Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Penniyam
Penniyam
ஜூலை 2008
நாத்திகம் இதழின் எதிர்வினை

மணியம்மை ஒழுக்கம் - புதிய பெண்ணியம் பாராட்டு
- பெரியாரியலான்

புதிய பெண்ணியம் என்று ஒரு பத்திரிகை. இது வரையில் நான் பார்த்ததில்லை. நம்மை ஒத்த தோழர். ருத்ரன் அவர்களின் "பெரியார் திரைப்படம் ஒரு பெரியாரியப் பார்வை' என்ற நூலுக்கு இந்த பெண்ணியம் பத்திரிகை எழுதியிருந்த விமர்சனத்துக்கு, தோழர் ருத்ரன் அளித்த பதிலும், அதன் பேரில் அந்தப் பத்திரிகைக்காரர்களும், அதன் வாசிப்பாளர்களும் எழுதிய கருத்துக்களும், அதிலே நம்மைப் பற்றியும் இயக்கம் பற்றிய குறிப்பீடுகளும் இருந்தமையால், வெளியூர்த் தோழர் ஒருவர் நமது பார்வைக்கு அதன் 2008 பிப்ரவரி இதழை அனுப்பியிருந்தார்.

"பெண்ணுரிமை' பற்றிய இதழ் என்பதால் நானும் விரும்பிப்படித்தேன். முதல் அட்டை முதல் கடைசி அட்டை வரையில் அத்தனை பக்கத்தையும் வரிவிடாமல் படித்தேன். படித்ததில், கையளவு தெரிந்து கொண்டு கடலளவு எழுதியிருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.

நாம் பெரியாரியலாளர்கள். நமக்குப் "பெண்ணியம்' என்று தனியாக எதுவும் கிடையாது. பெரியாரியலுக்குள்ளேயே பெண்ணியமும் அடக்கம் தான்.

"பெண்ணியம்', "ஆணியம்' என்று நாம் பிரிப்பதில்லை! "ஆணாதிக்கம் ஒழிய வேண்டும்' என்று வலிமையாகவும், கனத்த குரலிலும் சொன்ன நமது தலைவர் பெரியார் அவர்களிடம் பெண்கள் விடுதலை'என்றால் என்ன என்று கேட்டபோது, "ஆண்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும் பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான்' என்று பதிலளித்தார்.

அதாவது பெண்களும் ஆண்களும் சமஉரிமை பெற்று, நல்வாழ்வு வாழவேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். எனவே நாம், பார்ப்பன இந்துத்துவ சூத்திர அடிமைச் சமுதாய வாழ்விலிருந்து விடுதலை பெறப் போராடுவது, ஆண் - பெண் எல்லாருக்கும் சேர்ந்த பொதுச் சமுதாய விடுதலைப் போராட்டம்தான். அதனால் தான் ஆணும் பெண்ணும் சேர்ந்து பெரியாரியல் போராட்டங்களை நடத்துகிறோமே தவிர, கோழிக்கு ஒரு வாசல் - குஞ்சுக்கு ஒருவாசல் என்கிற அறியாமைப் போராட்டம் நம்முடையதல்ல!

ஆண் - பெண் பேதமற்ற சமத்துவ வாழ்வு வாழ்ந்த தமிழர் சமுதாயத்தில் ஆரியப் பார்ப்பனர்கள் புகுந்தபின்பே பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு சூத்திரனுக்கு ஒப்பான இழிபிறவிகள் என்று ஆக்கப்பட்டுள்ளார்கள். எனவே, பார்ப்பானும், அவனது மத - வேத - புராண - இதிகாசங்களும் மனுநீதி - வர்ணாச்சாரச் சாஸ்திரங்களும் அடித்து நொறுக்கித் தீயிடப்பட்டாலே போதும், சூத்திரனும் இருக்க மாட்டான், அவனை ஒத்த அடிமைப் பெண்ணினமும் இருக்காது என்பது தான் பெரியாரியப் போராட்டம். தீயிடுவது என்றால் அவைகளை மதிக்காமல் குப்பையிலே போடுவது என்றும் கொள்ளலாம்.

பெரியாரியப் போராட்டத்தால் ஒட்டு மொத்தத் தமிழர்களும் பெற்ற ஏராளமான பயன்பாட்டில் பெண்ணினப்பங்கும் அடங்கும். தேவதாசி ஒழிப்பு - பொட்டறுப்புச் சட்டம் முதல், விதவைத் திருமணம் தொடங்கி, சொத்துரிமைச் சட்டம் வரையில் எண்ணிலடங்காப் பயன்பாடுகள் தமிழ்ச் சமுதாயப் பெண்கள் பெற்றுப் பயன்பட்டிருக்கிறார்கள்.

இதைக்கண்ட இந்துத்வாப் பார்ப்பனச் சமூகக் கேடர்கள், பெண்கள் விடுதலையைத் தடுக்கவும் போராட்டத்தைத் திசை திருப்பவும் ஏமாற்றுக் காரர்களை விட்டுப் பாடவும், ஆடவும், பேசவும், சங்கம் அமைக்கவும், பட்டிமன்றம் நடத்தவும் ஏவி விட்டார்கள். அந்த மாதர் சங்கப் பட்டிமன்றப் பார்ப்பனப் பேச்சாளர்களோ, பெண்ணடிமைத்தனம் எங்கே பிறந்தது என்பதைக் கூட மறைத்து, தங்கள் தர்மத்தைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தார்கள் - இருக்கிறார்கள்.

"இது இந்துச் சமூகம்; இந்தச் சமூகத்துக்கு எங்கள் வேதங்களும், மனுதர்ம சாஸ்திரங்களும், புராண - இதிகாசங்களும், ஐதீக-ஆச்சாரங்களும், அனுஷ்டானங்களுமே ஆதாரம் - அதைப் பின்பற்றி வாழ்வதே இந்து சமூகக் கடமை' என்று அரசியல் சட்டத்திலேயே பதிவு செய்து கொண்டு, வெளியே "மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாடி, தமிழர்களை ஏமாற்றி மோசடி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த மோசடியைத்தான் புதிய பெண்ணியம் நடத்தும் பெண்மணிகளும் பெண்கள் விடுதலைப் போராட்டம் என்று நம்பியிருக்கிறார்கள்! அதனால்தான் "புதிய பெண்ணிய'த்தில் "வீரியக்கவிதை' எழுதும் விநாயகமூர்த்தி "புதுமை படைத்திட புறப்படு' என்ற தலைப்பில் ஒரு புதுமைப் பெண் கையில் வெட்டரிவாள் கொடுத்துப் படம்போட்டு கவிதை எழுதி, வெளி யிட்டுள்ளார்கள், இப்படி:-

இணையாம் பெண்ணை
ஈன சாதியாய் இழித்துப்பழிப்பது
கீதையேனும் கிழித்தெறியுங்கள்
அவதார மெடுத்த ஆண்டவன் என்ற
அகந்தையில் அத்து மீறி
பெண்ணின் மார்பை வாளால் அரிந்த
புரட்டுக் கதையைப் பொசுக்குங்கள்.
பாரதி பாடலை பறை சாற்றுங்கள்.

- என்று எழுதி முடித்திருக்கிறார்!

"புரட்டுக்கதையைப் பொசுக்குங்கள்' - என்ற வரியோடு நிறுத்தியிருந்தால் அது பெரியாரிய போராட்டம்! இது அப்படியில்லை- அடுத்த வரியில் "பாரதி பாடலைப் பறை சாற்றுங்கள்' என்பது தமிழர்களை முட்டாள்களாக்குவதாகும்! பாரதி பாடலை பறைசாற்றுவது என்றால் எந்தப் பாடலை? அவர் ஊருக்கு ஒருவிதமாக எழுதியிருக்கிறாரே?

பத்தாயிரம் கூத்திகளோடு பிருந்தாவனத்திலே கோலாட்டம் ஆடி, யமுனையிலே நீராடி - மார்பகங்களைக் காட்டச் சொன்னதோடு, ராதா - மீரா போன்ற நூற்றுக்கணக்கான மனநோயாளிப் பெண்களோடும், பாமா-ருக்மணி என்ற இரட்டை மனைவிகளோடும் வாழ்ந்து, பகவத் கீதை சொன்னானே அந்தப் பகவான் கதை வரும் மகாபாரத்தத்திலேதானே, பாரதி "சபதம்' பாடிய பத்தினி பாஞ்சாலியின் கதையும் வருகிறது? அதைத்தான் பறைசாற்ற வேண்டுமா?

ஐந்து முட்டாள் முரடர்கள் தங்களுக்கென்று பல பெண்களை மணந்து, வாழ்ந்து கொண்டும், ஐந்து பேரும் கூட்டணி அமைத்து, ஆளுக்கு ஒரு வாரம் இராத் தங்க பாகப்பிரிவினை செய்து வைத்திருந்த பாஞ்சாலி தான் பாரதி பாடிய பாஞ்சாலி சபதநாயகி! அவள்தான் பெண்ணியப் பெண்மணிகளுக்கு பெண்ணுரிமைப் போராளியா?

இதுமட்டுமல்ல சூர்ப்பனகை என்ற பெண்ணின் மார்பை அநியாயமாகக் கொய்த அயோக்ய இராமன், அதை மட்டும் செய்து பெண்ணினத்துரோகம் செய்யவில்லை; அவன்

மனைவி சீதையையே மூன்று முறை "சந்தேகம்' என்று சொல்லி இம்சித்தான்!

இராவணன் பாதுகாப்பிலிருந்து சீதையை மீட்டெடுத்தவுடனேயே அவள்மீது சந்தேகம் என்று சொல்லி முதல்முறையாக இலங்கையிலேயே தீக்குளிக்கச் சொன்னான்!

இரண்டாவதாக அயோத்தியில் ஒரு சலவைத் தொழிலாளி, வீதியிலே போகும்போது "சீதை இராவணனோடு தொடர்புள்ளவளாம்' என்று சந்தேகம் கிளப்ப, அதன் பேரில் இராமன் அவளைத் தனது தம்பி இலட்சுமணனை ஏவி, காட்டில் கொண்டு போய் வெட்டி வீசச் சொல்லி அனுப்பினான்; அப்போது அவள் கர்ப்பமாகவும் இருந்தாளாம்!

மூன்றாவது சந்தேகம் வனாந்தரத்தில் முனிவர்குடியில் வாழ்ந்த சீதை லவனுக்கு அடுத்து, குசன் என்ற மகனைப் பெற்றாள் எனும்போது, "அவனை யாருக்குப் பெற்றாய்' என்று கேட்டு தீயிறங்கச் சொன்னான், சந்தேகப் பேர்வழி இராமன்! - இப்படித் தன் மனைவியையே மூன்று மறை சந்தேகப் பட்டு, தண்டித்தவனும், தாடகை, சூர்ப்பனகை என்ற பெண்களை தர்ம விரோதமாக வெட்டி வீழ்த்தியவனுமான பெண்ணினத் துரோகி இராமன் கதையை, தீவைத்துக் கொளுத்த எந்தப் பாரதியின் புரட்சிப் பெண்களும் அக்கிரகாரத்து மாதர் சங்கப் புரட்சிக்காரிகளும் முன்வரக் காணோமே ஏன்?

பாரதிபாடலை பறை சாற்றச் சொல்லும் "புதிய பெண்ணியம்' வீராங்கனைகள் இதற்கு பதில் சொல்ல வேண்டாமா?

வெறுமனே "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' என்று பாரதி பாடினான்; அவன் பாட்டைப் பரப்புவோம் என்று சொல்லி, இராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தீவைக்காமல் விட்டால் எப்படி பெண் விடுதலை வரும்? இந்த நூல்களை விட பெண்களை இழிவு செய்யும் மடமை நூல் எதுவும் உண்டா?

பட்டிமன்றப் பாப்பாத்திகள் முழங்குவதுபோல - "பெண்கள் வரதட்சணை கொடுப்பதும், பிள்ளை பெறுவதும், அதற்குப் பால் கொடுப்பதும் பெண்ணடி மைத்தனம்; ஆண்களும் குழந்தை பெற்றுப் பால் தர வேண்டும்' என்று பேசி, ஆரவாரக் கைதட்டல் பெறுவதாக தொலைக் காட்சியில் காட்டுகிறார்களே, அதுதான் பெண்கள் விடுதலைப் போராட்டமா? பெண் விடுதலைக்கு வழியா?

பெண்களுக்காகவே வரும் இதழ் என்று சொல்லிக் கொள்ளும் பெண்ணியம் பத்திரிகை இதையெல்லாம் ஏன் விவரித்து எழுதக் கூடாது?

"வரன்' என்பதும் "தட்சணை' என்பதம் தமிழ்வார்த்தையே அல்ல; அந்தச் செயலும் தமிழர் களுடையதல்ல. தமிழர்கள் திருமணப் பழக்கம் "பரிசம்' போட்டு, ஆண், பெண்ணுக்கு ஆடை ஆபரணம் கொடுத்துத் திருமணம் செய்வதுதான்! வரதட்சணை என்பது ஆரியப் பார்ப்பனர் பழக்கம். அதையேன் தமிழ் சாதிப் பெண்ணியப் போராளிகள் தங்கள் போராட்டக் கருவியாகச் சொல்ல வேண்டும்?

பெண்களுக்கும் சொத்துரிமை என்று வந்ததனால், தகப்பன் சொத்தில் மகளுக்கும் பங்குண்டு என்பதால் அந்தக் பங்கை நகை - ரொக்கமாகக் கொடுக்கிறார்களே, அது எப்படி வரதட்சணை ஆகும்? அதற்கேன் மாதர் சங்கப் போராட்டம்? விவரம் புரியாத "பெண்ணியம்' சகோதரிகள் தங்கள் ஏட்டில் தங்கர் பச்சானின் "ஒன்பது ரூபாய் நோட்டு' திரைப்பட விமர்சனத்தில் - "படத்தின் மையக்கரு என்ன, எதற்காகக் கதாநாயகன் இப்படி அவதிப்பட வேண்டும் என்று நம்முள் ஏற்படும் பல கேள்விகளுக்கு எந்தவொரு பதிலையும் கண்டு பிடிக்கவே முடியவில்லை' என்று எழுதுகிறார்களே அதிலே "படத்தின் மையக்கரு' என்பதற்குப் பதிலாக புதிய பெண்ணியத்தின் மையக்கரு என்று போட்டு, "ஆசிரியை குழு சகோதரிகள் இப்படி எதற்காக அவதிப்படவேண்டும்' என்றே கேட்கத் தோன்றுகிறது!

பெரியாரைப் பற்றியோ அவரது இயக்கம் கொள்கை - கோட்பாடுகள் பற்றியோ முழுமையாகத் தெரிந்து கொள்ளாத இந்தச் சகோதரிகள், தோழர் ருத்ரன் அவர்களின் பெரியார் திரைப்பட விமர்சன நூலுக்கு விமர்சனம் எழுதத்துணிந்ததே தவறாகும். கையளவு தெரிந்து கொண்டு, கடலளவு கதைக்கக் கூடாது - அது பொய் எழுதும் குற்றமாகிவிடும். தந்தை பெரியார் அவர்களின் பூர்வீகத்தையே பெண்ணியச் சகோதரிகள் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பதற்கு- "..... தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டிருந்த ஈ.வெ.ரா. பெரியாரைத் தான் நாம் தமிழ்த் தேசியத் தந்தையாகக் கொண்டிருக்கிறோம்.

-என்று தோழர். அ.மார்க்ஸ் அவர்கள் பற்றிய கேள்வி ஒன்றுக்கு இவர்கள் பதில் எழுதி, பத்திரிகையின் 19 ஆம் பக்கத்தில் வெளியாகி இருக்கும் தவறான தகவலே சான்றாகும்.

தந்தை பெரியார் அவர்கள் கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பலிஜா (நாயுடு) நாயக்கர் சமூக முன்னோர்களின் வழிவழிவந்தவர். இதைக் கூட அறிந்திராமல், அவரது வரலாற்றுத் திரைப்படம் பற்றி கருத்துச் சொல்ல வந்ததே தவறு - குற்றம்! தோழர். ருத்ரன் நூலுக்கு இதற்கு முந்திய இதழில் விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்; அதை நான் படிக்கவில்லை. ஆனால் அந்த விமர்சனத்துக்கு தோழர். ருத்ரன் அவர்கள் இந்த இதழில் ஆணித்தரமாக எழுதியிருக்கும் பதிலிலிருந்து, முன் இதழில் பெண்ணியம் எழுதியிருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

முதல் "பெண்ணியம்' விமர்சனத்தில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டு, கடந்த ஆண்டு நடந்த என் மகன் திருமண அமைப்பிதழில் எனது சாதிப் பெயர் அச்சிடப் பட்டிருந்தாக அவர்கள் எழுதியிருக்கிறார்கள் என்று தோழர் ருத்ரன் குறிப்பிடுகிறார். என் பெயரில் அல்ல, திருமண அழைப்பிதழில் "இன்னார் பேரன்' என்று குறிப்பிடுகிற இடத்தில், பிச்சைக் கனி என்ற பெயருக்குப்பின்னால் சாதிப் பெயர் போட்டிருந்தது உண்மைதான். இது சாதித்திமிரோடு, மமதையோடு, பெருமையோடு போடப்பட்டதல்ல - அடையாளக் குறியீட்டுக்காகப் போடப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் கூடத் தமது தந்தையார் பெயரைச் சொல்லும் போதும், எழுதும்போதும் வெங்கட்டப்ப நாயக்கர் என்றே குறிப்பிடுவார்; அது சாதிக் கவுரவத்திற்காக அல்ல, ஆள் அடையாளத்துக்காக; பழக்கப்பட்ட பெயருக்காக!

எங்கள் கிராமத்தில் பத்துக்கும் மேற்பட்ட பிச்சைக்கனிகள் உண்டு! இதிலே பெண் பிச்சைக்கனிகளும் இருவர் இருக்கிறார்கள் - சாதி அடையாளம் சொல்லும் பிச்சைக்கனிகள் இருவரே; அதில் எனது தந்தையும் ஒருவர். அதை நான் குறிப்பிட்டிருந்தது பழக்கப்பட்ட அடையாளத்துக்குத் தானே தவிர, விருப்பப்பட்டு அல்ல!

என் குடும்பம் காதல் - கலப்பு திருமணங்களைக் கொண்ட குடும்பம். காதல் - கலப்புத் திருமணங்களை இரகசியமாக அல்ல, பகிரங்கமாக நடத்தும் குடும்பம்! என் குடும்பத்தில் முதலமைச்சர் கருணாநிதி நடத்தி வைத்த காதல் - கலப்புப் திருமணங்களில் ஒரு சம்பந்தி வீட்டார், என்ன சாதிக்காரர்கள் என்று, திருமணமாகி இன்று எட்டு ஆண்டுகளாகியும் எனக்குத் தெரியாது! நானும் கேட்டதில்லை - அவர்களும் சொன்னதில்லை! மருமகளிடம் கேட்பதையும் நாகரீகக் கேடாக நினைத்து வாழ்பவன் நான்!

என்னைச் சாதீயச் சிந்தனை உள்ளவன் என்று நினைப்பவர்கள், மனிதர்களைப் புரியாதவர்களாகத்தான் இருக்க முடியும் - இதற்குமேல் இப்போது விரிவுரை வேண்டாம்! இப்போது பெரியார் திரைப்படம் - மணியம்மை பற்றிய ஆய்வுக்கு வருவோம். "புதிய பெண்ணியம்' சகோதரிகளின் திரைப்பட விமர்சனம் பற்றி, நாம் முழுமையாக எழுதத்தேவையில்லை. தோழர். ருத்ரன் அவர்களே தகுந்த பதில்களை எழுதியிருக்கிறார். எனவே நாம் சகோதரிகளின் புரிதலுக்காக சிலவற்றை மட்டும் சொல்லுவோம். பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பல மேடைகளில் பேசி, நான் கேட்டிருக்கிறேன்-

"என்னைப் பூகோளம் படிக்காதவன் - சரித்திரம் படிக்காதவன் என்று எதிர்க்கட்சிக்காரர்கள் சொல்லுகிறார்கள். அவர்களுக்கு ஒன்றைச் சொல்லுகிறேன் - நீங்கள் பாடப்புத்தகத்தில் பூகோளத்தையும் சரித்திரத்தையும் படித்தவர்கள்; நான் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஊரையும் மூலை முடுக்கையும் நேரில் போய்ப்பார்த்து அறிந்தவன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்' - என்பார்!

அதுபோல் "பெண்ணியச்' சகோதரிகள் பெரியார் - மணியம்மை பற்றிய நூல்களையும், தகவல்களையும் படித்தும், கேட்டும் அறிந்திருப்பார்களே தவிர, நான் நேரடியாகப் பார்த்து அறிந்தவன்; படித்து - கேட்டுத் தெரிய வேண்டிய அவசியம் எனக்கில்லை! அந்தத் தகுதியோடு தான் பெரியார் திரைப்படம், வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பான, வியாபார நோக்கில் தயாரிக்கப்பட்ட "வக்கிரப்படம்' என்று சொல்லுகிறேன்.

முதலில் "பெரியார்' என்று பெயர் சூட்டப்பட்ட இந்தப்படத்தில் ஈ.வெ.ரா. எப்படிப் "பெரியார்' ஆனார் என்கிற வரலாறு சொல்லப்பட வேண்டாமா? சொல்லாவிட்டால் அது எப்படிப் "பெரியார்' படமாகும்,?

இதைச் சொல்லுவதற்கு படத்தில் இடம் ஒதுக்காமல் "தாசி வீட்டுக்குப் போய், ஆடல் -பாடல் பார்த்து ஈ.வெ.ரா. அங்கே கணக்கெழுதினார்' என்று காட்டியிருக்கிறார்களே, இவர்கள் மூஞ்சியில் காறித்துப்ப வேண்டுமா? வேண்டாமா? அதிலும் ஈ.வெ.ரா.வுக்குப் பெரியார் பட்டம் கொடுத்ததே ஒரு பெண்கள் மாநாட்டில்தான் என்னும்போது, பெண்களுக் காகவே நடத்தப்படுவதாக எழுதியிருக்கும் புதிய பெண்ணியம் இடம் பெறாததற்காகப் பதறி எழுந்து போராட வேண்டுமல்லவா? அந்த உணர்வு இவர்களுக்கு ஏன் வரவில்லை?

அடுத்து, மணியம்மையின் ஒழுக்கம் பற்றி விளக்க வந்த சகோதரிகள் - தன்னை விடவும் வயதில் 42 ஆண்டுகள் பெரியவரான ஒரு முதியவரைக் கொள்கை வேகத்தோடு கைப்பிடிக்கும் ஓர் இளம்பெண், காலம் முழுவதும் ஆண் வாடையே படாமல் இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று அம்மணிகளின் கருத்து இருப்பதாக தோழர். ருத்ரன் எழுதியிரக்கிறார்.

அந்த மனப்பான்மையோடு மணியம்மையின் நடத்தையை நாம் பார்க்கவில்லை! அந்த ஆண்வாடைக்காக காவிரி போல் பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிய ஒருமாபெரும் இயக்கத்தைத் தேங்கிய குட்டைபோல் ஆக்கி விட்டாரே, அதற்குத்தான் ஆவேசப்படுகிறோம். தனிவாழ்வுக்காக அல்ல; அவரது ஒழுக்கத்திற்காகவும் அல்ல!

இந்த நமது அனுபவ பூர்வமான கேள்விக்கு, பெண்ணியம் சகோதரிகள் அறியாத்தனமாகப் பதில் எழுதியிருக்கிறார்கள். "பெரியார் உருவாக்கிய தி.க இருக்கிறது; உண்மை, விடுதலை இதழ்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.... அப்படியிருக்க ... எந்த இயக்கம் ... என்ன வீழ்ச்சி... எப்படி ...எப்போது ... எவ்வாறு என்றெல்லாம் ருத்ரன் நமக்கு விரிவாக விளக்கியாக வேண்டும்'. - இப்படிக் கேட்டிருக்கிறார்கள் புதிய பெண்ணியம் வீராங்கனைகள்!

கேள்விக்கு இடையே கருணாநிதி,..... தமிழக ஆட்சி ... ஆனைமுத்து... தி.மு.க. தோழமை என்று புரியாத்தனமாக எழுதி, தாங்கள் பொது வாழ்வுக்குப் புதியவர்கள் என்றும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் உருவாக்கிய தி.க.வே இப்போது இல்லை; வீரமணி தி.க.வே இப்போது இருப்பது என்பதை சகோதரிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சுமார் 55 ஆண்டுகளுக்கு முந்திய தமிழகத்தைச் சகோதரிகள் அறிவார்களா? அந்தவயதுள்ளவர்களா, இவர்கள்? எனக்கு அப்படித் தோன்றவில்லை, இவர்கள் 60 வயதுள்ளவர்களாக இருக்க முடியாது!

1957ல் பெரியார் அறிவித்து, இயக்கத் தளபதி குத்தூசி குருசாமி அவர்கள் முன்னின்று நடத்திய சாதி ஒழிப்புக்காக இந்திய அரசியல் சட்டப்பிரிவு எரிப்புப் போராட்டம் என்பது பெரியார் இயக்கத்தின் எழுச்சியையும் சக்தியையும், வலிமையையும் உலகமே கண்டு அதிசயித்த நிகழ்வாகும்.

அரசியல் சட்டப்பிரிவுத் தாளை எரித்தால் 3 ஆண்டுகள் கடுங்காவல் என்று அப்போது சட்டம் இயற்றப்பட்டது. எல்லாருக்கும் தெரிந்திருந்தும், 10 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் அந்தச் சட்டப்பிரிவுத் தாளை எரித்தார்கள். சிறையில் இடம் இல்லாததால் 3 ஆயிரம் பேரை மட்டும் சிறைக்கு அனுப்பிவிட்டு, 7 ஆயிரம் பேரை வேண்டிக் கேட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள், போலீசார்! 3 ஆயிரம் பேரில் யாரும் எதிர்வழக்காடவில்லை; மன்னிப்புக் கேட்கவில்லை; ஜாமீன் மனுவும் போடவில்லை எரித்தோம் என்று சொல்லியே சிறைக்குப் போனார்கள்!

வயது காரணமாக விடுதலை செய்யப்பட்டவர்கூட "எனக்கு விடுதலை வேண்டாம்; தண்டனை கொடு' என்று ஓங்கிக் கேட்டு, சிறுவர் சிறைக்குப்போனார் என்பதை அறிந்து இந்திய அரசே பயத்தோடு பார்த்தது!

இத்தோடு 18 பேர் உயிர்த்தியாகமும் செய்த போராட்டம் அது. இத்தனைக்கும் பெரியார் கலந்து கொண்டு சட்டத்தை எரிக்காத போராட்டம் அது; தளபதி குருசாமியே தலைமையேற்று நடத்திய களப்போராட்டம் அது! உலகமே தி.க.வைப் பற்றி அறியத் துடித்த போராட்டம் அது.

அப்படி இருந்த தி.க. தான் மணியம்மை - வீரமணி "ஒழுக்கம்' காரணமாகத் தேங்கிய குட்டையாகி, இன்றைக்கு சென்னை கோகலே மண்டபம் முன்னால் தமிழர் தலைவர் - வேந்தர் - அய்யா வீரமணி தலைமையேற்று ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்துகிறார் - எண்ணி நூறு பேர்களே நிற்கிறார்கள்; அவர்களும் பெரியார் திடல் சிப்பந்திகளே ! பேருந்தில் போகிறவர்கள் வேடிக்கை பார்த்தபடி போகிறார்கள் - நமக்கு வயிறு எரிகிறது!

தி.க. இருக்கிறது; "விடுதலை', "உண்மை' வருகிறது; அரசு ஆதரவு இருக்கிறது; முதல்வர் தோழமையும் உண்டு... ஆனாலும் கருப்புச் சட்டை போட்டவர்களைப் பார்த்து ""சாமிúôயவ்... சரணம் அய்யப்போ...'' என்று சொல்லுகிற நிலைவந்து விட்டதே, ஏன்? ஏன்? ஏன்?

இதற்குப் பிறகும் எழுதுகிறார்கள் "புதிய பெண்ணியம்', புரியாச் சகோதரிகள் - "... (தி.க.வில்) இரண்டாம் நிலைத் தலைவர்ளை வெளியேற்றியதால் ஏடாகூடமாய் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அது அது அந்தந்த நிலையில் அவ்வவ்வாறே இருக்கிறது.'' - என்று!

சகோதரிகள் எழுதுவது போல அவர்கள் "இரண்டாம் நிலைத் தலைவர்கள்' மட்டுமல்ல, அவர்கள் தான், ஈ.வெ.ராமசாமியைப் பெரியார் ராமசாமியாக்கிய பேரியக்க வாதிகள் - பெரியார் கொள்கை என்ற முட்டையை அடைகாத்துக் குஞ்சு பொறிக்க வைத்தார்கள். அவர்களைப் "போனால் போகிறார்கள்' என்று எழுதும் "பெண்ணிய'ச் சகோதரிகளை அறியாதவர்கள் - புரியாதவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அந்தச் சுயமரியாதைச் சுடக்களைப்பற்றி எதுவுமே தெரியாதவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்கள் அறியாதவர்கள் - புரியாதவர்கள் - தெரியாதவர்கள் என்பதற்கு 1971ல் சேலத்தில் நடந்த மாநாட்டில், பெரியார் போட்ட தீர்மானத்தின் ஒரு வரியைச் சொல்லி வாதாடுவதும் சான்றாகும்.

"ஒருவன் மனைவி மற்றவனை விரும்புவது என்பதைக் குற்றம் ஆக்கக் கூடாது.' -என்று சிறப்புமிக்க தீர்மானம் இயற்றினாராம், பெரியார்! அது என்ன ஒற்றை வரித்தீர்மானமா?

பெரியாரைச் சிறுமைப்படுத்த ஒவ்வொருகாலக் கட்டத்திலும் இப்படி ஒற்றைவரியைச் சொல்லிக் கூப்பாடு போடுவது வழக்கம்தான்! முன்னும் பின்னும் விட்டுவிட்டு இடையிலே ஒரு வரியைச் சொல்லி, பெரியார் கருத்தை நச்சுத்துளியாக்கி மக்களிடத்திலே சொல்லுவார்கள்!

"கற்பு என்பது பெண்களுக்கு மட்டும் இல்லை; ஆண் - பெண் இருபாலருக்கும் அது பொதுவானது' என்று அவர் சொன்னதை, "கற்பு என்று ஒன்றுமில்லை என்று பெரியார், சொன்னார்' என்று பொய் பரப்பினார்கள், அயோக்யர்கள்!

"பறைச்சிகளெல்லாம் ரவிக்கைபோட ஆரம்பித்து விட்டார்கள்!'
"பத்து ரூபாய் கொடுத்துக் கூப்பிட்டால் எந்தப் பெண் மாட்டேன் என்பாள்?'
""என் அரணாக்கயிறு படாத பெண்களே ஈரோட்டில் கிடையாது.''
""கூழ் குடித்த சக்கிலி-பறையனெல்லாம் இப்போது சோறு சாப்பிட ஆரம்பித்து விட்டான்.''
"இப்படிப்பல உண்டு! இந்தப் பொய்களை அரசியல் விபச்சாரமாகச் செய்ததில் கருணாநிதிக்கும் அவரது "முரசொலி' பத்திரிகைக்கும், அதிலிருந்த மாறன் என்பவருக்குமே முதலிடம் உண்டு! இந்த அநாகரீகப் பொய்களால் பெரியாரின் ஒரு தாடி மயிரைக்கூட அசைக்க முடிந்ததில்லை - அந்த ஆபாசத்தை அம்மணிகள் இனிமேலும் வெளியே சொல்லுவது அவர்களுக்குத் தான் பலவீனம்!
எழுதிக்கொண்டே போனால் எட்டுப்பக்கத்துக்கும் எழுதலாம்! இறுதியாக ஒன்றை மட்டும் எழுதி முடிக்கிறேன்.

1997-ல் "பெரியார்' கொள்கைகளுக்குக் குழி தோண்டிய திராவிடர் கழகம் என்று நூல் எழுதி, வெளியிட்ட அய்யா. ஆனைமுத்துவே இன்றைக்குக் கருணாநிதி - வீரமணி கூட்டணியில் சங்கமித்து விட்டாரே, இன்னும் ஏன் மணியம்மை - வீரமணி ஒழுக்கம் பற்றிப் பேசிக் கொண்டுதிரிய வேண்டும்?- என்பதைப்போல் புத்திமதி எழுதுகிறார்கள், பெண்ணியம் சகோதரிகள்.

பெண்ணியம் சகோதரிகள் உள்பட ஆட்சியில் இருப்பவர்களைத் தொழுது நிற்பவர்கள் எல்லாருமே காரண - காரியத்தோடுதான் நிற்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்!

நூலகங்களுக்கு பத்திரிக்கை வாங்க ஆணை!
ஏதாவது ஒரு விருது வழங்க உறுதி!
அறக்கட்டளைக்குத் கணிசமான தொகை!
கல்லூரி கட்ட பெருந்தொகை நன்கொடை!
நூற்றுக் கணக்கான ஏக்கர் புறம்போக்கு!
நிலத்துக்கு தானப்பட்டா!

இப்படியே கோடீஸ்வரக்கனவோடு வாழும் பெண்ணிய - ஆணிய வாதிகள், கொள்கை சொல்லியே சாகத்துணிந்து விட்ட எங்களைபற்றிக் கவலைப்பட வேண்டாம்!

நாங்கள் உண்மை பேசியே கெட்டுப் போனவர்கள் -இந்தக் கேடு நாங்கள் விரும்பிப் பெற்றதுதான்! எங்களுக்கு இதுதான் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

நீங்கள் உங்கள் பெண்ணினப் போராளி மணியம்மையைப் பாராட்டியே வாழ்ந்து கொண்டிருங்கள். தொடர்ந்து பெண்கள் விடுதலை பற்றி நிறைய எழுதுகிறேன். படியுங்கள்!

-பெரியாரியலான்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com