நூல் அறிமுகம்
ஒரு அரசியல் ஆவணம்
மதுக்கூர் இராமலிங்கம்
மாமனிதர் சுர்ஜித்,
என். ராமகிருஷ்ணன்,
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
சென்னை -18, ரூ. 40
இமயத்தின் முகடுகள் போல் கட்டப்பட்ட முண்டாசு; இறங்கி வரும் பனிநதி போன்ற வெண்தாடி; அறிவு மேகங்கள் அலைபாயும் பரந்த நெற்றி; கருணை யும் காருண்யமும் சுடர்விடும் விழிகள்; இதுதான் மாமனிதர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் தோற்றம்.
இந்திய ஜனநாயக அரசியல் வாழ்வில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்திய பெருமை சுர்ஜித்திற்கு உண்டு. குறிப்பாக, கூட்டணி ஆட்சி சகாப்தத்தின் தள நாயகராக அவர் விளங்கினார். அவரது வாழ்க்கை வரலாற்றை என்.ராமகிருஷ்ணன் "மாமனிதர் சுர்ஜித்" என்ற தலைப்பில் நூலாக எழுதியுள்ளார்.
விடுதலைப் போராட்டக் காலத்தில் துவங்குகிறது அவரது வீர வரலாறு. பகத்சிங்கை தந்த ஐந்து நதிகள் கொஞ்சிப் பாயும் பஞ்சாப் மாநிலம்தான் சுர்ஜித்தையும் தந்தது. ஏழு வயதிலேயே ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டத்தில் அவர் இணைந்தார். 14 வயதில் சீறிவரும் துப்பாக்கிக் குண்டுகளுக்கிடையே நீதிமன்றக் கட்டிடத்தில் ஏறி மூவர்ணக் கொடியை பட்டொளி வீசி பறக்கவிட்டார்.
திருமணம் முடித்த நாளன்றே சிறைச் சாலை கதவுகள் அவருக்கு திறக்கப்பட்டன. வெளிச்சமும், காற்றும் எட்டிக் கூட பார்க்க முடியாத தனிமைச் சிறையில் நான்கு மாத காலம் அவர் அடைக்கப்பட் டிருந்தார். அவரது 92 ஆண்டு கால வாழ்க்கையில் 10 ஆண்டுகள் சிறைக் கொட்டடியிலேயே கழிந்திருக்கிறது. 4 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்து இயக்கப் பணியாற்றியுள்ளார்.
1947ம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது பஞ்சாப் மாகாணமும், வங்கமும் இருகூறாக பிளக்கப்பட்டன. பிரிவினையின் வலியை, மதவெறித் தீயின் வெப்பத்தை நேரடியாக கண்ட வர்கள் சுர்ஜித்தும், ஜோதிபாசுவும். அதனால்தான் மதவெறியை எதிர்த்து எந்தவித சமரசமும் இல்லாமல், மதச்சார்பின்மையை உயர்த்திப்பிடிப்பதற்கான வியூகத்தில் இந்த இரு மாபெரும் தலைவர்களும் எப்போதும் முன்நின்றனர்.
சுர்ஜித்தின் உதடுகள் உதிர்க்கப் போகிற எதிர்பார்ப்பு தேசமே காத்திருந்த தருணங்கள் உண்டு. ஆனால், அவர் தம்மை எப்போதும் 'எளிய விவசாயி' என்று அழைத்துக் கொள்வதிலேயே பெருமைக் கொண்டார்.
இந்திய பொதுவுடைமை இயக்கத்தில் ஏற்பட்ட சித்தாந்தப்போராட்டத்தின் விளைவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவான போது கட்சியை உரு வாக்கி மகத்தான தலைவர்களில் ஒருவராக சுர்ஜித் திகழ்ந்தார். மேற்குவங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில் மார்க்சிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி அமை வதில் மட்டுமின்றி அவற்றை பாது காப்பதிலும் சுர்ஜித்தின் சரியாத உழைப்பும் கூர்த்த மதியும் பெரும்பங்காற்றின.
பஞ்சாப், காஷ்மீர் போன்ற மாநிலங்களில் பிரிவினைவாதம் தலைதூக்கிய போது அதை எதிர்த்து போராடுவதில் முன்நின்ற சுர்ஜித், அந்த மாநில மக்களின் இயல்பான கோரிக்கைகளை ஜனநாயக வழியில் தீர்க்க வேண்டுமென்று மத்திய - மாநில அரசுகளை வலியுறுத்தி போராடுவதிலும் முன்நின்றார்.
சோவியத் தகர் வை தொடர்ந்து, சோசலிச நாடான கியூபாவுக்கு இந் தியா முழுவதிலு மிருந்து ரூ.5 கோடி மதிப்புள்ள 10 ஆயிரம் டன் கோது மையை வசூலித்து அனுப்புவதில் சுர்ஜித் ஆற்றியப் பணி மனத்தானது. பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் இயக் கங்களோடு மார்க்சிஸ்ட் கட்சிக்கு உயிரோட்டமுள்ள தொடர்பை ஏற்படுத்தியதில் சுர்ஜித்திற்கு பெரும் பங்கு உண்டு. இதனால்தான், கட்சியின் எந்தவொரு தலைவரும் இந்தளவுக்கு செய்ததில்லை என்று வியந்துரைக்கிறார் பிரகாஷ்காரத்.
மத்தியில் காங்கிரஸ் அல்லாத, பாஜக அல்லாத மாற்று அரசுகள் அமைந்த போதெல்லாம் அதன் சூத்திரக் கயிறாக இருந்து செயல்பட்ட அரசியல் ஞானி அவர்.
இந்திய மண்ணுக்கு ஏற்ப மார்க்சியத்தை பொருத்து வதில் சுர்ஜித் மிகுந்த தனித்துவத்துடன் செயல்பட்டார். அவரது வாழ்க்கை வரலாறு என்பது ஒரு தனி மனிதனின் வரலாறு அல்ல. ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியக் குடியரசின் வரலாற்றில் ஒருங்கிணைந்த ஒரு பகுதி.
ஒவ்வொரு இளம் கம்யூனிஸ்ட்டும் படிக்க வேண்டிய வரலாற்று நூல் இது. அரசியலில் ஆர்வம் உள்ள எல்லோருக்கும் இது ஒரு அரிய ஆவணம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|