வாசித்ததில் நேசித்தது
பாம்பு என்றால்?
பாம்பு என்றால்?,
ச. முகமது அலி,
வெளியீடு: இயற்கை வரலாறு அறக்கட்டளை,
பொள்ளாச்சி 3,
பக்:72, ரூ.50
பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். பாம்பு என்றால் முதலில் அடித்துக் கொன்று விட்டுத்தான் மறுவேலை என்று நினைக்கிறது இன்றைய சமூகம். இந்தப் பூமியில் எல்லா உயிர்களைப் போல பாம்புகளும் வாழ உரிமையுண்டு. மனிதர்களை கொல்ல வேண்டும் என்பதற்காக அவை கடிப்பதில்லை. தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பயத்தினால் செய்யும் தற்காப்பு செயல்தான் என்று நூலாசிரியர் ச. முகமது அலி விளக்கி, பாம்புகளைப் பற்றிய பல சுவாரசியமான விஷயங்களை இந்நூலில் பகிர்ந்து கொள்கிறார். பல்லிகளிருந்தே பாம்புகள் பரிணமித்துள்ளன. மழைக்காலம் தான் பாம்புகளுக்கு கொண்டாட்டம். அப்போதுதான் தவளை போன்ற இரைகள் கிடைக்கும். நம் நாட்டில் கண்டறியப்பட்டுள்ள 270 பாம்பு வகைகளில் நான்கு இனப் பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ளவை. பாம்புகள் அதிர்வலைகள் மூலம் செயல்படும். மகுடியின் அசைவிற்கேற்ப அசையுமே தவிர மகுடியின் இசைக்கு ஏற்ப அல்ல. நமது நாட்டில் 20% தானியங்களை அழிக்கும் எலிகள் போன்ற கொறி விலங்குகளை பாம்புகள் உணவாக உண்பதால் விவசாயிகளின் நண்பனாக பாம்பு இருக்கிறது. பாம்பின் விஷம் கூட மருத்துவத்திற்காக சில நோய்களைத் தீர்க்க பயன்படுகிறது.
பாம்புகளின் ஆயுள்காலம் 20 ஆண்டுகள். பாம்புகளின் விஷம் புரதசத்துமிக்க ஒரு சுவையற்ற நீர்மம். பாம்பு தனது தலையைவிட 5 மடங்கு பெரியதாக உள்ள இரையை கூட விழுங்க முடியும். பாம்புகளுக்கு உதடு, கண், இமை, காது, நாக்கு, முடி, வேர்வைச் சுரப்பி கிடையாது. ஒரு நாளைக்கு 4 எலிகள் 2 லிட்டர் நெல்லைத் தின்றுவிடும். ஒரு இரவில் ஒரு பாம்பு 4 எலிகளை பிடித்துவிடும். பாம்புகள் உண்மையில் பறப்பதில்லை. காற்றில் சறுக்குகின்றன. பாம்புகள் பால் குடிப்பதில்லை. முட்டை உண்பதில்லை. உலகிலேயே பெரிய பாம்பு தென்அமெரிக்காவின் அனகொண்டா. சராசரி 25 அடி உலகிலேயே நீளமான பாம்பு ஆசிய மலைப்பாம்பு. இதன் நீளம் சராசரி 30 அடி. இப்படியாக பாம்பைப் பற்றி பல விஷயங்களை 14 தலைப்புகளில் கொடுத்து, பலவித பாம்பின் படங்களுடன், பாம்புக்கடிக்கு முதலுதவி செய்வது எப்படி என்று கூறுவதோடு பாம்புகளையும் வாழவிடுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார் ஆசிரியர் ச. முகமது அலி.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|