பகத்சிங் - நூல் வெளியீட்டு விழா
பகத்சிங்கின் 78வது நினைவு தினத்தை போற்றும் வகையில் பாரதி புத்தகாலயமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து “பகத்சிங் : விடுதலைப் போரில் புரட்சி இயக்கம்’’ என்ற நூலை வெளியிட்டது.
நூலை வெளியிட்டு என். சங்கரய்யா பேசியதாவது, பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது தமிழகத்தில் பிரம்மாண்ட பேரணியும் காவல் துறையின் தடியடியும் நடைபெற்றதிலிருந்து பகத்சிங்கின் வீரமரணம் இங்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என அறியலாம். தமிழகத்தில் வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள சுமார் எட்டு லட்சம் வாலிபர்களை அந்த மாவீரனின் வாரிசுகளாக உருவாக்க வேண்டும். டெல்லியில் உள்ள ஜவஹர்லார் நேரு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், நூலாசிரியருமான எஸ். இர்பான் ஹபீப் பேசுகையில் மாவீரன் பகத்சிங் ஒரு சமரசமற்ற போராளியாக வாழ்ந்தார். அவர் சுதந்திர போராட்ட வீரராக மட்டுமின்றி சோசலிச சித்தாந்தத்தின் அடிப்படையில் இந்தியாவை உருவாக்கப் போராடினார்.
சுதந்திரப் போராட்டத்தில் மத ரீதியான கோஷங்கள் எழுப்பப்பட்டபோது புரட்சி ஓங்குக, இந்தியா வாழ்க, பாட்டாளி வர்க்கம் வெல்க என்ற முழக்கங்களை முன் வைத்தார். பகத்சிங் தீண்டாமைக்கு எதிராகவும் மதவெறிக்கு எதிராகவும் பல கட்டுரைகளை எழுதினார். சமூக அக்கறை கொண்ட பத்திரிகையாளனாகவும் பணியாற்றினார். வெள்ளையனை எதிர்த்துக் கொண்டே உயர்சாதி இந்துக்களின் தீண்டாமையை எதிர்த்தார். தமிழ்நாட்டில் பகத்சிங் இறப்பிற்கு பின்னரே அறியப்பட்டார். பெரியாரின் குடியரசு பத்திரிகை மூலமே அது நிகழ்ந்தது. பகத்சிங் நினைவு தினத்தன்று அவரது சிலைக்கு மாலையிடுவது மட்டுமின்றி அவரது கொள்கைகளை முன் வைத்து போராட வேண்டும் என்றார்.
விழாவிற்கு மாவட்டத் தலைவர் வி. பெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ஏ. விஜயகுமார் இந்நூலை பெற்றுக் கொண்டார். மாநில செயலாளர் எஸ். கண்ணன் வட சென்னை மாவட்டச் செயலாளர் இல. சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|