ஒபாமா- வெள்ளை மாளிகையில் கருப்பின அதிபர்
தந்தை வழியில் கென்ய நாட்டுக் கருப்பினத்தைச் சேர்ந்த அமெரிக்க குடி மகன் பாரக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு சனவரி 20இல் பதவி ஏற்க இருக்கிறார். அமெரிக்க ஐக்கிய நாடுகள் வரலாற்றில் கருப்பர் ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டி ருப்பது, வெள்ளை மாளிகையில் கருப் பர் ஒருவர் அதிபராக நுழைவது, மிகுத்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக உலக மக்களால் நோக்கப் படுகிறது. ஆப்பிரிக்கக் கருப்பின மக்கள் ஆனந்தக் கண்ணீர் வடிக்க, மகிழ்ச்சியும் பூரிப்பும் மிக்க நிகழ்வாக இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
கருப்பினத் தலைவர் ஒருவர் வெள்ளை மாளிகையில் நுழையும் பெருமை மிக்க வரலாற்று நிகழ்வை நாமும் வரவேற்போம். இந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கு கொள்வோம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதுபற்றி மிகை மதிப் பீடுகளை, மிகை கற்பனைகளை யாரும் உருவாக்கிக் கொள்ள வேண்டாம் என்பதே நம் வேண்டுகோள். உலக வரலாற்றின் உன்னதத் தலைவர்கள் எல்லாம், மனிதர்கள் என்ற அளவில் அவரவரும் பல நற்பண்புகள் உடையவரே, மதிக்கத் தக்கவரே என் பதில் மாற்றுக் கருத்தில்லை. உல கையே நடுநடுங்கச் செய்த, பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்ட ஹிட்லர்கூட பல உன்னத மனிதப் பண்புகள் மிக்க வர்தாம். ஆனால் எந்த மனிதரும் அவர் ஆற்றும் பொறுப்பைத் தீர்மானிப்பது போல், எந்த மனிதரையும் அவர் ஆற்றும்
பொறுப்புகளும் தீர்மானிக் கின்றன.
பாரக் ஒபாமா ஆற்றப்போகும் பொறுப்பு, உலக வல்லாதிக்க அரசான உலக தாதாவாக தன்னைக் கருதிக் கொண்டு செயல்படுகிற அமெரிக்க அரசின் அதிபர் பொறுப்பு. அந்தப் பொறுப்பின் பின்னணி, அதன் தேவைகள், அதை ஆட்டுவிக்கும் சக்திகள் என்பன உருவம் பிரும்மாண் டம் மிக்கவை. அவற்றை விவரிக்க இடம் போதாது. அவையனைத்தும் அரசியல் விழிப்புணர்ச்சி யுள்ளவர்கள் அறிந்த சேதியே. பாரக் ஒபாமாவைப் பொறுத்த வரை, இதுவரை எந்த அதிபருக்கும் செலவிடப்படாத அளவுக்கு பணம் வெள்ளம் போல் வாரி இறைக்கப் பட்டுள்ளது. இது கையூட்டுக்கான பணம் என்பதாகப் பொருள் கொண்டு விடக்கூடாது. தேர்தல் செலவுக்கான பணம்தான். ஜார்ஜ் புஷ்ஷின் நடை முறைத் தவறுகளால் வீழ்ந்துபோன அமெரிக்காவை முட்டுக் கொடுத்து நிறுத்த ஒரு மாற்றுத் தலைவர் அமெரிக்க வல்லாதிக்க சக்திகளுக்குத் தேவைப்படுகிறார். அந்த இடத்தை இட்டு நிரப்பும் இடத்தில் வெள்ளை மாளிகையில் வைக்கப் படுகிறார் கருப்பினத்தைச் சேர்ந்த வெள்ளை பாரக் ஒபாமா. இதற்காக கோடிக் கணக்கான டாலர் செலவிடப் படுகிறது.
இப்படி செலவு செய்பவர்கள் யார்? இதற்குப் பின்னால் உள்ள சக்திகள் எவை? இக்கருப்பின மனிதனின் வளர்ச்சியில் இவர்களுக்கு என்ன அவ்வளவு அக்கறை? இவையெல்லாம் கேள்விக்குரிய வினாக்கள்..இருக்கட்டும். இப்படி அடித் தட்டு மக்கள் அதிபராவது உலக வரலாற்றில் அவ்வப்போது நிகழ்வது தான். ஆனால் அவர்களால் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்து விட்டதாக வரலாறு கிடையாது என்பதே உண்மை. உலக உதாரணத்துக்கெல்லாம் போக வேண்டாம். இந்தியாவையே எடுத்துக் கொள்வோம். கியானி ஜெயில்சிங் அடித்தட்டு சமூகத்தி லிருந்து இந்தியக் குடியரசுத் தலைவர் ஆனவர்தான். அதனால் சீக்கிய, இந்திய சமூகத்தில் ஏதும் மாற்றம் நேர்ந்துவிட வில்லை. பழங்குடி இனத்தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவர் ஆனார். ஆனால் அதனால் பழங்குடிச் சமூகத்தில் ஏதும் மாற்றம் நிகழ்ந்துவிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவர் ஆனார். தமிழர் ஒருவர் தலை வராகிறார் என்று பலரும் பெருமை பட் டார்கள். ஆனால் அவரால் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை.
எல்லாம் அது அது இயல்புக்கு, புறச் சூழலுக்கு என்ன நிகழுமோ, அதுதான் நிகழ்ந்தது. பெரிய பிரளய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்துவிட வில்லை. அதேபோல ஒபாமா அமெ ரிக்க அதிபராக பொறுப்பேற்றாலும், பிரளய மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை. அமெரிக்க அய லுறவுக் கொள்கையில் கருப்பின மக்கள் வாழ்வில் உடனடி மாற்றம் ஏதும் வந்து விடப் போவதில்லை. தற்போதும் அமெரிக்காவின் அரசுச் செயலராக, அயலுறவுத் துறைப் பொறுப்பில் இருக்கும் காண்டலிசா ரைஸ் ஒரு கருப்பின மாதுதான். முன்பு கென்னடி காலத்தில் வியட்நாம் போரில் வெள்ளை ஹென்ரி கிசிங்கர் செய்த அதே பணியைத்தான் தற்போதைய ஈராக் போரில் கருப்பின காண்டலிசா ரைஸ் செய்து வருகிறார்.
ஆகவே இதையெல்லாம் கருத் தில் கொண்டு கடைநிலை மக்கள் யார் எந்த உயர் பொறுப்புக்கு வந்தாலும், பொத்தாம் பொதுவாய் மகிழ்ச்சி, பெருமை கொள்ளும் அதே வேளை, அவர் எந்த பொறுப்புக்கு வந்துள்ளார், எப்படி வந்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொண்டு நின்று நோக்கு வோம்.
இதே நேரத்தில் பாரக் ஒபாமா வகிக்க இருக்கும் வெள்ளை மாளிகை அதிபர் பொறுப்பு குறித்து மக்கள் மகிழ்ச்சியடைவதை யாரும் குறை கூறவில்லை. ஆனால் மிகை நம்பிக் கைகளை, மிகை மதிப்பீடுகளை வளர்த் துக் கொள்ள வேண்டாம். மிகை பிம் பங்களைக் கட்டமைத்து உலவ விட வேண்டாம் என்றே வேண்டிக் கொள் கிறோம். காலம் இருக்கிறது. எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்கள் இருக் கின்றன. எப்படி எதிர் கொள்கிறார் என்று பார்ப்போம். நல்லது நடந்தால் உளமாரப் பாராட்டுவோம். தீயது நடந் தால் எப்போதும் போல் எதிர்ப்போம். அவர் கருப்பினத்தவர் என்பதால், விட்டுக் கொடுக்க மாட்டோம். விட்டுக் கொடுக்கவும் முடியாது. இந்தத் தெளிவோடும் புரிதலோடும் பாரக் ஒபாமாவை அமெரிக்க அதி பராக வரவேற்போம். அவரது நற் செயல்களுக்குத் துணை நிற்போம்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|