உலகப் புத்தக தினம் - ஓர் வேண்டுகோள்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்று சொல்லப்படுகிற தமிழ்ச்சமுகம், தன் வரலாற்றோடு இணைந்த அச்சுப் பண்பாடு சமூக, பொருளாதார வரலாற்றை முறையாக பதிவு செய்யவில்லை என்றே சொல்லலாம்.
சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட மறுமலர்ச்சியிலும், அதனைத் தொடர்ந்து வளர்ந்த அறிவியல் சார்ந்த சிந்தனைகளிலும், அதனால் ஏற்பட்ட பொருளாதார மாற்றங்களிலும் பதினைந்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜொகானஸ் குட்டன்பார்க் என்னும் ஜெர்மானியரால் தயார் செய்து அறிமுகப்படுத்தப் பட்ட அச்சு இயந்திரங்களுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை உணரமுடிகிறது. இந்த அச்சு இயந்திரத்தின் வீச்சு உலகம் முழுவதும் பரவிற்று.
பல்வேறு பரிமாணங்களை கடந்து அச்சு இயந்திரத்தின் வரலாறு மேற்கத்திய வரலாற்று ஆய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது அந்த வரலாற்று ஆய்வாளர்கள் வரிசையில் ரோஜர் சாஸ்டீஸ் (Roger Chasties), ராபர்ட் டான்டன் (Robert Daston), எலிசபெத் ஐஸன்டீன் (Elizabeth Eisenten), லூசியர் பேபர் (Lucien Febree), ஜீன் ஹென்றி மார்டின் (Jean Hendry Martin) ஆகியோர் வருகின்றனர். இவர்களும் மற்ற சிலரும் தங்களுடைய பதிப்பு வரலாற்றின் செம்மையான ஆய்வு வழியே பதிப்பு சமூக வரலாற்றை வெளிப்படுத்தி உள்ளனர். இதுபோன்ற ஆய்வு முயற்சிகள் இந்திய வரலாற்றில் பெரிதாக இல்லை என்றாலும் ஆங்காங்கே ஒரு சில ஆய்வு முயற்சிகள் தென்படுகின்றன. உல்ரிக்கி ஸ்டார்க் (Ulrike Stark) மற்றும் அனிந்திதாகோஸ் (Aniditha Ghosh) ஆகியோரின் வட இந்திய மற்றும் வங்க சமூகப்பதிப்பு வரலாற்று ஆய்வை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
அச்சு இயந்திர வருகை என்பது பதினாறாம் நூற்றாண்டிலே தொடங்கிவிட்ட போதிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இன்றைய சமககாலம் வரைக்கும் அச்சு இயந்திரம் ஏற்படுத்திய, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கத்தை முழுமையாக பார்க்க வேண்டியுள்ளது. இதை வைத்து வரலாற்று விசைகளின் தாக்கத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
அச்சு ஊடக வருகைக்குப் பிறகான தமிழ்ச் சமூக வரலாறு முற்றிலும் புதிய கோணத்தில் கட்டமைக்கப்பட்டது. புதிதாக வளர்ந்த தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுத்து பழந்தமிழ் நூல்களை பதிப்பிக்கத் தொடங்கியதின் மூலம் சுய மறதியிலிருந்து மெல்ல விழிக்கத் தொடங்கியது தமிழ்ச் சமூகம்.
பதிப்பு என்பது ஊடக மாற்றம் மட்டும் அல்ல. இது கடந்த காலத்திய பதிப்புகளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்த பெரும் புலமைச் செயல்பாடு மற்றும் இதன் பின்னால் செயல்பட்ட புலமையாளர் களையும், நிறுவனங்களையும் இதன் பல் பரிமாணங்களையும் விரிவாக அறிவதன் மூலமே சமூக வரலாற்றைத் தெளிவாக அறியமுடியும்.
ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் வாழ்ந்த புலவர்களின் சரித்திரத்தைக் கூட அறிய முடியாத அவலநிலையே இன்றும் காணமுடிகிறது. சாதி மற்றும் வர்க்கத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்ட தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழ் இன உணர்வே பிரதானம் என்று பேசப்பட்ட சமூகத்திலும் ஒரு சமூகப் பிரிவினர் மட்டும் அறிவுலக வளர்ச்சியையும், பரந்து பட்ட அறிவையும் கையகப்படுத்திக் கொண்டு, முடக்கியதும் தமிழ் பதிப்பு வரலாற்றின் வறுமையான அவலநிலைக்கு மிக முக்கியக் காரணமாகும்.
தமிழ் பதிப்பு வரலாற்றை வெறும் பிரதியோடு மட்டும் நிகழ்த்திவிடாமல் அரசியல், பொருளாதார ஆய்வு முறைகளோடு சமூக வரலாற்றுடன் இணைத்துப் புரிந்து கொள்ளும் முயற்சிக்கு ஒரு Quantitative History தேவைப்படுகிறது. இதன் அடிப்படையில் அச்சு இயந்திர வரலாற்றை மேற்கத்திய அறிஞர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
Quantitative History (கால வரிசையை உள்ளடக்கிய) என்பது (சரியான தமிழ் பதம் இல்லையென்றாலும் கூட) சாதி, மத, இன உணர்வு இல்லாமல் நடந்த அனைத்து பதிப்பு நிகழ்வுகளை முழுமையாக சேகரிப்பது, அதன்பிறகு கிடைத்த தரவுகளை சமூக, பொருளாதார ஆய்வுகளின்படி பதிப்புலகத்தை ஆய்வு செய்வது என்ற முயற்சியுடன் உலகப் புத்தக நாளை துவக்குகிறோம்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறையும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கமும், புதிய புத்தகம் பேசுது மாத இதழும் இணைந்து செய்கின்ற இம்முயற்சிக்கு பதிப்பு சார்ந்த உலகின் தலைசிறந்த ஆய்வாளர்களும், தமிழகத்தின் முக்கிய ஆய்வாளர்களும், பேராசிரியர்களும், மாணவர்களும் கை கோர்க்கின்றனர். இந்த முயற்சி வெற்றி பெறச் செய்ய “புதிய புத்தகம் பேசுது’’ வாசகர்களை அன்போடு அழைக்கிறோம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|