகார வர்க்கம் என்ற வரலாற்றை திட்டமிட்டு மறைக்கப் பார்க்கின்றன.
ஆசிரியர் குழு
ஆசிரியர்
ஏ.இ.எஸ். ராஜா ஹஸனபர் அலி
நிர்வாக ஆசிரியர்
ஹாமீம் முஸ்தபா
உதவி ஆசிரியர்கள்
தமிழ்ப்பிரியன்
ம. ராஜசேகரன்
ஷிஃபா காம்ப்ளக்ஸ்,
முதல் மாடி,
142, வடக்கு வெளிவீதி,
யானைக்கல்,
மதுரை - 625 001.
தொலைப்பேசி: 0452- 5371514
[email protected]
தனி இதழ்: ரூ. 10
ஆண்டுச் சந்தா: ரூ.100
ஆயுள் சந்தா: ரூ.1000
|
வரலாறுகள் மாறி இருக்கின்றன. அரபு நாடுகளில் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கி விடப்பட்டவர்கள் அதே அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக திரும்பி இருக்கிறார்கள். ஒசாமா தொடங்கி சதாம் வரை வரலாறு இதைத் தான் சொல்கிறது. முஜாஹிதீன்களை பாகிஸ்தான் அரசுதன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவே இன்னும் பதினைந்து வருடங்களாவது ஆகும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
1970 களிலிருந்து இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரான ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் நடவடிக்கைகளை தங்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளாகவே முஸ்லிம்கள் கருதுகிறார்கள். ஈரான், பாலஸ்தீனம், ஆப்கான், ஈராக் என தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களுக்கும் ராணுவத்திற்கும் இலக்காகி வருகின்றன. இஸ்லாமிய நாடுகளின் அதிகாரத் தலைமைகள் ஐரோப்பிய நாடுகளோடு சமரசங்கள் செய்து கொண்டாலும் சராசரி முஸ்லிம் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான தீவிரமான மனநிலையை கொண்டிருக்கிறான். ஒசாமாவை ஒழித்தல், சதாமை கொல்லுதல் என்ற ஐரோப்பிய அமெரிக்க நாடுகளின் குரல்களின் பின்னால் முஸ்லிம்களை அழிக்கின்ற சதி இருப்பதாகவே முஸ்லிம்கள் உணர்கிறார்கள். (பார்க்க அட்டவணை) ஏகாதிபத்தியத்தையும், வல்லரசுகளையும் எதிர்க்கின்ற கோட்பாடுகள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில் ஐரோப்பிய நாடுகளின் அட்டுழியங்களை எதிர்க்கின்ற ஆயுதமாக மதம் இங்கு தொழிற்படுகிறது.
ஈராக்கில் விதைத்ததை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் சொந்த மண்ணிலும் ஈராக்கிலும் அறுவடை செய்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் வர்த்தகக் கட்டிடம், ஸ்பெயினின் சுரங்க ரயில் பாதை, தெற்கு, மத்திய, மேற்கு, கிழக்கு என லண்டனின் பல்வேறு பகுதிகள் அடுத்தடுத்து தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றன. லண்டன் குண்டு வெடிப்புக்கு காரணமானவர் என்று அவசரமாக சுட்டுக் கொல்லப்பட்டவரும் லத்தீன் அமெரிக்கர் என்று தெரிகிறது. லண்டன் குண்டு வெடிப்பை நாகரீகங்களின் யுத்தமென்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறுகிறார். பின் காலனிய நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் உருவாகி இருக்கும் இந்த ஆயுதப் போராளிகளை எதிர்கொள்ளத் தெரியாமல் ஐரோப்பிய உலகம் திணறுகிறது.
பிரிட்டிஷ், ஐரோப்பிய நாடுகளின் கீழ் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் இருந்த போது காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் நடைபெற்றன. இப்பொழுது காலனி ஆட்சிக்கு பிந்தையச் சூழலில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான போராட்டம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்கு உள்ளேயே அவர்களின் மர்ம ஸ்தானத்தில் நடைபெறுகிறது.
எதிரிகள் இல்லாத உலகில் அதிகாரங்களுடன் சஞ்சரிக்க விரும்பும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்றாம் உலக மக்களின் குறிப்பாக முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த போராளிகளின் இந்தக் கலகக் குரல் நீண்ட நாள்களுக்கு இம்சை செய்யும்.
-ஆசிரியர்
கொல்லப்பட்ட ஈராக் மக்கள்
மார்ச் 2003 லிருந்து இன்று வரைக்கும் ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா-பிரிட்டன் படைகளால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 24,860. ஈராக்கின் 12 முக்கிய நகரங்களில் நிகழும் 10 இறப்புகளில் 7 பேர் இந்த ஆக்கிரமிப்புப் படைகளால் கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை பிரிட்டனை அடிப்படையாகக் கொண்ட ‘ஈராக் பாடி கவுண்ட்’ எனும் அமைப்பு வெளியிட்டிருக்கிறது.
-தி ஹிந்து (27.07.2005)
முக்கிய நகரங்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை
மோகல் 735
தீக்ரித் 312
சமாரா 255
பாலூஜா 1874
கபாலா 929
நஜாப் 784
நசிரியா 984
பாஸ்ரா 704
கிர்குக் 613
பகுபா 304
பாக்தாத் 11,264
ஹில்லா 456
|
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|