என் நகர இளைஞருக்கு ஒரு செய்தி
பாலாஜி. வே
பசித்திரு, தனித்திரு என்றார் வள்ளலார் - இங்கு
பசித்தாலும் தனித்திருக்கும் மக்கள் எண்ணிலார்.
கஞ்சிக்கும் வழியில்லை
கல்விக்கும் பணமில்லை
கொண்ட கருத்தினில் சுதந்திரமில்லை
கலர் டிவியும், கேஸ் அடுப்பும் இலவசமாம்
இந்த வஞ்ச பிச்சைக்குமிங்கு ஒரு பஞ்சமில்லை
களவு போனதும், போவதும்
தமிழா உன் தன்மானமன்றோ?
தெருமுனைக் கூட்டத்தில் நாட்டம்
திரைப்பட நடிகனுக்கு ரசிகர் வட்டம்
திருட்டு அரசியலுக்கும் கைத்தட்டும்
சல்லடையாய் ஓட்டைகளென நம் சட்டம்
ஒழுங்கு என்பது ஒழுங்கற்று இருப்பதில் மட்டும்
விரக்தியில் வீணாய்ப்பேசி பொழுது செல்லட்டும்
உலகமே ஊராம் என பலர் ஓடிக்கொண்டிருக்க - உன்
ஊரே உலகமாம் என நீ இருளில் இருக்க -
விழிப்புணர்வு என்னும் விளக்கு
உனக்குள் நீதானென உண்மையிருக்க,
எப்போது பிறக்கும் சுதந்திரம் - முதலில்
உன்னிலிருந்து உனக்கும்,
பின் நம் ஊருக்கும்.
|