சுமைவாழ்வு ஒழிந்து விடும் நர்மதா
அன்று...
மன்னராட்சிக் காலத்தில்
அரண்மனை அந்தப்புரத்தில்
ஆண்டுக்கு ஓர் இரவு
அரசன் தரும் அரை முத்தச்
சுகத்துக்காக -
ஆயிரத்தில் ஒருத்தியாக அலங்கரித்துக்
காத்திருந்தார்கள்.
மக்களாட்சி மலர்ந்த போதும்
மனது மட்டும் மலராமல்
அறிவு மட்டும் வளராமல்
அடிமை வாழ்வு வாழ்வதையே
ஆனந்தமாய்க் கொண்டவர்கள்
அழுவதற்கும் தொழுவதற்கும்
ஆளாகிப் போனவர்கள்
எழுவதற்கும் விழிப்பதற்கும்
எப்போதும் மறந்தவர்கள்
அண்டிப் பிழைப்பதற்கே
அவதாரம் எடுத்தவர்கள்
ஒருவனுக்கு ஒருத்தி முதல்
உண்டி சுருங்கல் வரை
உதவாக்கரை உபதேசம்
ஒவ்வொன்றாய் சேர்த்துக் கோர்த்து
உடலெங்கும் அணிந்தவர்கள்
சோற்றுக்கும் சுகத்துக்கும்
சொகுசான வாழ்க்கைக்கும்
வசதி செய்ய வாகாக
ஒருவன் கிடைத்து விட்டால்
உலகையே மறப்பவர்கள்
அதைத் தக்கவைக்கும் முயற்சியில்
தினம் தன்மானம் இழப்பவர்கள்
இன்று...
கீழ்வானின் கீற்றொளியாய்
விடிகாலைக் கலகலப்பாய்
எங்கள் வான வீதியிலும்
ஒளியும் ஒலியும் வர
எமக்குள்ளும் எழுகின்றன
எண்ணற்ற விடிவெள்ளிகள்
நேற்றைய பொய் வாழ்வு
நிச்சயமாய் மாறிவிட
நலமான பாதை காட்டும்
நம்பிக்கை நட்சத்திரங்கள்
நாளை....
மரபுத்தளை தகர்த்தெறிந்து
புதுக்கவிதை பூத்தது போல்
புதுவாழ்வுப் பாட்டிசைக்கும்
பெண்ணினத்தின் போர் முரசம்
ஒலிக்க.. ஒலிக்க..
பொய்மைச் சுமைவாழ்வு
போய்மறைந்து ஒழிந்துவிடும்
நாளும் பிறந்து வரும்
நாளை விடிந்து விடும்!
|