நூல் மதிப்புரை
2007ல் தலித் மக்களுக்குத் தனித்திட்டம் - புதிய கோடாங்கி
- இளையராஜா
பெண்ணியக் கருத்துக்களைப் போன்றே தலித்தியக் கருத்துக்களும் பரவலும் கூர்மையும் பெற்று வருகின்ற சூழலில் தாழ்த்தப்பட்டோர் எழுச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு வெளிவந்து கொண்டிருக்கும் புதிய கோடாங்கி இதழின் குழுவினர், தலித் மக்களுக்கான தனித்திட்டம் என்கிற வரும் 2007ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை புள்ளி விவரங்களோடும், திரட்டப்பட்ட தகவல் களோடும் வெளியிட்டிருக்கின்றனர்.
மக்கள் தொகையில் பதினெட்டு சதவிகிதத்தினராக இருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கு என்று மத்திய அரசு வழங்கும் நிதி ஆதாரங்களை உரிய முறையில் ஒதுக்கீடும் செய்வது இல்லை. உரிய காலத்தில் செலவழிப்பதும் இல்லை என்பது இவர்களின் மையக் குற்றச்சாட்டு.
நாடு விடுதலை பெற்றபின் உருவாக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் எவ்விதப் பலனையும் கொண்டுவந்து சேர்க்கவில்லை என்பதாலேயே தலித் மக்களுக்கெனத் தனியே ஒரு திட்டமாக 1980ஆம் ஆண்டியல் மைய அரசு ‘சிறப்புக் கூறுத்திட்டம்' என்கிற ‘நிதி உரிமைத்திட்டம்' ஒன்றைக்கொண்டு வந்தது.
தலித் மக்களுக்கான இத்திட்டம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் செயல்முறையில் உள்ளது என்கிற பெயர்தானே தவிர தாழ்த்தப்பட்டோர் எங்கும், எதிலும் ஏமாற்றப்படுவதே வாடிக்கையாகவும் இருக்கிறது என்பதே இவர்கள் தருகின்ற புள்ளி விவரத்தின் சாரம். எனவே, இத்திட்டத்தில் ஒதுக்கப்படும் தொகை முழுவதுமே ஆதி திராவிடர் நலத்துறையிடமே அளிக்கப்பட வேண்டும் என்பதும் இவர்களின் வாதம்.
மாநில அளவில் இயங்குகின்ற தலித் கட்சிகளும் அரசியல் கூட்டணி விளையாட்டில் ஈடுபடும் கட்சிகளாகத்தான் இருக்கின்றனவே தவிர தலித் மக்களின் வாழ்வாதாரங்களை வலுப்படுத்தும் வகையில் எந்தவொரு உறுதியான நிலைப்பாட்டையுமே மேற் கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். இத்திட்டம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் தலித் மக்கள் இழந்த தொகை பல ஆயிரம் கோடி என்பதையும் குறிப்பாக முன்வைக்கின்றனர்.
இத்தகைய காரணங்களினாலேயே ‘சிறப்புக் கூறுத்திட்டம்' எனும் தலித்துகளுக்கான நிதி உரிமைத் திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு தலித் மக்களிடம் பரவலாகச் சென்றடைய வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்நூல் வெளியிடப் பட்டிருக்கிறது. ‘அறிவே அதிகாரம்' என்பதற்கேற்ப விவரங்களை அறிதலே அறிவு என்னும் தெளிவோடு தமிழ்நாட்டுத் தாழ்த்தப் பட்டோரிடம் சிறப்புக் கூறுத்திட்டத்தை எடுத்துச் செல்லத்தக்க போராட்ட முறைகளையும், முழக்கங்களையும் தெளிவாக எடுத்துரைக்கிறது இந்நூல்.
இக்குழுவினர் தங்களது முயற்சியில் வெல்ல வேண்டும்-வெல்வார்கள். இதை நாம் சொல்லவில்லை - காலம் உரத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
விலை : ரூ.15/-
வெளியீடு:
புதிய கோடாங்கி, சி-4, வேலன் அடுக்ககம், 4வது தெரு,
இரயில்வே காலனி, நெல்சன் மாணிக்கம் ரோடு,
அமைந்தகரை, சென்னை-29.
|