மறுப்பும் - விளக்கமும்
அரசியல் கலப்பில்லாமல் முற்போக்குக் சிந்தனையுடன் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரையாக ‘எது கண்ணகியின் அடையாளம்?' என்ற கட்டுரையினை பெண்ணியம் இதழுக்கு அனுப்பி இருந்தேன். ஆனால் கட்டுரை முற்றிலும் மாறுபட்டு ‘கண்ணகி ஒரு போராளியே' என்ற தலைப்பில் வெளியாகி இருந்தது ஏமாற்றத்தையும் அதிர்ச்சியினையும் தந்தது. அநேகமாக இத்தவறு ஆசிரியரின் கவனத்திற்கு வராமல் பிறரால் நேர்ந்திருக்கலாம் என்று எண்ணுகிறேன். கட்டுரை மாற்றம் பெற்றது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
-எழில். இளங்கோவன்
கண்ணகி சிலை பற்றிய கட்டுரை முதல் இதழிலேயே சிறப்புக் கட்டுரையாக இடம் பெற்று, இரண்டாவது இதழில் எதிர்வினை புரிந்து, பதில் வினையில் விரிவாகச் சொல்லப்பட்டு முடிவுக்கு வந்திருந்தது. இந்நிலையில் தோழர் மிகுந்த ஆர்வத்தோடு சிலப்பதிகாரச் செய்யுள் வரிகள் பலவற்றை மேற்கோளாக்கி நீண்ட கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்து தொலைபேசியிலும் தகவலைச் சொன்னார். (பெண்ணியம் இதழுக்கு ஆதரவாகவும் ‘பெண்ணியப் போராட்டத்தின் முதல் வித்து - முதல் பெண்ணியப் போராளியே கண்ணகி என்ற வரிகளுடன் முடிவுரை இருந்ததால் வெளியிடுவது பற்றி பரிசீலனை செய்யப்பட்டது.)
மூன்று இதழ்களுக்குமேல் ஒரே செய்தியினைத் தாங்கி கட்டுரைகள் வெளிவருவது இதழ் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்கிற முன்னெச்சரிக்கை உணர்வோடு, நீண்ட கட்டுரையினை சுருக்கி வெளியிட வேண்டும் என்ற நோக்கிலும், அதனைக் கூர்மைப்படுத்த வேண்டியதன் தேவையிலும், கட்டுரையின் முன்பகுதியில் தவறுதலான ஒன்றிரண்டு குறிப்புகளை மாற்ற வேண்டியதன் அவசியத்திலும் இதழ் ஆசிரியரே தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதை தோழர் மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம்.
அவ்வாறு அனுமதி பெற்று சுருக்கப்பட்ட கட்டுரையில் அரசியல் கலப்பு நிகழ்ந்து விட்டதாகக் கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். பெண்ணிய நோக்கை வலுப்படுத்த அமைந்த கட்டுரையில் அரசியல் கலப்பின் வலு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கவில்லை என்ற போதும் அவர் ஓர் ‘அமைப்பின் தலைவராக' இருப்பதாலேயே இத்தகைய இன்னலுக்கு ஆட்பட்டிருக்கக் கூடும் என்று மட்டும் யூகிக்கிறோம். (தலைமைப் பொறுப்பில் இருப்பதைக்கூட கட்டுரை வெளிவந்த பின்னரே தொலைபேசியில் தெரிவித்தார்.)
எது எவ்வாறாயினும் மதிப்பிற்குரிய தோழர் எழில். இளங்கோவனின் வருத்தத்தில் பெண்ணியம் இதழும் பங்கேற்கிறது.
|