நூல் அறிமுகம்
புத்தகங்கள் மனதில் வெளிச்சமேற்றும்
என்.வரதராஜன்
நம்முடைய முன்னோர்கள் இந்த ஊருக்கு மேலூர் என்று எதற்காக பெயர் சூட்டினார்கள் என்று தெரியாது. ஆனால் இன்றைக்கு இளைஞர்களின் முயற்சியால் அருமையான நூலகம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம் இந்த ஊர் மேலூராக மாறியுள்ளது.
நூல்கள் தரும் அறிவு வெளிச்சத்தில் இந்த ஊர் மென்மேலும் மேலூராக மாறும் என்பதில் ஐயமில்லை. வெளிநாட்டில் பிழைப்புக்காக சென்றுள்ள இளைஞர்கள் தங்களது ஊரையும், மக்களையும் மறக்காமல் இந்த நூலகத்தை அமைந்துள்ளனர். இந்தச் சிறப்புமிகு நூலகத்தை திறந்து வைத்தது எனது அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாகும்.
நான் சிறையிலிருந்தபோது ரஷ்ய இலக்கிய நூலான உண்மை மனிதன் கதையைப் படித்தேன். ஓர் இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். அப்போது பாசிசத்திற்கு எதிரான சோவியத்த்தின் வீரயுத்தம் துவங்குகிறது. இதில் ஒரு படைவீரனாக இந்த இளைஞனும் பங்கேற்கிறான். எதிரிகளின் தாக்குதலில் இரண்டு கால்களையும் இழக்க நேருகிறது. அழகான இளைஞனாகச் சென்றவன் ஊனமுற்றவனாக வீடு திரும்புகிறான்.
அப்போது அவன், தனது இளம் மனைவியிடம், நீ வேண்டுமானால் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று கூறுகிறான். இதனால் கோபடைந்த அவனுடைய மனைவி, நீ இந்த மகத்தான தேசத்திற்காக உன்னுடைய கால்களை இழந்திருக்கிறாய். உன்னை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். உன்னோடு சேர்ந்து வாழ்வதன் மூலம் இந்தத் தேசத்திற்கான பங்களிப்பில் நானும் இணைகிறேன். இப்படிப் பேசுவதை இனிமேல் நிறுத்திக்கொள் என்று அந்த பெண் கூறுகிறாள்.
இந்தக் கதையில் காதலும் உண்டு. வீரமும் உண்டு. தேசமும் உண்டு. இத்தகைய கதைகள் இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும்.
இடதுசாரி சித்தாந்தத்தை இலக்கியத்தை பரப்புகிற பல்லாயிரக்கணக்கான நூல்கள் உள்ளன. இவற்றை தேடிப்பிடித்து இளைஞர்கள் படிக்க வேண்டும். இத்தகைய புத்தகங்கள் வாழ்க்கையின் மனிதர்களை உருவாக்கும்.
நூலகங்கள் இல்லாத ஊரே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அதற்கு முன்னோடியாக அமைந்துள்ள மேலூர் என்ற இந்தக் கிராமத்தை இதற்காக தங்களது வியர்வையை பணமாக்கி அனுப்பியுள்ள இளைஞர்களை நெஞ்சார பாராட்டுகிறேன்.
(புதுக்கோட்டை மாவட்டம் மேலூரில் ரூ.5 லட்சம் செலவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காரல் மார்க்ஸ் நூலகத்தை திறந்து வைத்து என். வரதராஜன் உரையாற்றிய பகுதி)
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|