வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்களுக்கு உள்நாட்டில் உரிய அங்கீகாரம் வேண்டும்
மருத்.மு.அகிலன், எம்.டி
[குறிப்பு : அயல்நாட்டில் கல்வி பெறும் மருத்துவர்களால் இங்கு தங்கள் கல்விக் கொள்ளை ஆதிக்கம் பறிபோய் விடுமோ என்கிற அச்சத்தில், தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனங்கள், இந்திய மருத்துவக் கழகத்தை வைத்து, 2002இல் புதிய விதிமுறைகளை உரு வாக்கியதை எதிர்த்து வெளிப்படும் வேண்டுகோள் இது.]
தமது பிள்ளைகள் மருத்துவர்களாக வரவேண்டும் என்பதை மகத்துவமாக கருதும் பெற்றோர்கள் உள்நாட்டில் நடுத்தர கிராம மக்கள் 30-40 லட்சம் செலவு செய்து படிக்க வைக்க இயலாது என்ற காரணத்தால் அயல் நாடுகளில் நன்கொடை இல்லாமல் ஆண்டுக்கு ஒருமுறை கல்விச் செலவு மட்டுமே கட்டினால் போதும் என்ற வாய்ப்பு வரும்போது ஆகா, நமது பிள்ளைகளும் ஒரு நாள் மருத்துவராகலாம் என்ற சீரிய கனவில் அயல் நாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தார்கள்.
2002-ஆம் ஆண்டு வரை அயல் நாட்டில் கல்வி பயில அகில இந்திய மருத்துவக் கழகம் கீழ்க்கண்ட விதிமுறையை விதித்திருந்தது.
1. பன்னிரெண்டாம் வகுப்பில் 60 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
2. அயல் நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு இந்தியாவில் ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவராக பணிபுரிய வேண்டும்.
3. மருத்துவ பட்டம் பெறும் மருத்துவக் கல்லூரி உலக சுகாதார நிறுவனத்தின் மற்றும் இந்திய மருத்துவ கழகத்தின் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி கடந்த 2002ம் ஆண்டு வரை அயல் நாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவர்கள் உள் நாட்டில் உரிமம் பெற்று மருத்துவத் தொழிலை சிறப்பாக செவ்வனே செய்து கிராம மக்களும் பயன்பெறும் வகையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதன்படி ஆண்டுதோறும் அயல் நாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை குறிப்பாக ரஷ்ய கூட்டமைப்பு நாடுகளுக்கு அதிக மாணவர்கள் செல்வதை உணர்ந்ததும், இந்திய மருத்துவக் கழகத்தின் பின்னணியில் இருக்கும் அதிகார வர்க்கம், மற்றும் உள்நாட்டு தனியார் அமைப்புகள் ஆகியவை தந்த அழுத்தத்தினால் இந்திய மருத்துவக் கழகத்தையும் 2002-ல் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட வைக்கிறது.
அதாவது 2002-ஆம் ஆண்டிலிருந்து (சட்ட விதி 33 / 1956) அயல் நாட்டில் மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய மருத்துவக் கழகத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வினை எழுதிய பிறகு தான் பயிற்சி மருத்துவருக்கான ஆணை வழங்கப்படும் எனவும், ஆண்டுக்கு இரண்டுமுறை இந்த தகுதித் தேர்வு நடத்தப்படும் என்றும் இதில் 50 விழுக்காடு தேர்ச்சி பெறவேண்டும் என்றும் விதிக்கப் பட்டிருந்தது.
ஏற்கெனவே 7 ஆண்டுகாலம் மற்றும் பயிற்சி மருத்துவராக 1 ஆணடு காலம் மற்றும் தகுதி தேர்வு எழுத 1 ஆண்டு காலம் என்ற இந்த நடைமுறை சிக்கலை உணர்ந்த மாணவர்கள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் சட்டம் பிறப்பிக்கப்பட்டது என அதிகார வர்க்கம் இவர்கள் கோரிக்கைகளை அலட்சியப் படுத்தியதைத் தொடர்ந்து வேறு வழியில்லாமல் மாணவர்கள் அந்த தேர்வை எழுதத் தொடங்கினார்கள்.
ஆனால் அவர்களின் தேர்வு முறையோ அயல்நாட்டு மருத்துவ பட்டதாரிகளை அவ்வளவு எளிதாக தேர்ச்சி பெறவிடக்கூடாது என்ற நோக்கத்தில் அமைந்தது. அதாவது, வெளிநாட்டு தொழில் நுட்பங்களையும், கல்வி முறையையும் பயன்படுத்தும் இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு போன்ற நாடுகளிலிருந்து தொழில் நுட்ப உதவிகளை பெறும் இந்தியா, இந்திய அரசும், மருத்துவக் கழகமும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களின் பாசத்திற்கும், அன்பளிப்பிற்கு கட்டுப்பட்டு, அயல்நாட்டு மருத்துவப் பட்டதாரிகள் மீதான கட்டுப் பாடுகளை அதிகப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்து,
இந்தியாவிலே தனியார் கல்வி நிறுவனங்களில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பிலேயேயும் எங்களைப் போல 60 விழுக்காடு தேர்ச்சி பெற்று பணம் கட்டிதான் பயில்கிறார்கள். இந்திய அரசாங்கம் நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு இலவசமாக மருத்துவக் கல்வியை அளித்து பல லட்சங்களை செலவு செய்து அவர்களை மருத்துவர்களாக உருவாக்கி அவர்களுக்கு மேற்படிப்பும் தருகிறது.
ஆனால் அவர்களோ எல்லா சலுகைகளையும் பெற்றுவிட்டு USMLE, PLAB மற்றும் அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கான தேர்வினை எளிதாக தேர்ச்சி பெற்று தனக்கு இலவச கல்வி தந்த உள்நாட்டை மறந்து அதிக சம்பளம் கிடைக்கிறது என்று அமெரிக்காவிலும், லண்டன் மற்றும் ஏனைய வளர்ந்த நாடுகளுக்கு உழைக்கிறார்களே இதை எண்ணும் போது உண்மையிலேயே இந்திய அரசாங்கம் இவ்வளவு பாடுபட்டு செலவு செய்து அமெரிக்காவிற்கும், லண்டனுக்கும் தனது சேவையை செய்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது.
ஆனால் நாங்களோ சொந்த செலவில் எங்கள் நடுத்தர, கிராமத்து பெற்றோர்களின் வேர்வைத் துளியில் விழைந்த செல்வத்திலே அயல் நாட்டில் படித்து முடித்துவிட்டு தனது சேவையை உள்நாட்டில் தொடங்க “Study in abroad – service in India” என்ற முழக்கத்தோடு கலங்கரை விளக்கம்போல் நாடு வரவேற்கும் என்று தாயைக் காண வந்தால் இங்கு எங்களுக்கு இருக்கும் முட்டுக்கட்டைகளை எண்ணும்போது உண்மையிலே மனதளவில் தளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
நாங்கள் பயிற்சி மருத்துவராக ஓராண்டு காலமும், கிராமப்புற மக்களுக்கு ஓராண்டு காலமும் சேவை செய்ய தயராக இருக்கிறோம். எங்களுக்கு இந்த தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு 2002-க்கு பிறகு எற்படுத்தப்பட்ட சட்டத்தை மாற்றியமைத்து 2002-க்கு முன்பு இருந்தது போல், அயல்நாடு மருத்துவ பட்டதாரிகளின் நெஞ்சில் பாலை வார்க்க தாய்நாட்டிற்கு சேவை செய்ய உரிமம் வழங்க ஆவன செய்ய இந்திய அரசை அகில இந்திய வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பயின்ற மருத்துவர்கள் சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
கிராமப்புற மற்றும் நடுத்தர, பிற்படுத்தப் பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எத்தனையோ சட்டங்களை மாற்றி யமைக்கும் அரசு, பெருகிவரும் மக்கள் தொகையையும், மருத்துவர்களின் தேவையையும், கிராமப்புற சுகாதார மேம்பாட்டையும், அனைவருக்கும் மருத்துவ வசதி என்பதையும், கருத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பினை வழங்க வேண்டும் என்று எங்கள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு : இது தொடர்பாக அகில இந்திய அயல்நாட்டு மருத்துவ பட்டதாரிகள் சங்கத்தலைவர் திரு. நஜீருல அமின் இதே கோரிக்கையை முன்வைத்து பத்திரிகைகளுக்கு அறிக்கை தந்திருக்கிறார். அறிக்கையின் சுருக்கம் அடுத்த இதழில்.
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|