எதிர்ப்பும் எழுத்தும் - துணைத்தளபதி மார்க்கோஸ்
இலத்தீன் அமெரிக்க நாடுகளில் மண்ணின் மக்களது விடுதலைப் போராட்டங்கள் எப்போதுமே அம்மக்களின் வேர்களிலிருந்து வெடித்தெழுவதாகவும், தனித்தன்மை வாய்ந்ததாகவும் விளங்குகின்றன. அந்த வகையில் பொலிவியப் புரட்சியில் ஏகாதிபத்திய வேட்டைக்குப் பலியான எர்னஸ்டோ செகுவேராவுக்குப் பிறகு, உலகின் கவனத்தை ஈர்த்த புரட்சிகரப் போராட்டமாக ‘சியாபாஸ்’ இயக்கம் விளங்குகிறது.
மெக்சிகோவின் தென்கிழக்குப் பகுதியில் குவாத மாலாவின் எல்லையில் உள்ள பகுதி சியாபாஸ் மாநிலம். பனாமா வரையில் நீண்டு வட அமெரிக்காவையும், தென் அமெரிக்காவையும் இணைக்கிற நெடிய மலைத் தொடரும் அவற்றினூடாகப் பாயும் அருவிகளும் நிறைந்த இயற்கை வளம் கொழிக்கும் பிரதேசம். இங்கு வாழும் பழங்குடிகள் தங்கள் மண்ணின் மீதான ஆக்கிரமிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்த்து நடத்தி வரும் போரே ‘சியாபாஸ் விடுதலைப் போராட்டமாக’ அறியப்படுகிறது.
1919இல் தோன்றிய எமிலியானா ஜபட்டா என்பார், இப்பகுதி மக்களைத் திரட்டி, ஆயுதக் கிளர்ச்சி மூலம் அவர்களது விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். பண்ணை அதிபர்களிடமிருந்து நிலங்களை மீட்டு ‘எஜிடோ’ எனப்படும் கூட்டுப் பண்ணைகளை உருவாக்கி, விவசாயிகளின் உரிமையைப் பாதுகாப்பதே இவரது போராட்டத்தின் இலக்காக இருந்தது. இந்தப் போராட்டத்தில் 1917ஆம் ஆண்டு அமெரிக்க கைக்கூலி அரசால் கொல்லப்பட்டார் ஜபட்டா.
இவருக்குப் பிறகு இவரது நினைவாக இவரது பெயரால் நடை பெற்று வரும் இயக்கமே ‘ஜபட்டா’ இயக்கம். இவ்வியக்கத்தைச் சார்ந்தவர்கள் “ஜபட்டிஸ்ட்” மக்கள் எனப்படுகின்றனர். இது சியாபாஸ் மண்ணிலிருந்து எழுந்ததால் இதுவே ‘சியாபாஸ் இயக்கம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இவ்வியக்கம் 1994இல் 3,000 ஆயுதமேந்திய போராளிகளுடன் ஆறுகளையும், பண்ணை நிலங்களையும் மீட்டெடுப்பதற்காக நடத்திய மாபெரும் கிளர்ச்சி ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. பத்திரிகையாளர்கள் சியாபஸ்ஸுக்கு வந்தார்கள். பழங்குடி மக்களின் கடந்த கால வேர்களின் தொடர்ச்சியாக நடத்தும் அவர்களின் உரிமைப் போராட்டம் பற்றி அறிந்து அவற்றை உலகுக்குத் தெரிவித்தார்கள். உலகம் சியாபாஸ் இயக்கத்தை உற்று நோக்கத் தொடங்கியது.
இன்று உலகெங்கும் உரிமைக்காகப் போராடும் மக்களுக்கு இயாபஸ் இயக்கம் ஒரு மாபெரும் உந்துதலாக உள்ளது. இந்நிலையில் அந்த இயக்கம் பற்றியும், இயக்கத்தின் இலக்குகள், செயல்பாடுகள் பற்றியும் இயக்கத்தின் துணைத் தளபதியும், கவிஞரும், போராளியுமான மார்க்கோசின் படைப்புகள் அடங்கிய தொகுப்பே “எதிர்ப்பும் எழுத்தும்” என்னும் தலைப்பில் வெளியாகியுள்ள நூல். நல்ல தரமான தாளில், தெளிவான அச்சில் சுமார் 900 பக்க அளவில் வெளிவந்துள்ள இந்நூல், “மெக்சிக வரலாற் நிகழ்வுகள்”, “ஜபடிஸ் டாக்களின் முக்கிய நிகழ்வுகளின் கால வரிசை”, “சியாபஸ் மக்களும் ஜப டிஸ்டா இயக்கமும்” என்பன உள்ளிட்ட பல ஆவணக் குறிப்புகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் தொகுக்கப்பட்டுள்ளது. எஸ். பாலச்சந்திரன் நூலை சரளமான தமிழில், சிறப்பான முறைல் மொழி பெயர்த்துள்ளார்.
போராட்ட உணர்வுகளும், போராடும் அமைப்புகளும் அவசியம் அறிய வேண்டிய ஓர் இயக்கம் சியாபாஸ். அந்த இயக்கம் பற்றிய தகவல்களை விரிவாக அளிக்கிறது என்கிற அடிப்படையில் அனைவரும் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கிய நூலாகும் இது.
பக். 870 விலை ரூ. 350/-
வெளியீடு : விடியல் பதிப்பகம்,
11, பெரியார் நகர், மசக்காளிபாளையம் வடக்கு,
கோயம்புத்தூர் - 641 015.
தொ.பே : 0422 2576772
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|