Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Manmozhi
ManmozhiManmozhi Logo
மார்ச் - ஏப்ரல் 2009
முதல்வர் கருணாநிதியின் முழு அடைப்பு அறிவிப்பும் எதிர்க்கட்சிகளின் மறுதலிப்பும்
சாங்கியன்

தன், தன்னலவாத குடும்ப அரசியலுக்காக தமிழுக்கும் தமிழினத்துக்கும் தொடர்ந்து துரோகம் செய்து வருபவர், ஈழத்தமிழர் பிரச்சினையில் இரட்டை வேடம் போட்டு தமிழர்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருபவர் கருணாநிதி என்பது தமிழகம் அறிந்த கதை மட்டுமல்ல. தி.மு.க. கட்சிக்காரர்களிலேயே பலரும் நன்கு அறிந்த கதையும் கூட. இந்த உத்தியின் ஓர் அங்கமாகத் தான் கடந்த 23-04-09 வியாழன் அன்று அவர் திடீரென்று முழு அடைப்பை அறிவித்தார்.

சாதாரண காலங்களில் அவர் இது போன்ற உத்திகளில் ஈடு பட்டிருந்தால் அதை நாம் எதிர் கொண்டிருக்க வேண்டிய முறை வேறு. ஆனால் ஈழ மக்கள் மீதான சிங்கள இனவெறித் தாக்குதல் உக்கிரமடைந்து அன்றாடம் ஆயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வரு வதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், இதை எதிர்த்தும் கண்டித்தும் உலகம் முழுவதும் உள்ள மக்கள் உணர்வெழுச்சி யோடும் ஆவேசத் தோடும் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகமும் கிட்டத்தட்ட தேர்தல் வேலைகளில் மும்முரப்பட்டு ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு சற்றே இடைவெளி விட்டிருந்த நிலையில் தமிழக மக்களின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்துக் கொள்ளும் முயற் சியில் 23-04-09 அன்று முழு அடைப்பை அறிவிக்கிறார் கருணாநிதி.

இந்த அறிவிப்பு வந்தவுடன் எதிர்க் கட்சிகள் நியாயமாய் என்ன செய்திருக்க வேண்டும்? இப்போ துள்ள அவலமான சூழலில் கருணாநிதி யோடு ஆயிரம் முரண்பாடு இருந் தாலும் அவரது அரசியல் அணுகுமுறை யில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கி வைத்து, ஈழ மக்கள் சிக்கலில் தமிழக மக்களின் ஒருமித்த உணர்வை சிங்கள அரசுக்கும் உலக நாடுகளுக்கும் தெரிவிக்கும் வகையில் நாங்களும் இதில் கலந்து கொள்கி றோம் என்று அறிவித்திருக்க வேண்டும்.

இப்படி அறிவித்திருந்தால் தமி ழகத்தில் கட்சி சாராத உணர்வாளர்கள் உள்ளிட்டு அனைவர் மத்தியிலும் எதிர்க் கட்சிகளின் மதிப்பு உயர்ந்திருக்கும். உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மகிழ்ந் திருப்பார்கள். பாராட்டியிருப் பார்கள். ஆனால் எதிர்க் கட்சிகள் அப்படிச் செய்யவில்லை. மாறாக எதிர்த்து அறிக்கை விட்டார்கள். என்ன ஆயிற்று? கருணாநிதி ஒரு பக்கம் முழு அடைப்பு அறிவிக்க, மறுபக்கம் தலைமைச் செயலாளர் அரசு அலு வலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்க, இந்த எல்லா சொதப்பல்களையும் மீறி முழு அடைப்பு முந்தைய எல்லா அடைப்பு களையும் விட மிக வெற்றிகரமாக நடந்தேறியது.

காரணம் புறச்சூழல். ஈழ நிலைமை. ஈழத்திலிருந்து அன்றாடம் வரும் படுகொலைச் செய்திகளைக் கேட்டு, தொலைக்காட்சிகளில் பார்த்து மக்கள் மனம் பதைத்து, இந்த மக் களைக் காக்க யாரும் எதுவும் செய்ய மாட்டார்களா எனத் தவித்து யார் எந்த முயற்சி மேற்கொண்டாலும் - அவர் நண்பரா, துரோகியா என்பதைப் பற்றி யெல்லாம் கூட பொருட்படுத்தாமல் அதற்கு ஆதரவு தரும் மனநிலையில் இருந்தார்கள். இருக்கிறார்கள். அந்த உணர்வின் வெளிப்பாடுதான் முழு அடைப்பின் வெற்றி.

இப்படியிருக்க மக்களின் இந்த உணர்வு நிலையைப் புரிந்து கொள் ளாமல் வெறும் கருணாநிதி எதிர்ப்பு அரசியலை மட்டுமே வைத்து எதிர்க் கட்சியாளர் முழு அடைப்பை எதிர்ப் பதாக அறிக்கை விட்டார்கள். இந்த அறிவிப்பு பலருக்கு உண்மையில் அதிர்ச்சி. உலகத் தமிழர் களும் என்ன நினைத்திருப்பார்கள்? இந்த நேரத்தில் கூட அரசியலா. இப்போதாவது ஒரு மித்து குரல் எழுப்பக் கூடாதா என்று தான் ஆதங்கப் பட்டிருப்பார்கள்.

போராட்ட வடிவங்களில் பல வகை உண்டு. சிலதை எதிர்க்க முடியும். சிலதை எதிர்க்க முடியாது. சிலதை ஆதரிக்க முடியும். சிலதை ஆதரிக்க முடியாது என்று வெறும் அறிக்கையோடு நின்று விடலாம். ஆனால் முழு அடைப்பு அப்படி யல்ல. களத்தில் இயங்கும் செயல் பாடு இது. இதில் வெறும் அறிக் கையோடு நின்று விட முடியாது. ஒன்று முழு அடைப்பை ஆதரித்து அதில் பங்கு கொள்கிறாயா, அல்லது பங்கு கொள்ளாமல் எதிர்த்து நின்று கடைகளை திறந்து வைத்தோ, பணிக்குப் போயோ, இயங்கப் போகிறாயா என்கிற கேள்வி யோடு தொடர்புடையது. இதில் இதை ஆதரிக்கவுமில்லை. எதிர்க்கவுமில்லை என்கிற நடுநிலைக்கெல்லாம் பேச்சே கிடையாது. ஒன்று முழு அடைப்பில் பங்கு கொள்ளவேண்டும். இல்லை அடைப்புக்கு எதிராக இயங்க வேண்டும்.

இந்த நேரத்தில் இந்த அடைப் புக்கு எதிராக இயங்குவது எப்படிப் பட்ட எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை எதிர்க் கட்சிகள் உணர்ந்து பெருந்தன்மையோடு ‘நாங்களும் இதில் கலந்து கொள்கிறோம், எப்படி யாவது, எந்த வழியிலாவது போர் நிறுத்தம் வந்தால் சரி’ என்று அறிக்கை விட்டிருந்தால் எவ்வளவோ கண்ணிய மாக இருந்திருக்கும். ஆனால் அந்த வாய்ப்பைத் தவற விட்டார்கள் எதிர்க் கட்சியினர். சரி, கருணாநிதியின் முழு அடைப்பைத்தான் எதிர்த்தார்கள். இவர்களாவது இந்த நெருக்கடி நேரத் தில் கருணாநிதியின் முழு அடைப்பை யும் தாண்டி அதைவிட கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு எதாவது போராட்டம் நடத்தினார்களா என்றால் அதுவுமில்லை.

24-04-09 வெள்ளியன்று மாலை அதாவது முழு அடைப்புக்கு மறுநாள், தமிழகம் தழுவி கருப்புக் கொடி ஊர்வலம் என்று அறிவித்தார்கள். தமி ழகத்தின் மற்ற பகுதிகளில் திடீர் ஏற்பாடாக நடந்தது. ஆனால் தலைநகர் சென்னையில் நடக்க வில்லை. 24-04-09 அன்று மாலை மன்றோ சிலையிலிருந்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி ஊர்வலம் என்றார்கள். 4.00 மணிக்கு போய்ப் பார்த்தால், ஒரு ஈ, காக்கை இல்லை. சம்மந்தப்பட்டவர் களுக்கு தொலைபேசி போட்டுக் கேட்டால், ஊர்வலத்திற்கு காவல் அனுமதி பெறும் பொறுப்பு ஒரு இயக்கத்திடம் ஒப்படைக்கப் பட்டதாம் அவர்கள் தேர்தல் பணிகளில் இதை மறந்து கவனிக்காமல் விட்டு விட்டார் களாம். அதனால் ஊர்வலம் ரத்து என்றார்கள். ஆக, இப்படி இருக்கிறது இவர்கள் அக்கறை.

எந்த மாதிரி நேரம் இது. எப்படி மக்கள் அங்கு அவதிப் பட்டுக் கொண் டிருக்கிறார்கள். அன்றாடம் வந்த அவலங்களைப் பார்த்தால் உண்ண, உறங்கத் தோன்றவில்லை. என்ன கொடுமை இது. என்ன வாழ்க்கை இது. உலகில் வேறு எந்த இனமாவது இப்படி தன் உரிமைக்குப் போராடி இதுபோன்ற அவலங்களை எதிர் கொண்டிருக்குமா என்று மனம் பதறிக் கொண்டிருக்கிற வேளையில், அந்த மக்கள் முக்கிய மில்லை, தேர்தல்தான் முக்கியம் என்று, தேர்தல் வேலையில் இதை மறந்து விட்டார்களாம் என்று செய்தி கிடைக்கிறது நியாயமா இது? இவர் களுமா இப்படி என்று மனம்தான் குமுறுகிறது.

இந்த நேரத்தில் இந்தத் தலை வர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது. இது அவ்வப்போது கேட்டு வருவதுதான் என்றாலும் மீண் டும் ஒரு முறை கேட்கத் தோன்றுகிறது. தயவு செய்து அனைவரும் உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். ஈழச் சிக்கலில் சமீபத்தில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாகத் தமிழகம் கொந்தளித்துக் கிடக்கிறது. இந்த ஆறு மாதங்களில் இதுவரை நாம் நடத்தி வந்த சடங்குத் தனமான சம்பிரதாய மான இந்தப் போராட்டங்களைத் தாண்டி, ஆவேசமிக்க, எழுச்சிமிக்க, போராட்டங் களை நாம் நடத்தியிருக்க முடியாதா? தற்காலிகமாகவேனும் இந்தக் கொடுமைகளுக்கு ஒரு முடிவு கட்டியிருக்க முடியாதா?

அனைத்துக் கட்சிகளும், உணர் வாளர்களும் சேர்ந்து சில இலட்சம் பேரைத் திரட்டி, மையமான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து இந்த சிக்கலுக்கு ஒரு முடிவு காணாமல் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என ஒரு தொடர் போராட்டம் நடத்தியிருக்க முடியாதா? என்ன விளைவு வந்தாலும் வரட்டும், சந்திப்போம் என உறுதி யோடு முன்னெடுத்துச் சென்றிருக்க முடியாதா? இப்படிச் செய்திருந்தால் இது போராடுகிற அணிகளையும் தாண்டி தமிழக மக்கள் மத்தியிலும் ஒரு தாக்கத்தை, உணர்வை ஏற்படுத்தி யிருக்கும். போராட்ட அரசியல் தாண்டி தேர்தல் அரசியல் நோக்கிலும் இது எதிர்க் கட்சிகளுக்குப் பயன் அளித் திருக்கும். ஆனால் அப்படி எதுவுமே செய்ய வில்லையே, ஏன்?

ஈழச் சிக்கலுக்காக எல்லோரும் இப்படித் தனித் தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறார்களே, எல்லோரும் ஒன்று சேர்ந்து போராடினால் போராட் டம் வலுவோடு அமையாதா. சிக் கலுக்கு விரைவில் ஒரு தீர்வு கிட்டாதா என்று பார்த்தால், எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தைப் பலவீன மடையச் செய்ததுதான் கண்ட பலனாக அமைந்தது. ஒன்று, எல்லோரும் ஒன்று சேர்ந்து ஏதாவது எழுச்சிமிகு போராட் டங்கள் நடத்துவார்கள் என்று பார்த் தால், பழைய படியே காலை 11.00 மணிக்குக் கூடுவது, போராடுவது, கைதாவது, கல்யாண மண்டபங்கள், சமுதாயக் கூடங்களில் காவலில் வைக்கப்படுவது, மதியம் பட்டை சோறு சாப்பிட்டு, மாலை விடுதலை யாவது என்று இருக்க, இது நம்பிக் கையோடும் எதிர்ப்பார்ப்போடும் வந்த அணிகள் மத்தியில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தியது. இந்த சோர்வு அடுத் தடுத்த போராட்ட நடவடிக்கைகளில் பங்கு கொள்வோரின் எண்ணிக் கையைக் குறைத்தது.

இரு ஒரு பக்கம் என்றால், தனித் தனியாக போராட்டம் நடத்தியபோது தங்கள் அணிகளை முழு மூச்சோடு திரட்டி தங்கள் பலத்தைக் காட்டிய வர்கள், கூட்டு நடவடிக்கை என்று வந்தபிறகு, அவரவர்களும் தங்கள் அணிகளைத் திரட்டி பலம் காட்டுவதில் போதிய அக்கறை காட்டவில்லை. பிள்ளையார் கோவிலுக்குப் பால் ஊற்றிய கதையாக அவரவர்களும் அடையாளப் பூர்வமாக மட்டும் திட்டமான பேர்களோடு வந்தார்கள். இதனாலும் ஒருபுறம் போராட்டங் களில் கூட்டம் குறைந்து காணப்பட்டது.

இந்த பலவீனத்திற்கெல்லாம் காரணமென்ன? திட்டமிட்ட உறுதி யான கொள்கைப் பற்றின்மை. எடுத் துக் கொண்ட சிக்கலை முழு மூச்சோடு எதிர் கொண்டு அதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்கிற முனைப்பின்மை. அந்தந்த நேரத்துக்கு யார் வரு கிறார்களோ, அவரவர்களை வைத்துக் கொண்டு அவ்வப் போதைக்கு ஒரு போராட்டம் நடத்திக்கொள்வதும் இதற்கு காரணம்.

தமிழகச் சிக்கல்களின், தமிழீழச் சிக்கல்களின் தீர்வுக்கு தமிழகத்தில் கொள்கைப் பற்றும், செயலுறுதியும் மிக்க நிலையான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் யாரும் இதில் அக்கறை எடுத்துக் கொள்கிற மாதிரித் தெரிய வில்லை. என்றாலும் இதற்காக உணர்வாளர்கள் சோர்ந்து விடப் போவதில்லை. இருக்கிற புறச் சூழலில் கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தான் அடுத்த கட்ட நகர்வைப் பற்றி யோசிக்க வேண்டும். யோசிக்க முடியும் என்கிற அடிப்படையிலேயே செயல்பட வேண்டியிருக்கிறது. இதை யெல்லாம் இங்கே குறிப்பிடுவது, இந்த அமைப்பு களையோ, தலைவர் களையோ குறை கூறுவதற்காக அல்ல. ஒவ்வொரு வருக்கும் ஆயிரம் சிக்கல் இருக்கும். அதுவெல்லாம் நமக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆகவே அதற் குள்ளும் நாம் போக விரும்பவில்லை. என்றாலும் இதை நாம் குறிப்பிடுவதன் நோக்கம், யாரையும், எந்த அணியை யும் கண் மூடித் தனமாக நாம் ஆதரிக்க முடியாது. ஆதரிக்கவுமில்லை அவர்கள் பற்றிய புரிதலோடு, அவர்களது செயல் பாடுகளை சாத்தியப் பாடுகளை, வரம்புகளை உணர்ந்தே ஆதரிக்கிறோம் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

ஏனென்றால் நாம், அதிமுக, பாமக, மதிமுக, இகக, இகக(மா) அணியை ஆதரிக்கக் கோருகிறோம் என்றால் இவர்கள் வென்று வந்தால் உடனே மந்திரத்தில் மாங்காய் விழுவது போல ஏதோ பெரிய மாற்றம் வந்து விடும் என்பதற்காக அல்ல. காங்., திமுக அணி துரோக அணி, வஞ்சக அணி, அது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதைத் தங்கள் துரோகத் துக்கும், வஞ்சகத்துக்கும் தமிழக மக்கள் தந்த அங்கீகாரமாகத்தான் எடுத்துக் கொள்வார்கள். இந்த துரோகமும் வஞ் சகமும் கூடுதல் வேகத்தோடு கூடுதல் அகம்பாவத்தோடு தொடரும். அது தமிழக மக்களை மேலும் கொடுமைக் குள்ளாக்கும் என்பதால் தான்.

அதிமுக அணி வென்றால், குறைந்த பட்சம் அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும்போது, ஈழச்சிக்கல் சார்ந்து, தமிழக நலன் சார்ந்து சில நிபந்தனைகளை விதிக் கலாம். அதை நிறைவேற்றித் தந்தால் தான் ஆதரவு என்று கட்டளை விதிக் கலாம். அதற்கான வாய்ப்பு உண்டு. தவிரவும் தனி ஈழம் என்கிற இலக்கில் இந்த அணியின் பெரும் பான்மைக் கட்சிகள் இருக்கின்றன. ஜெ. தனி ஈழம்தான் தீர்வு என்பதை மீண்டும் உறுதியாகத் தெரிவித்திருக் கிறார். பாமக, மதிமுக ஏற்கெனவே அந்த நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள். இவை அனைத்தும் இந்நிலையில் இருக்க, இ.க.க இதற்கு இசைந்து வந்துவிடும். இகக(மா)தான் இதில் ராவடி. இப்போதைக்கு நாம் அதைப் பொருட் படுத்திக் கொள்ள வேண்டிய தில்லை. தேர்தலுக்குப் பின் அமையும் கட்சிகளின் பலத்தை வைத்து மற்றதைப் பார்த்துத் கொள்ளலாம்.

இவ்வளவையும் இந்த நேரத்தில் சொல்வதன் நோக்கம், எது பற்றியும் சரியான புரிதல் இல்லாமல் இயங்கித் தான் பலதில் நாம் ஏமாந்திருக்கிறோம். அதேபோல இது பற்றியும் புரிதல் இல்லாமல் கிடந்து நாளைக்கு ஏமாந்து போய்விட்டோம் என்று நம்மை நாமே நொந்து கொள்ளக்கூடாது என்பது ஒன்று. அதை விட ரொம்ப முக்கிய மானது, இதுபோன்ற அவநம்பிக்கை கள் விரக்தியில் எல்லாமே மோசம் என்று இரண்டு அணியையுமே புறக் கணித்து வாக்களிக்காமல் இருந்துவிடக் கூடாது என்பது மற்றொன்று, ஆகவே, எதிர் வருகின்ற தேர்த லில் காங் - திமுக அணியை வீழ்த்து வதை நம் இலக்காகக் கொள்ள வேண்டும். இதற்கு, இந்த அணியை வீழ்த்தும் வாய்ப்புள்ள அணிக்கு நாம் வாக்களிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் இரண்டுமே சரியில்லை என்கிற முடிவிலோ கோபத்திலோ வாக்களிக் காமல் இருந்து விடக் கூடாது. அதேபோல வலுவான எதிர்ப்பு அலையைத் தாண்டி, பயனற்ற வேறு ஏதாவது அணிக்கு வாக்களித்து நம் வாக்கைப் பயனற்றாகவும் ஆக்கி விடக் கூடாது. எனவே, இந்த நான்கு கருத்துகளின் அடிப்படையில் வரக் கூடிய தேர்தலைப் பயன்படுத்திக் கொள்வோம். திமுக - காங்கிரஸ் துரோக அணியை வீழ்த்துவோம். மாற்று அணியை வெற்றி பெறச் செய்து ஈழச் சிக்கலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயல்வோம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com