நூல் அறிமுகம்
“தமிழ்ஒளி கடிதம்”
ச.செந்தில்நாதன்
கடந்த ஐம்பது ஆண்டு கால தமிழ் இலக்கிய வரலாற்றில் சற்று இருட்டடிப்புக்கு ஆளான முக்கிய படைப்பாளிகள் இருவர். ஒருவர் தமிழ் ஒளி, மற்றொருவர் விந்தன். இந்த இரண்டு பேருமே சமீப காலமாக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படு-கிறார்கள் என்பது ஓர் ஆரோக்கியமான நிலையாகும். இதில் விந்தன் பொதுவுடைமை இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளாதவராக இருந்த-போதும், இவருடைய சிறுகதைகள் தொழிலாளி வர்க்கத்தின் மூச்சை உள்வாங்கி இருந்தன. கவிஞர் தமிழ் ஒளி அப்படி அல்ல. பொதுவுடைமை இயக்கத்-தோடு இருந்தவர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்-பட்டிருந்த காலத்தில் போற்றத்தக்க பங்களிப்பைச் செய்தவர்.
““மாற்று”“ பதிப்பகம் சில முக்கிய ஆவணங்-களைப் பதிவு செய்து நூலாக வெளியிட்டிருக்கிறது. இந்த நூலில் தமிழ் ஒளியின் ஒரு கடிதமும், அப்போது இருந்த அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கையும் இடம் பெற்றுள்-ளன. இவை முக்கியமான ஆவணங்கள். முனைவர் வீ. அரசு தமிழ் ஒளி கடிதம் குறித்து சில குறிப்புகள் கொடுத்துள்ளார். அதில் சில புதிய தகவல்கள் இருக்கின்றன. தமிழ் ஒளி அவருடைய நண்பர் பாவலர் பால சுந்தரத்திற்கு எழுதியக் கடிதம், அவருடைய கையப்பத்தில் அப்படியே வெளிவந்-திருக்கிறது. இது வெறும் கடிதம் அல்ல. தமிழ் ஒளி மார்க்சியத்தையே இதில் நண்பர்களுக்கு அறிமுகப்-படுத்துகிறார். சுருக்கமாக மிகத் தெளிவாக, சுலப-மாகப் புரிந்துகொள்ளும் வகையில் அவருடைய நடை அமைந்திருக்கிறது. ஒரு எடுத்துக்காட்டு பொருள் முதல்வாதம் பற்றி அவர் குறிப்பிடுவதைப் பாருங்கள்.
““உலகின் தோற்றம்தான் கருத்தின் தோற்றம். உலகில்லாமல் கருத்தில்லை, அதாவது பொருள் இல்லாமல் எண்ணம் இல்லை, ஜடப்பொருள்களின் பிரதிபலிப்பே நம் கருத்து.”“ தமிழ் ஒளியின் இக்கடிதத்-தைப் பிரசுரமாக வெளியிட்டால் மார்க்சியத்தை அறிந்துகொள்ள முயலும், புதியவர்கள் லாபம் அடை-வார்கள்.
இந்த நூலில் உள்ள இன்னொரு முக்கிய ஆவணம் அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கை. அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ஒரு கிளையாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டு வருவதை இதில் உள்ள ஆவணத்தின் வழியாக அறிய-லாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை அமைக்க தமிழ்ஒளி எவ்வளவு முயற்சி எடுத்திருக்-கிறார் என்பதை இந்த நூலின் வழியே அறிய முடியும்.
தமிழ்மொழி பற்றியும், தமிழர் பண்பாடு பற்றியும் அப்போது அமைக்கப்பட்ட சங்கம் அக்கறை கொள்ளவில்லை என்பதை இதைப் பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடியும். நியாயமான மொழி உணர்வை முறையாக அங்கீகரிக்காமல், அதை வெறி போல் பார்க்கும் பார்வை அந்நாட்களில் இருந்ததல்லவா? திராவிட இயக்கத்தின் மீது அப்படி ஒரு பார்வை இருந்ததல்லவா? அதன் விளைவாக பாரதிக்குப் பின் பாரதிதாசனை அங்கீகரிப்பதில் அன்று தயக்கம் இருந்ததல்லவா? அதன் பின்ன-ணியை இந்த ஆவணங்களின் மூலம் உணர முடியும்.
வெறி என்ற சொல்லைக் கூட அன்று பயன்படுத்-தவில்லை. ஆங்கிலச் சொல்லான ““ஷாவனிஸம்”“ என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்குச் சமமான தமிழ்ச் சொல்லைக்கூட அவர்கள் அப்போது தேட முடியவில்லை. ““ஷாவனிஸம்”“ பற்றிச் சொல்லப்-பட்டிருப்பது இதுதான். ““பிற வருணத்தினர் பிற இனத்தினர், பிற தேசத்தினர் மீது துவேஷப் பிரச்சாரம் செய்தல் ““ஷாவனிஸம்”“ இப்படி அந்த அறிக்கை விளக்கம் செய்கிறது. இக்கருத்திற்கு யாரும் மாறுபடப் போவதில்லை. ஆனால் மொழியும் பண்பாடும் இதற்குள் அடங்கி விட்டதோ என்ற கேள்வி எழாமல் போக முடியுமா? அதேசமயம் அன்றைய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள் தான் பண்டைய கலைகளுக்கும், இலக்கியங்களுக்கும் உண்மையான வாரிசுகள்”“ என்று குறிப்பிடப்பட்-டிருப்பது எவ்வளவு சரியான மதிப்பீடு என்பதையும் பார்க்க முடிகிறது. முன்பிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சட்ட திட்டங்-களைப் பார்க்கும்போது சங்கத்தின் நோக்கத்தில், இலக்கியத்-தில் புகுந்துள்ள ““ஷாவனிஸத்தை எதிர்த்துப் போராடுதல் என்று குறிப்பிட்டிருப்பது திராவிட இயக்கத்தின் போக்கை மனத்தில் கொண்டே சொல்லப்பட்டிருக்கிறது என்று கொள்ளலாம். இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி 13.11.1949 அதாவது தி.மு.க. பிறந்துவிட்டது.
தமிழ் ஒளி பற்றி அவருடைய நண்பர் பாவலர் பாலசுந்தரம் சொல்லியுள்ள குறிப்புகளும் இந்த ஆவண நூலில் இடம் பெற்றுள்ளன. முற்போக்கு எழுத்தாளர்களின் பரிணாம வளர்ச்சியைத் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இந்த ஆவணம் அவசியம் தேவைப்படும்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|