இலக்கியமும் இயக்கமும்
கவிஞர்.ஜெயபாஸ்கரன்
புறப்படுங்கள், படைப்பாளர் படைசேருங்கள்
பண்பாட்டின் மேன்மைக்குப் போராடுங்கள்
தமிழ் உங்கள் அனைவரையும் ஒன்றாய்ச் சேர்க்கும்
தமிழ்ப் பகைவன் உங்களை ஒன்றாய் சேர்ப்பான்
பேருக்கும் புகழுக்கும் எழுத வேண்டாம்
யாருக்கு எழுதுகிறீர்? அதுதான் செய்தி
விருதுக்கு எழுதுதல் வேண்டாம் வேண்டாம்
வியர்வையை எழுதுங்கள் அது மணக்கும்
கலையும் இலக்கியமும் மக்களுக்கென்று
கரமுயர்த்திச் சொல்லுங்கள் அதுதான் உண்மை
இலக்கியத்தில் பிரச்சாரம் செய்யலாமா - என்று
எடுபடாத விளக்கெண்ணெய் ஒருவன் கேட்பான்!
உள்நோக்கிப் பயணமென ஒருவன் சொல்வலன்
ஒருநூறு இசங்களால் மிரட்டிப் பார்ப்பான்
அறியாதவன் எழுதிய கவிதைக்கெல்லாம் - அதைப்
புரியாமல் படித்தொருவன் பெருமைகொள்வான்
புரியவில்லையே என்று அழுவான் ஒருவன்
புரிந்துகொள்ள முயற்சி செய் என்பான் ஒருவன்
உண்மைக்கும் எளிமைக்கும் இலக்கியத்தில்
ஒருபோதும் இடமில்லை என்பான் ஒருவன்!
இடஒதுக்கீட்டினை ஏற்கமாட்டான் - தன்
இலக்கியத்தில் அதைப்பற்றி எழுத மாட்டான் -
பிச்சனையை முன்வந்து பேசமாட்டான் - நீ
பேசினால் அதையும் அவன் பொறுக்க மாட்டான்
உயிருள்ள இலக்கியங்கள் படைக்கும் ஒருவன்
உயிரோடு இருக்கும்போதே மறைப்பான் ஒருவன்
உருப்படியாய் எழுதுகின்ற படைப்பாளனை
ஓசையின்றிக் குழிதோண்டிப் புதைப்பான் ஒருவன்
பிணம் போல நூல் ஒன்றைப் படைப்பான் ஒருவன் - அதைப்
பாடையின் மேல் வைத்துச் சுமப்பான் ஒருவன்
ஆண்டவனின் ஊர்வலம் வருவதாக - புது
ஆய்வுரைகளை எழுதிக் கிழிப்பான் ஒருவன்!
அங்கீகாரத்திற்கு அலையாதீர்கள்
ஆசிர்வாதங்களை நம்பாதீர்கள்
தமிழுக்கும் தமிழருக்கும் கேடு செய்யும்
துரோகிகளின் தோழனாகிப் போகாதீர்கள்!
தமிழுக்கும் தமிழருக்கும் எதிராய் நின்றும்
தாங்கரும் கொடுமை பல செய்வார் கண்டும்
பேருக்கு எழுதுவதால் பயனே இல்லை
யாருக்கு எழுதுகிறோம் அதுதான் செய்தி
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|