Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Puthakam
Puthakam Pesuthu Logo
ஜூலை 2009
உலக சினிமா வரலாறு 13
மறுமலர்ச்சி யுகம் : பை சைக்கிள் தீவ்ஸ் - அகமும் புறமும்
அஜயன் பாலா


நல்ல சினிமா எது என்பதில் உலகம் முழுக்க ஆயிரம் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒவ்வொருவர் பார்வையிலும் நல்ல சினிமாவுக்கு புதுபுது இலக்கணங்கள் காலம் தோறும் எழுதப்பட்டு வருகின்றன. ஒருவர் வாழ்வை படம் பிடிப்பது நல்ல சினிமா என்றால் இன்னொருவர் நல்ல கதையை சொல்வது நல்ல சினிமா என்றும், இன்னும் நல்ல காட்சி அனுபவத்தை தருவது, தொழில்நுட்பத்தில் செறிவாக வடிவம் கொண்டிருப்பது, காட்சி மொழி ஆளுமையை உள்ளடக்கியது காலத்தின் முகத்தை அப்படியே பிரதி எடுத்துதருவது என அவரவர் தமது ரசனைக்கு ஏற்ப நல்ல சினிமாவுக்கு விளக்கங்களை தந்துகொண்டிருக்கின்றனர். ஆனால் அதேசமயம் இவர்கள் அனைவரிடமும் உலகின் தலைசிறந்த சினிமாக்கள் பத்தை பட்டியலிடச்சொன்னால் அனைவரது பட்டியலிலும் இடம்பெறக்கூடிய ஒரே படமாக பைசைக்கிள் தீவ்ஸ் இடம் பிடிக்கும். இதுதான் அப்படத்தின் உலகபெருமைக்கு முக்கிய காரணம்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு வறுமையிலும் வேலையில்லா திண்டாட்டத்திலுமாக சிக்கி தவித்த இத்தாலிதான் இதன்களம். சைக்கிளை திருட்டு கொடுக்கும் ஒருவனது ஒருநாள் பொழுதை சொல்லும் கதை இறுதியில் வேறுவழியில்லாமல் அவனே திருடனாக மாறும் துர்ப்பாக்கியத்தை , வாழ்வின் அவலத்தை நம்முன் இறுதியில் நிறுத்துகிறது. இந்த எளிமையான, உலகின் எல்லா இண்டு இடுக்கிற்கும் பொருந்தக்கூடிய கதைதான் படத்தின் மிகச்சிறப்பே.உலகின் எந்த மொழி பேசினாலும் எந்த கலாசாரத்தில் வாழ்ந்தாலும் மனித மனம் ஒன்று என்பதை நமக்கு உணர்த்தும் இந்த கதையின் எதார்ததமும் காவியத்தன்மையும் படம் முழுக்க இயக்குனர் கொண்டுவர முயற்சித் செய்தது தான் இப்படத்தின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை காரணமாக அமைந்தது. நியோரியலிஸ அலையின் முக்கிய அச்சாணியாக கருதப்படும் திரைக்கதை ஆசிரியர் செஸாரே ஜவாட்டினிதான் இப்படத்திற்கும் காதாசிரியர். மட்டுமல்லாமல் படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகாவுடன் இணைந்து ஜவாட்டினி திரைக்கதையிலும் தன்பங்களிப்பை செலுத்தியிருக்கிறார்.இருவரும் ஒத்துபோனதற்கு அடிப்படைக் காரணம் இருவருமே தீவிர மார்க்சிய சிந்தனையாளர்கள். அன்று 1947களில் இத்தாலியின் நிலைமை மிக மோசமானதாக இருந்தது. அப்போதுதான் இரண்டாம் உலகபோர் நடந்து முடிந்த நிலை. முசோலினியின் தவறான போக்குகளால் தடுமாறிக்கிடந்த நாட்டில் பரவலாக அனைவரிடமும் மார்க்சிய சிந்தனை வலுப்பெற துவங்கியது. இதற்குமுன் கம்யூனிஸ்டுகளை தன் கறுப்பு சட்டை படையால் முசோலினி அடக்கி ஒடுக்கியிருந்த காரணத்தால் அறிவார்ந்த சமூகத்தினரிடம் கம்யூனிஸ சிந்தனைகள் அதிகமாக காணப்பட்டன. இவர்கள்தான் நியோரியலிஸ அலை உருவானதற்கே காரணம். அதிலும் கதாசிரியரான ஜவாட்டினி தீவிர மார்க்சிய ஆதரவாளர் இதனால்தான் தன் கதைகள் அனைத்திலும் மக்கள் அரசியலை நக்கலாக உயர்த்தி பிடித்தார். பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் கதை அவருக்கு கற்பனையில் தோன்றியதே தனிக்கதை.

ஒருநாள் பொழுது போகாத மாலைபொழுதில் ரோமன் கஃபே எனும் ஓட்டல் வாசலில் அமர்ந்தபடி காபி சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜவாட்டினி அப்போது ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்க்க சைக்கிளை திருடிக்கொண்டு ஓடும் ஒரு இளைஞனை ஒரு கூட்டம் துரத்திப் பிடிப்பதை பார்த்தார். திருடியவனின் முகம் மிகவும் பரிதாபமானதாக இருந்தது. அன்றுகாலையில்தான் தன் சைக்கிள் திருடு போய்விட்டதாகவும் தன் ஒரே சொத்து அதுதான் என்றும் எங்கெங்கோ தேடி அலைந்தும் கிடைக்காத காரணத்தால் வீட்டுக்கு போனால் மனைவிக்கு பதில் சொல்ல வேண்டிவருமே என பயந்து சைக்கிளை திருடியதாகவும் கூறி கூட்டத்தில் அழுதிருக்கிறான்.அதன் பிறகு அனைவரும் அவனை விட்டு விடுகின்றனர்.

இதனைப் பார்த்த பாதிப்பில் ஜவாட்டினிக்கு மின்னல் வெட்டாக மூளையில் ஒருகதை ஒன்று தோன்ற அந்த நிமிடத்தில்தான் உலகசினிமாவின் வரலாற்றில் ஒரு திருப்பம் நிகழ்ந்திருக்கிறது. உடனே வீட்டுக்கு அவசரமாக சென்று அக்கதையை எழுத உட்கார்ந்த ஜவாட்டினி நான்கே நாட்களில் தன் பங்கான திரைக்கதையை எழுதி முடித்திருக்கிறார். உடனே நெடுநாட்களாக கதையை கேட்டுக்கொண்டிருந்த இவரது நண்பரும் இயக்குனருமான டிசிகாவிடம் இக்கதையை கொடுத்திருக்கிறார். டி சிகா கதை பிடித்திருந்தாலும் அதில் முழு திருப்தியுறாமல் இவரது கதையை தன் நண்பரான லூயி பர்டோனியிடம் எடுத்துக்கூறி இதனை நாவலாக எழுதிதரும்படி கேட்க அவரும் எழுதி கொடுத்தபின் ஒரெஸ்டொ ட்யோன்கொலி, சுசோ செச்சிடி,கெரார்டோகெரார்டி, ஜெரார்டோ கியூரரிடி போன்றோருடன் இணைந்து திரைக்கதையை எழுதினார்.இருந்தும் தான் நினைத்த இறுதிவடிவம் வடிவம் கிடைக்காத காரணத்தால் மீண்டும் ஜெவாட்டினியிடம் திரைக்கதையை கொடுத்து மீண்டும் ஒழுங்கு படுத்திதரக் கூற அதன் பிறகு உருவான இறுதி வடிவத்தை வைத்துக்கொண்டு டிசிகா பல தயாரிப்பாளர்களிடம் ஏறி இறங்கினார். .நாடே வறுமையில் மூச்சுதிணறிக்கொண்டிருந்த போது படம் எடுப்பது என்பதே பெரிய காரியமாக இருந்தது.இறுதியில் அமெரிக்க தயாரிப்பாளர் ஒருவர் இப்படத்தை எடுக்க ஒத்துக்கொண்டார். உடன் ஒரு நிபந்தனை ஒன்றையும் வைத்தார். நாயகன் வேடத்துக்கு புகழ்பெற்ற ஹாலிவுட் நட்சத்திரமான கேரி கிராண்டை போடவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.ஆனால் டி சிகா மறுத்துவிட்டார். காரணம் நடசத்திரங்கள் தான் சொல்ல வரும் உணமைக்கு பொருந்த மாட்டார்கள் என எண்ணிணார்.

படத்தின் பட்ஜெட்டோ குறைவு. பார்த்தார் நண்பர் ஒருவர் .அவரே தயாரிக்க முன்வந்தார். தெருவில் போய்க்கொண்டிருந்த வேலையில்லாத சாதாரண ஆலைதொழிலாளியை அழைத்தார். டி சிகா. அவன் பெயர் லேம்ப்ரட்டோ மேக்னியோனி Lamberto Maggiorani அவனது முகம் நாயகனுக்கு கனகச்சிதமாக இருந்தது. அடுத்ததாக படத்தில் அடுத்த முக்கிய பாத்திரம் ரிசியின் ஏழுவயது மகன் ப்ரூனோ படு சுட்டியான பாத்திரம், இவனையும் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த போது வளைத்துப் பிடித்தார். அவன்பெயர் என்ஸோ ஸ்டேலியோ Enzo Staiolaபின் இதர நடிகநடிகையர்களையும் இப்படியாக தேர்ந்தெடுத்தார். உடைகள் அனைத்தும் அவர்களுடையதே .திரைக்கதையில் காட்சிகள் ரோம் நகரின் எந்த முக்கிய பகுதிகளில் இடம்பெறுவதாக சித்தரிக்கப்பட்டிருந்ததோ அதே இடங்களுக்கு கேமராவை கொண்டுபோனார். அவரோ படத்தின் செலவை குறைத்தார் ஆனால் தரமோ உயர்ந்துகொண்டே இருந்தது.

மூன்றுமாதங்கள் இடைவிடாத படப்பிடிப்பு முடிந்து இறுதியில் படம் நவம்பர் 24 1948அன்று இத்தாலியில் வெளியாகியது. இப்படத்திற்கு முன்பே ரோஸலினியின் ரோம் ஓபன் தி சிட்டி நியோரியலிஸ அலையை துவக்கியிருந்தாலும் பை சைக்கிள் தீவ்ஸின் வெற்றி அதனை உலகம் முழுக்க கொண்டு போனது. எதார்த்தம் என்பது படத்தின் தோற்றத்தில் மட்டுமல்லாது படத்தின் சமூக பொருளாதார பின்புலங்கள் அனைத்திலுமாக காட்டியிருந்த விதம் தான் இதன் தனித்தன்மையை நிரூபிக்க கூடியதாக இருந்தது..

வேலையில்லாமல் வறுமையில் வாடும் அந்த காலகட்டத்து இத்தாலியின் வசூலை தன் துவக்க காட்சியில் காண்பிக்கும் வேலைவாய்ப்பு அலுவலகம், மற்றும் நாயகனது குடியிருப்பு வீடு ,வீட்டின் அறை,சைக்கிள் கடை,காவல்நிலையம் .குறி சொல்லுபவளின் வீடு.,மாதாகோயில் உணவு விடுதி திருடியவனின் வீடு,அவனது குடியிருப்பை சார்ந்த மனிதர்கள் என தொடர்ந்து காணப்படும் ஒவ்வொரு இடத்திலும் காட்சியும் காட்சியில் இடம்பெறும் மாந்தர்களும் நம்மை ௮ந்தந்த உலகத்திற்குள் கொண்டுசென்றுவிடுகின்றனர். காட்சி எந்த களத்துக்குள் நுழைந்தாலும் அங்கிருக்கும் அரசியல்கள் பின்புலத்தின் எதார்த்த தனமைக்கு வலு சேர்க்கின்றன.

படத்தில் குண்டுமணியளவுக்கு யாரேனும் தலைக்காட்டினால கூட அவர்கள் பாத்திரங்களாக சித்தரிக்கப்படுகின்றனர். சாத்தியப்பட்ட அளவில் அவர்களின் உலகத்தை சற்றே திறந்து காட்டி விடுகிறார் இயக்குனர். மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபத்திரங்களின் உளவியல் எதார்த்ததை வைத்துக்கொண்டு மிகப்பெரிய ஆய்வையே நாம் மேற்கொள்ளமுடியும். அதிலும் சைக்கிளை காணாமல் தந்தையுடன் தெருதெருவாக அலையும் ரிசியின் மகன் ப்ரூனோ வின் முகபாவங்களும் உணர்ச்சியை அவன் வெளிப்படுத்தியிருந்த விதமும் தேர்ந்த நடிகர்கள் அனைவரையும் விஞ்சி நிற்ககூடியது.தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் உளவியல் முரண்பாடுகளை ஆழமான வாசிப்புக்குட்படுத்தி அதனையே சுவாரசியத்துக்கான களமாகவும் பயன்படுத்திருக்கும் திரைக்கதையின் தொழில் நுட்பம் கூர்ந்த அவதானிப்பின் மூலமாக மட்டுமே நம்மால் உணரமுடியும்.திரைக்கதையை முழுவதுமாக உள்வாங்கிய ஒளிப்பதிவு கோணங்கள் நமக்குள் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்குகின்றன. படத்தொகுப்பை உள்வாங்கியபடி முன்பே எழுதப்பட்ட திரைக்கதை, ஒளிப்பதிவாளரின் கோணங்களுக்கு புதிய அர்த்தம் தரும் படத்தொகுப்பு, படத்தொகுப்பினுடைய வேகத்துக்கு அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஒத்திசைவான திரைக்கதையின் மவுனங்களை மீட்டெடுக்கும் இசைக்கோர்வை

இசைக்கோர்வைக்கு தொந்தரவில்லாத சப்த சேர்க்கை போன்றவைகளுக்கு இப்படத்தை மிகச்சிறந்த உதாரணமாக கொள்ள முடியும்.

1948ல் திரைப்படவிழாக்களில் பங்கேற்ற இப்படம் விமர்சகர்களையும் பார்வையாளர்களையும் ஒருசேர அசர வைத்தது. இத்தகைய நேர்த்தியான தொழில் நுட்பத்துடன் இதுவரை உலக சினிமா வரலாற்றில் திரைப்படம் எதுவும் வந்ததில்லை என விமர்சகர்கள் புகழ்ந்து எழுதினர். 1949ல் அமெரிக்காவின் ஆஸ்கார் விருது சிறந்த வெளிநாட்டு படமாக இத்தனை தேர்ந்தெடுத்து கவுரவித்தது.

இந்தப் படத்தின் பாதிப்பில் உலகம் மூழ்க ஓவ்வொருநாளும் பல இயக்குனர்களும் பல திரைப்படங்களும் வந்து கொண்டிருக்கின்றன. லண்டன் சென்ற போது இப்படத்தை பார்க்க நேரிட்ட நம் சத்யஜித் ரே அது உருவாக்கிய தாக்கத்தில் இந்தியாவுக்கு கப்பலில் திரும்ப வந்து இறங்குவதற்குள் தன் முதல் படமான பதேர் பாஞ்சாலியின் திரைக்கதையை எழுதிவிட்டார் என கூறுவார்கள். இந்தப் படத்தை சார்லின் சாப்ளின் எனும் மேதைக்கு தன் எளிய சமர்ப்பணம் என அறிவித்தார் இயக்குனர். சிறுவயதில் தான் பார்த்த அவருடைய கிட் திரைப்படம்தான் இப்படத்திற்கு பின்னாலிருந்து தன்னை இயக்கியிருப்பதாக டி சிகா வெளிப்படையாக௧ கூறினார்.

படத்தின் இயக்குனரான விட்டோரியா டி சிகா 1902 ல் இத்தாலியின் சோவா நகரில் பிறந்தவர். சினிமாவில் நடிகராக துவங்கிய இவரது வாழ்க்கை சடசடவென ஓர் உயரத்துக்கு சென்றது.சோபியா லாரன், ஜீனா லோலா பிரிகிடா போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்களுடன் நடித்தவர் 1940ல் ரோஸ் ஸ்கேர்லட் படத்தின் மூலமாக இயக்குனராக பரிணமித்தவர்.

ஷூ ஷைன் Shoeshine, 1946, மிராக்கிள் இன் மிலன் Miracle in Milan 1951 உம்பர்ட்டோ டி 1952 போன்றவை இவரது மிகச்சிறந்த படங்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com