Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureShort Story
நீங்களே சொல்லுங்க சார்!!!

குந்தவை வந்தியத்தேவன்


வாங்க சார்! நீங்களே சொல்லுங்க சார், இவ பண்ணுறது சரியான்னு. யாரப்பத்தி பேசுறேன்னு கேக்குறீங்களா? இவதான் சார் கார்ல என் பக்கத்தில் உட்கார்ந்து வர்றாலே என் பொண்டாட்டி இவளைப் பத்தித்தான் சார் சொல்றேன். கல்யாணம் ஆகி ஒரு ஆறுமாசம் ஆகியிருக்கும் சார். அப்பப்ப சண்டை போட்டுக்குவம்னாலும் இரண்டு நாளெல்லாம் பேசாமயிருந்ததில்லை சார். அப்படி நான் என்ன தப்பு பண்ணேன்னு கேட்டு சொல்லுங்க சார்.

ஒண்ணுமில்ல சார், இரண்டு நாளைக்கு முன்னாடி நாங்க இரண்டுபேரும் வேலை பார்க்கிற அலுவலகத்தின் 10ம் ஆண்டுவிழா பார்ட்டி நடந்துது சார், எல்லாரும் தண்ணியடிச்சிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருந்தாங்க. நமக்கு தண்ணியடிக்கிற பழக்கமில்லாததால சும்மாத்தான் சார் உட்கார்ந்திருந்தேன், எம்மேல தப்பு கிடையாது சார், நான் இவக்கிட்ட அப்பவே கேட்டேன் நாம இரண்டுபேரும் சேர்ந்து டான்ஸ் ஆடலாமான்னு, முடியாதுன்னுட்டா சார் இவ. பரவாயில்லை தமிழ்நாட்டுல படிச்ச பொண்ணாச்சே வெக்கப்படுவாள்னு நானும் சும்மா விட்டுட்டேன்.

அப்ப அங்க ஏற்கனவே தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்த ஒரு பொண்ணு, எனக்கு கீழ வேலை செய்றவதான் சார், கொஞ்சம் அழகாயிருப்பா அது என்தப்பா. நேரா என்கிட்ட வந்து ஆட வரீங்களான்னு கேட்டா சார், நானும் இல்லை வொய்ப் இருக்காங்க முடியாதுன்னு தான் சார் சொன்னேன். இவத்தான் பெரிய இவமாதிரி போய்ட்டு வாங்கன்னு சொன்னா. சரி நானும் நம்ம பொண்டாட்டி ஆறுமாசத்திலேயே நம்மல நல்லா புரிஞ்சிக்கிட்டான்னு நினைச்சிக்கிட்டே ஆடப்போனேன் சார். அங்க புடிச்சதுசார் வேதாளம். அன்னிலேர்ந்து என்கிட்ட பேசுறதில்லை. நானா பேசினாலும் பதில் மட்டும் சொல்லிட்டு நகர்ந்துர்றா சார்.

ஆனா இன்னிக்கு காலைல பாருங்க சார், என்னோட பேவரைட் சட்டை சலவை பண்ணாம இருந்ததால் குளிச்சிட்டு சலவை பண்ணிக்கலாம்னு எடுத்துவச்சிட்டு குளிச்சிட்டு வந்துப்பார்த்தா, சட்டை கிட்ட இவ சுடிதாரும் உக்காந்திருக்கு. நான் அதையும் சலவை பண்ணித் தரணுமாம். தரதப்பத்தி ஒண்ணுமில்லை சார், அவசர ஆத்திரத்துக்கு ஆறுமாசத்தில பலதடவை பண்ணிக் கொடுத்துருக்கேன். ஆனா எப்பவும் நான் சலவை பண்ணுரப்ப பின்னாடியே நிப்பா சார், அப்பப்ப வம்பிழுத்துக்கிட்டே, நிறைய ப்ளீஸ், நிறைய தாங்க்ஸ், சில சமயம் கிஸ்ஸெல்லாம் கூட கிடைக்கும் சார். ஆனா இன்னிக்கு பாருங்க சார் ஆளையே பார்க்க முடியலை, நாம இதெல்லாம் கிடைக்கும்னா சார் சலவை பண்ணித்தர்றது. ஏதோ நம்ம பெண்டாட்டி உதவலாமேன்னு தானே. நானும் பண்ணி அங்கையே வைச்சிட்டேன் சார்.

Couple இப்பக்கூட பாருங்க சார் நான் சலவை பண்ணின சுடியைத்தான் போட்டிருக்கா, என் பக்கத்திலேதான் உட்கார்ந்திருக்கா. ஆனா அந்நியமா தெரியறா சார். சாதாரணமா எங்க வீட்டில் இருந்து ஒரு ஏழு கிலோமீட்டர் இருக்கும் சார் அலுவலகம். ஒழுங்கா காரை ஓட்டவிடமாட்டா சார் என்னை. ஈசிக்கிட்டே உக்காந்திருப்பா. அப்பப்ப ஸ்டேரிங்கை திருப்புறேன்னு ஒரே வம்புசார். இன்னிக்கு பாருங்க இன்னும் ஒரு இஞ்ச் தள்ளி உக்காந்தான்னா காரிலிருந்து கீழே விழுந்துடுவாங்கற மாதிரி உக்காந்திருக்கா. மனசு கஷ்டமாயிருக்கு சார். நான் இன்னிக்கு உட்டுக்கொடுத்திரலாம்னு இருக்கேன் சார். நைட்டு பேசாம நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுடலாம்னு இருக்கேன் சார்.

ஆனா சார் எனக்கென்னமோ அந்தச் சம்பவத்துக்கு முன்னாடிலேர்ந்தே ஒரு வாரமாவே அவ கொஞ்சம் சரியாயில்லாதது மாதிரி தோணுச்சு சார், பின்னாடி அது பிரமைன்னு நானே முடிவு பண்ணிக்கிட்டேன் சார். என்ன சார் பிரச்சனையிருக்க முடியும், சுத்தமா வரதட்சணையே வாங்கலை, நான் வேற இவளை காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இவ சொன்னாங்கறதுக்காக, அமெரிக்க வேலையெல்லாம் விட்டுட்டு இவளுக்காகவும் இவங்க குடும்பத்துக்காகவும் தான் சார் இந்தியாவுல இருக்குறதே; ஒரே பெண்ணா விட்டுட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டா. எங்கம்மா ஆரம்பத்திலேயே நீ பெண்டாட்டி தாசன் ஆய்ட்ட உன்கிட்ட இனிமேல் இருக்க முடியாதுன்னு அவங்க கட்டுன வீட்டுக்கு போய்ட்டாங்க சார். இவ பேர்ல தப்பில்லை சார், அம்மாத்தான் புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க.

சார் நீங்க அவள தப்பா நினைக்கக்கூடாது, நாங்க தனியா இருக்கணும்தான் அம்மா விட்டுட்டு போனாங்கன்னு நினைக்கிறேன். இப்பையும் தினமும் இரண்டு மணிநேரம் அங்கப்போய் அம்மா அப்பாவை பார்த்துட்டுத்தான் சார் வருவா. போனாப்போறா யார் சார் அவ எப்பிடிப்பாத்தாலும் எம்பெண்டாட்டிதானே. இன்னிக்கு நைட்டு ஒருவழியா சரி பண்ணிறணும் சார்.

ஆச்சு சார் ஒருவழியா பிரச்சனையை பேசித் தீத்தாச்சு சார். நான் ஏற்கனவே அன்னிக்கி நைட்டு அவக்கிட்ட பேசுறதா தீர்மானம் பண்ணியிருந்தனா, அம்மாவை பார்க்க போன இடத்திலேயே சாப்டுட்டோம் சார். அம்மாக்கிட்ட ரொம்பநேரம் என்னாத்தையோ தனியா பேசிக்கிட்டிருந்தா சார். ஒன்னுமே புரியலை, வீட்டுக்கு வந்ததுமே என்கிட்ட என்னவோ பேசணும்ங்கிற மாதிரியே நடந்துக்கிட்டிருந்தா. ஆனா பேசலை சார். நைட் டிரெஸ் போட்டுக்கிட்டு கட்டிலில் நான் வந்து உட்கார்ந்ததுமே,

"நான் உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணும்" அப்படின்னு ஆரம்பிச்சா சார். நானும் அப்படியே, "நானும் தான்." சொல்லிட்டு மனசிலயிருந்ததையெல்லாம் கொட்டிட்டேன் சார்.

"இங்கப்பாரு அகிலா, நாம இரண்டு பேரும் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். உனக்கும் என்னைப்பத்தி நல்லாவேத் தெரியும். அன்னிக்கு கூட நீ சொன்னதாலத் தான் நான் அவகூட ஆடுனேன். நீ என்னை நல்லா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சுத்தான் அப்பப்ப அவளைப் பத்தி உன்கிட்ட விவரிச்சது, அழகாயிருக்கா, நல்லா டான்ஸ் ஆடுவா அப்பிடினெல்லாம், அதுமட்டுமா சொன்னேன். கோடிங்கே அவளுக்கு எழுதத்தெரியலைன்னு கூடத்தான் உன்கிட்ட சொல்லியிருக்கேன். முன்னாடியே சொல்லிட்டேன் அன்னிக்கு தனி ரூமில் அவள் கோடை ரிவ்யூ பண்ணுறேன்னு கூட்டிக்கிட்டு போனதுக்கான காரணத்தை. பாவம் இப்பத்தான் சேர்ந்திருக்கா நாலுபேருக்கு முன்னாடி திட்டினா கஷ்டமாயிருக்கும்னு தான் தனியா கூட்டிட்டு போய்த்திட்டினேன். அந்தச் சமயத்தில நீ வந்துட்டதால நான் பண்ணினது தப்பாயிடாது.

ஒண்ணு நல்லாத் தெரிஞ்சிக்க, அவ ரம்பையா இருந்தாலும் ஊர்வசியாயிருந்தாலும் என் அகிலா முன்னாடி தூசிதான். உன்னைத்தவிர இன்னொரு பொண்ணை மனசாலக்கூட நினைக்கமாட்டேன். இவ்வளவுதான் இதுக்கு மேலையும் நீ என்னை நம்பமாட்ட, பேசமாத்தான் இருப்பேன்னா அது உன் விருப்பம். ஆனா என்னால நான் சோகமா இல்லாத மாதிரியெல்லாம் நடிக்கமுடியாது. எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கு, சொல்லிட்டேன்."

முடிச்சதும் சிரிக்கிறா சார், எனக்கு ஒண்ணுமே புரியலை சார், ஆனா கண்ணுல மட்டும் ஒரு சோகம் இருந்துச்சு சார். மெதுவா பக்கத்தில் வந்து உட்கார்ந்தவள் என்கையை அவள் கையில் எடுத்து வைச்சிக்கிட்டா சார்.

"என்னங்கயிது சின்னப்புள்ளத்தனமா. இதையெல்லாம் நினைச்சு குழம்பிக்கிட்டிருந்தீங்களா, உங்களைப்பத்திதான் எனக்கு நல்லாவே தெரியுமே. அவக்கூட டான்ஸ் ஆடினதாப் பிரச்சனை? உண்மையிலே அன்னிக்கு நீங்க டான்ஸா ஆடினீங்க ஏதோ ஆடணுமேன்னு ஆடிக்கிட்டிருந்தீங்க. அதைப்பார்த்து எனக்குக்கூட சிரிப்பு வந்துச்சு. இன்னுமொன்னு கோட் ரிவ்யூ மேட்டரைப்பத்தியும் நான் தப்பா நினைக்கலை. உங்களைப்பத்தி தெரியாதா காதலிச்ச என்னையே தொடமாட்டீங்க. என்ன கொஞ்சம் ஜொள்ளுவுடுவீங்க போட்டோஜெனிக், சிற்பம்னு ஏதாவது சொல்லிக்கிட்டு, அவளே எலிக்குஞ்சு மாதிரியிருக்குறா. அவ எனக்கு போட்டியா, சான்ஸே கிடையாது."

சொன்னா நம்புங்க சார் எனக்கு யாரோ நெஞ்சு முழுக்க பால் ஊத்துறமாதிரியிருந்துச்சு. சாதாரண சமயமாயிருந்தா ஜொள்ளுவுடுவீங்கன்னு சொன்னதுக்கே பிரச்சனை பண்ணியிருப்பேன். ஆனா இன்னிக்கு முடியுமா அதான்,

"அப்ப ஏண்டி இரண்டு நாளா முறைச்சிக்கிட்டே இருந்த, என்ன தான் பிரச்சனை." நான் கேட்டதும் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக்கிட்டிருந்தா சார். அப்புறம்,

"நான் இனிமேல் வேலைக்கு போகலை, ரிசைன் பண்ணலாம்னு இருக்கேன்." சொன்னதும் உண்மையிலேயே ஒண்ணும் புரியலை சார். அவ வேலைக்கு போகணும்னு அவசியமே கிடையாது. எங்க அம்மா அப்பா கவர்மெண்ட் வேலையில இருந்தவங்க. நானும் ஒரே பையன், காசுக்கு பிரச்சனையே கிடையாது. ஏன் இவங்க வீட்டிலையுமே நிறைய பணம்தான். இவத்தான் பிடிவாதமா வேலைக்கு போவேன்னு ஒத்தக்காலில் நின்னா. அதனாலத்தான் குழந்தை பெத்துக்கிறதக்கூட தள்ளிப்போட்டோம். இப்ப வந்து போகலைன்னு சொல்றா சார். நானும் ஏதாவது கேட்கணுமேன்னு,

"ஏன் போகலைங்கிற?"ன்னு கேட்டேன் சார். இன்னும் நல்லா பக்கத்திலே உட்கார்ந்துக்கிட்டு,

"நான் சொல்லப்போற விஷயத்தை கேட்டு நீங்க டென்ஷன் ஆகக்கூடாது, நான் சொல்றத அமைதியா கேட்கணும்" அப்படீன்னு பெரிய பீடிகையெல்லாம் போட்டா சார்., உண்மையிலேயே ஒண்ணும் புரியலை சார்.

"இங்கப்பாருங்க அன்னிக்கு பார்டியில என்னோட பி.எம் இருக்கானே கிரிஷ் கிமானி. நல்லா தண்ணியடிச்சிட்டு ஆடிக்கிட்டிருந்தானா. கொஞ்சம் நேரம் கழிச்சு நீங்க பக்கத்தில் இல்லாததப் பார்த்துட்டு வந்து பக்கத்தில் உட்காரந்தவன் மேலக்கையை வச்சான். எனக்கு வந்ததே கோபம் பளீருன்னு கன்னத்தில் அறைஞ்சிட்டேன். உடனேயே அங்கேர்ந்து போய்ட்டான்." சொல்லிவிட்டு என்னையே பார்க்கிறா சார். பொய்சொல்லமாட்டா சார் அவ. நிச்சயமா கிரிஷ் அப்படி நடந்திருந்தா அறைஞ்சிருப்பாத்தான் அவ. எனக்கு நம்பிக்கையிருந்தது. ஆனால் கோபமும் வந்தது.

"அதை ஏண்டி அன்னைக்கே சொல்லலை." நான் கோபமாய்க் கேட்க,

"இல்லை நீங்க என்னைத் தப்பா புரிஞ்சிக்க மாட்டீங்கன்னு தெரியும். ஆனா கிரிஷ் விஷயத்தில என்ன முடிவு எடுப்பீங்கன்னு சுத்தமா தெரியலை அதான் சொல்லலை. கிரிஷ் ரொம்ப நல்லவன் அன்னிக்கு தண்ணியடிச்சிருந்ததால அப்படி நடந்துக்கிட்டான். அடுத்தநாளே என்கிட்ட மன்னிப்பும் கேட்டான். ப்ளீஸ்ங்க புரிஞ்சிக்கோங்க. அவனைப்பார்த்தால் ரொம்ப பாவமாயிருக்கு, தப்பை உணர்ந்துட்டான். தினமும் என் மூஞ்சில முழிக்கிறதுக்கு வெட்கப்படுறான். பாவம், எனக்கு இந்த விஷயத்தை உங்கக்கிட்ட சொல்றதப்பத்தி பயமே கிடையாது நீங்க என்ன நம்புவீங்கன்னு தெரியும். ஆனால் கிரிஷ் விஷயமாத்தான் ஒரு முடிவு எடுக்கமுடியாம இருந்துச்சு. உங்கக்கிட்ட ஒரு விஷயத்தை மறைக்கிறோம்னதுமே என்னால சாதாரணமா பேசமுடியலை. உங்களை ஏமாத்துறதா ஒரு கில்டி பீலிங்வேற. ப்ளீஸ்ங்க நான் இனிமேல் வேலைக்கு போகலை. அவன்கிட்ட ஒண்ணும் கேட்காதீங்க. ரொம்ப பயப்படுறான் அவன். நீங்க ஒரு மெய்ல் அனுப்புனா, ஹாரஸ்மண்ட் கேஸ்ல அவனை நிச்சயமா தூக்கிறுவாங்க. ஆனா வேணாங்க." சொல்லிவிட்டு பாவமாய்ப் பார்த்தாள் சார்.

எனக்கு அவகிட்ட உண்மையிலேயே என்ன சொல்றதுன்னு தெரியலை. பாத்தீங்களா சார் எம்பொண்டாட்டி எவ்வளவு நல்லவன்னு. தண்ணியடிச்சிட்டு தப்பு பண்ணிட்டான் அதுக்காக வேலையை விட்டு தூக்கவைக்கணும் நினைக்காம, அவனுக்காக என்கிட்டயே பரிஞ்சு பேசறா பாருங்க சார். எனக்கு கோபமாத்தான் வருது கிரிஷ்மேல. ஆனா அகிலா சொல்ற மாதிரி ரொம்ப நல்லவன்தான் கிரிஷ். எனக்கும் தனிப்பட்ட முறையிலேக்கூட தெரியும் சார். போனாப்போகுது விட்டுடலாம் சார். மன்னிப்பது மனுஷப்பண்பு மறக்குறது தெய்வ குணம் சொல்லுவாங்க சார். நாம் மனுஷனாவாவது இருப்போம் சார்.

"அகிலா இதை நீ என்கிட்ட அப்பயே சொல்லியிருக்கலாம் பரவாயில்லை இப்பவாவது சொன்னியே. பிரச்சனையில்லை. இதுக்காகயெல்லாம் நீ வேலையை விடவேண்டாம். வேணும்னா நான் சொல்லி வேற ப்ரோஜக்ட்ல போட சொல்றேன். என்ன?" அப்பிடின்னு கேட்டேன் சார் நான். பின்ன என்ன சார் எவனோ ஒரு தண்ணியடிக்கிறவன் பண்ணினதுக்காக எம்பெண்டாட்டி வேலைக்கு போகாம இருக்கணுமா சார்.

ஆனா அவள், "இல்லைங்க கிரிஷ்னாலத்தான் வேலைக்கு போகமாட்டேன்னு சொல்றேன்னாலும் அவன் மட்டுமே காரணம் கிடையாதுங்க. எனக்கே வரவர இந்த வேலை போரடிக்குதுங்க. என்கூட படிச்சவளெல்லாம் இடுப்புல ஒண்ணு வயித்துல ஒண்ணுன்னு நிக்கிறப்ப எனக்கு மட்டும் தலையெழுத்தா. கண்ட கண்ட தண்ணியடிக்கிறவன் கிட்டல்லாம் நிக்கணும்னு. காசுக்கும் ஒண்ணும் பிரச்சனை கிடையாது. பின்னாடி திரும்பவும் ஆசைப்பட்டேன்னா நீங்க மறுக்கவா போறீங்க. அப்ப போய்க்கிறேன். என்ன சொல்றீங்க."

இப்படி கேட்டா நான் என்ன சார் சொல்றது நீங்களே சொல்லுங்க. இல்லை அவக்கேட்டு நான் மறுக்கத்தான் முடியுமா? ஊம்ன்னு சொல்லிட்டேன் சார். நீங்களும் அந்த முடிவுக்குத்தானே வந்திருப்பீங்க. சரி கதை கேட்டதுக்கு நன்றி சார்! நீங்க போய்ட்டு அப்புறம் வாங்க சார்.


- குந்தவை வந்தியத்தேவன் ([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com