இட ஒதுக்கீட்டு நாயகர் சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு வீர வணக்கம்
சிலர் தாங்கள் வசிக்கும் பதவி களால் சிறப்படைகிறார்கள். சிலர் பதவிக் காலத்தில் நிகழ்த்திய தங்கள் சாதனை களால் சிறப்படைகிறார்கள். அப்படித்தான் ஒரு ஆண்டு கூட, (2-12-89 முதல் 10-11-90 முடிய) முழுமையாக வகிக்காத பிரதமர் பதவிக் காலத்தில் தான் ஆற்றிய சாதனை களால் சிறப்படைகிறவர் வி.பி.சிங். என் றழைக்கப்படுகிற விஸ்வநாத் பிரதாப் சிங். 1931 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 25ஆம் நாள், உத்திரப்பிரதேச மாநிலம், அலகாபாத் பகுதியில் பிறந்து, வாரணாசி, உதய் பிரதாபியில் கல்வி கற்று, கல்லூரிக் காலத்தில் பொது வாழ்க்கையில் நுழைந்த இவர் மாணவர் சங்கத் தலைவராக, உ.பி. மாநில சட்ட மன்ற உறுப்பினராக, உ.பி. முதல்வராக, பின் நாடாளுமன்ற உறுப்பினராக, நடுவண் அரசியல் நிதியமைச்சராக, பாதுகாப்பு அமைச்சராக, பல்வேறு பொறுப்புகள் வகித்து பின், இந்தியப் பிரதமராக பரிணமித்தவர்.
இவர் வகித்த எந்தப் பதவியிலும், எந்த தன்னலவாத சக்தி களோடும் சமரசம் செய்து கொள்ளாமல் தான் கொண்ட கொள்கையில் இலட்சியத்தில் உறுதிப்பாட்டுடன் இருந்த இவர், அதே காரணம் பற்றியே அப்பதவிகளையெல்லாம் உதறி அடுத்தப் பணிக்குத் தாவினார். அதே இலக்கு நோக்கிய பயணத்திலேயே இவர் பிரதமர் பதவியையும் இழந்தார். இவரது ஆட்சிக்கால சிறப்புக் கூறுகளாக 4 செய்திகளைக் குறிப்பிடலாம். 1. மண்டல் குழு பரிந்துரைகளை ஏற்று, மத்திய அரசு நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பித்து, இந்திய சமூக அமைப்பில் பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு மாபெரும் வழி வகுத்தது.
2. காங்கிரசை விட்டு விலகி வந்த கையோடு ‘தேசிய முன்னணி’ என்கிற ஒரு கூட்டணியை உருவாக்கி தில்லியில் ‘கூட்டணி அரசியல் - கூட்டாட்சி அரசு அல்ல, கூட்டணி அரசியல் அமைத்து இனி எந்த ஒரு கட்சியும் தனிப் பெரும்பான்மை யுடன் தில்லியில் ஆட்சி அமைக்க முடியாது, மாநிலங்களில் உள்ள கட்சி களின் ஆதரவில்தான் ஆட்சி நடத்தமுடியும் என்கிற நிலையை தொடங்கி வைத்தது.
3. இவருக்கு முன் பதவி வகித்த ராஜீவ் ஆட்சிக் காலத்தில், ஈழச் சிக்கலில் அவரின் தவறான அணுகுமுறையாலும் நடவடிக்கைகளாலும் ஈழத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட, அதன் நடவடிக்கைகளைச் சகிக்காது ஏறக்குறைய சிங்கள மற்றும் தமிழீழ மக்களாலேயே துரத்தியடிக்கப்பட இருந்த - 2000 கோடி ரூபாய் செலவும் 1100 இந்திய ராணுவத்தினரின் இழப்புக்கும் காரணமான இந்திய அமைதி காப்புப் படையைத் திரும்பப் பெற உத்தரவிட்டது.
4. தமிழகத்தின் காவிரி உரிமையை கருநாடகம் மறுத்து, தொடர்ந்து சண்டி செய்து வந்தபோது, அப்பிரச்சினையின் தீர்வுக்கு, தில்லி உச்ச நீதி மன்றத்தில் தமிழகம் சார்பில் வழக்குத் தொடுக்க, அதன் வழிகாட்டுதலின்படி, காவிரிச் சிக்கலின் தீர்வுக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதும் இவர் ஆட்சிக் காலத்தில்தான்.
இப்படிப்பட்ட நற்செயல்களுக்கு சொந்தக்காரரான இவரை பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் பதவியில் நீடிக்க விட வில்லை. 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்க இயலாத பா.ஜ.க.வும் பரிவார அமைப்புகளும் இந்துத்துவ மத உணர்வுகளை மக்களிடம் உசுப்பி விட்டு, அத்வானி தலைமையில் சோமநாதபுரத்தி லிருந்து அயோத்திக்கு ரத யாத்திரை நடத்தி, வழியெங்கும் ரத்தக் களரிகளை ஏற்படுத்தி, தேசிய முன்னணிக்குத் தந்து வந்த ஆதரவையும் விலக்கிக் கொள்ள, வி.பி. சிங் பதவியிழந்தார்.
பதவியை விட்டு விலகியபின், சிறிது காலம் அரசியலில் இருந்து பின் ஓய்வு பெற்று, கடைசி பத்தாண்டு களுக்கும் மேலாக ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர், அதிலிருந்து மீள வாய்ப்பில்லாமலே தன் 77வது வயதில் இயற்கை எய்தினார். சாதாரண குடும்பத்தில் பிறந்து, ராஜாராம் கோபால்சிங் என்ப வரால் தத்து எடுக்கப்பட்டு, ராஜ குடும்பத்து மரபுகளோடும் பெருமை களோடும் வளர்க்கப்பட்ட விஸ்வதான பிரதாப் சிங் ‘மண்டாசிங்’ என்றே அழைக்கப்பட்டார். அந்த மண்டா சிங் மறைவு என்பது கடைநிலை மக்களுக்கு, சமூக நீதிக் காவலர்களுக்கு, இட ஒதுக்கீடு போராளிகளுக்கு மாபெரும் இழப்பாகும்.
இந்தியப் பிரதமராக யார் யாரோ பதவி வகித்த போதும் பிரதமர் பதவியை விட்டு விலகியபோதும், அவர்களை யெல்லாம் இந்த அளவு நினைவு கொள்ள வைக்காது, எல்லோராலும் மதிக்கப்பட்ட, இந்தியாவின் பட்டி தொட்டிகளெங்கும் அறியப்பட்ட ஒரு பேராக உள்ளவர் வி.பி.சிங். அன்னாரது மறைவின் துயரத்தை மண்மொழி அவரது குடும்பத்தினர், அபிமானிகள் அத்துனை பேரோடும் பகிர்ந்து கொள்கிறது. சமூக நீதிக்கான அவரது போராட்ட உணர்வுக்கும் வாழ்நாள் சாதனைக்கும் மண்மொழி தன் வீர வணக்கத்தைச் செலுத்துகிறது.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|