Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureBook Review
புத்தக விமர்சனம்

வாழ்வியல்: ஃபஜிலா ஆசாதின் மந்திர மொழிகள்!!
தாஜ்


"வாழ்க்கைங்கறது ஒரு பாம்பு கட்டம் மாதிரிதான். சின்ன சறுக்கல் பக்கத்துலேயே பெரிய ஏற்றம் இருக்கலாம். தப்பான ரூட்டும் மிகப் பெரிய சந்தர்ப்பத்தை தரலாம். வாழ்க்கையோட சுவாராஸ்யமே அதோட சஸ்பென்ஸ்தான். நம்மை மீறி விஷயங்கள் நடக்கும்போது, அதை நமக்கு சாதகமா பயன்படுத்திக்கிறதிலேதான் வெற்றியின் சூட்சுமம் இருக்கு."
- ஃபஜிலா ஆசாத்.M.C.S.E., M.CD.B.A., C.E.H., C.C.N.A., M.B.A.,

'நிலவு ததும்பும் நீரோடை' என்கிற தனது கவிதைத்தொகுப்பின் வழியே வாசகர்களுக்கு அறிமுகமான சகோதரி ஃபஜிலாஆசாத், இந்த முறை, வாழ்வியல் சார்ந்த சிக்கல்களில் இருந்தும், திணறல்களில் இருந்தும் நம்மை நாம் விடுவித்துக்கொள்ள எளிய வழி முறைகளாக 'அலாவுதினின் அற்புத விளக்கு!' என்று தொடங்கி பல தலைப்புகளில் மிகவும் லாவகமான சூத்திரங்களை சொல்லி இருக்கிறார். சமீபத்தில் ஓர் தினசரி ஞாயிறு மலரில் வாரம் வாரம் அவர் எழுதியவைகள் அத்தனையும் தொகுப்பாய் கிடைக்க வாசித்தேன். வித்தியாசமாகவும், கவனிப்பிற்குறியதாகவும் தெரிந்தது.

எண்ணங்கள், முயர்ச்சி, தன்னம்பிக்கை என்கிற செய்திகளைச் சொல்ல வந்த எழுத்தாளர்கள் நம்மில் அதிகம். அவர்கள் கணக்கில்லாது எழுதி குவிப்பதும் வருடம் தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு தமிழ்ப் பதிப்பகமும் இந்த வகைப் புத்தகங்களை அரை டஜனாவது வெளிக் கொண்டுவந்திருக்கிறது. அவை அத்தனையும், படித்த நாழிக்கு வாண்டி வண்டியாய் பணத்தைச் சம்பாதித்து, அதைப் பத்தாக்கி செல்வத்தை பெருக்கிவிடலாம், இமயத்தில் வெற்றிக்கொடி நாட்டி விடலாம் என்று சத்தியம் செய்கிற புத்தகங்கள். இதற்காக நாம் செய்ய வேண்டியதெல்லாம், அந்த வகைப் புத்தகத்தை வாசித்து முடித்த நாழிக்கு கனவு காண்பதுதான். விடிகிறப் பொழுதிலேயே நம் வாழ்வும் விடிந்து விடும்.

தவறும்பட்சம் வாழ்வின் போக்கில் சில பல காய்களை நகர்ந்தினால் போதும். வெற்றிதான்! அப்படித்தான் அந்தப் புத்தகங்கள் சத்தியம் செய்கின்றன. புத்தகம் படிக்கும் பழக்கமுடைய நம் சகோதரத் தமிழர்கள், நிச்சயம் அந்த வரிசையில் இரண்டு புத்தகங்களையாவது வாங்கிப் படித்திருப்பார்கள்! ஆனால், அந்த புத்தககாரர்கள் நிச்சயித்துக் கூறிய சத்தியத்தைதான் இன்னும் தரிசித்திருக்க மாட்டார்கள்! தன்னம்பிக்கை, எண்ணம் என்பதான புத்தகம் எழுதுகிற சில எழுத்தாளர்களோடு எனக்கு நட்பு உண்டு. இதை நான் இன்னும் அழுந்த சொல்லலாம்; அந்த அளவிற்கு ஈடுபாடுகளுடன்கூடி மிளிர்ந்து விளங்கும் நட்பு அது! அவர்களில் ஒருவர் எண்ணங்களைப் பற்றி விசேசமாக எழுதியவர். அந்தப் புத்தகங்கள் வெளிவந்த காலத்தில், சினிமா பாட்டுப்புத்தகம் மாதிரி பெட்டிக் கடைகளில் எல்லாம் விற்று சாதனைப் படைத்தது! வாசிக்கப் பழக்கப்பட்ட தமிழர்கள் எல்லாம் அன்றைக்கு அதைப் வாசித்தார்கள்/ விவாதித்தார்கள்/ ஒப்புதலும் செய்தார்கள்.

அந்த நிகழ்வையொட்டிப் பார்த்தோமேயானால், இன்றைக்கு தமிழகம் பணம் படைத்தவர்களால், தொழில் அதிபர்களால் நிரம்பி வழிந்திருக்க வேண்டும்! ஆனால், யதார்த்தம்....? என்றைக்குமே அது கற்பனையின், கனவுகளின் நேர் எதிர்!

சகோதரி ஃபஜிலாஆசாத் அவர்களது எழுத்தின் அறிவு சார்ந்த முனைப்புகளில் எனக்கு எப்பவும் ஓர் ஈர்ப்பு உண்டு! நிரம்ப படித்தவர், கவிதை மணம் கொண்டவர், அதனால்தான் என்னவோ எப்பவும் நுட்பங்கள் மீதே பயணிக்கிறார். இந்தக் கட்டுரைகளில் அவரது நுட்பம் இன்னும் விசாலமாக இருக்கிறது. அடுத்த வினாடியில் நம்மை பணம்படைத்தவர்களாக ஆக்க ஆசை காட்டும் உத்திகளின் பக்கம் மறந்தும் அவர் போகவில்லை.

சகோதரி ஃபஜிலாஆசாத் தான் சொல்லவந்ததை எல்லோருக்கும் புரிகிற பாங்கில், பல தலைப்புகளில் / பல காட்சிகளை அமைத்து, ஒருவர் இன்னொருவருடன் உரையாடும் விதத்தில், சிடுக்கில்லாமல் சொல்லி இருப்பது இங்கே விசேசம். உரையாடல்களில், தென் மாவட்ட கடற்கரையோர வட்டார வழக்கு கொண்ட ஒரு மொழியிலும், சரளமான ஆங்கில கலப்பிலுமாக பதிவு செய்திருக்கிறார். அவரது வட்டார வழக்கு மொழி ரொம்பவும் வித்தியாசம் கொண்டதாக இருக்கிறது. தவிர, கட்டுரை நெடுகிலும் நகைசுவை உணர்வு ததும்ப, அதனூடே விசயதானங்களை எளிதாய் நகர்த்தி காமித்திருக்கிறார்.

வாழ்வின் யதார்த்தத்தை முன்வைத்து, நாம் எதிர் கொள்ளும் சிக்கல்களைத் தவிர்க்க நட்பான குரலில் அவர் சில வழிகளை சொல்கிறார். வாழ்வின் சிக்கல்களை கணக்குகளாக மாற்றி, அதற்கு தீர்வுகாணும் சூத்திரங்களை முன்வைத்து, நம்பிக்கைக் குரலில் தைரியம் தந்து, சில உதாரணங்களின் மூலம் அதனைக் கூட்டிப் பெருக்கி வகுத்தும் காட்டி இருக்கிறார்! அவர் கூறும் அத்தனையும் நம்மை யோசிக்க வைப்பதென்னவோ நிஜம்.

"எந்த ஒரு பிரச்சினையுமே தலைக்குள்ளே இருக்கிற வரைக்கும்தான் பிரச்சினை.... அதையே ஒரு பேப்பரில் எழுதிப் பார்த்தா அது ஒரு கணக்கு! மனசுக்குள்ளேயே நீ ஒரு பிரச்சினை தீர்க்குறதுக்கு யோசிக்கும்போது உன்னால அதுக்கு சரியான தீர்வு காண முடியாம உன்னைச் சுற்றி நடக்கிற எல்லாமே உனக்கு டென்ஷனாவே தெரியும். அதே சமயம் அதே பிரச்னையை பேப்பர்லே எழுதிப் பார்க்கும் போது, அது ஒரு கணக்கு மாதிரி தீர்க்கக் கூடிய ஒண்ணுதான்னு நம்ம மனசு நம்ம மூளைக்கு அதை ஷிப்ட் பண்ணிடும். ஏன்னா நம்ம மூளையிலே லாஜிக்கல் திங்கிங்கும், எழுத்தும் ஒரே பகுதியிலேதான் இருக்குது. நம்ம ஒரு பிரச்னையை எழுதி பார்க்கும் போது மூளையோட அந்தப் பகுதி ஆக்டிவேட் ஆகி அந்த பிரச்னைக்குரிய லாஜிக்கான தீர்வுகள் தோண ஆரம்பிச்சிடும்."

இது குறித்து இன்னொரு இடத்தில் மிக உறுதியாக, ஆறுதலான வார்த்தையாக மேலும் ஒன்றைச் சொல்கிறார். "பொதுவா எல்லா பிரச்சினையோட தீர்வும் சுலபமானதாத்தான் இருக்கும். ஆனா, நம்ம அறிவு சுலபமான தீர்வை ஏத்துக்கறதில்லை. நமக்கு பதில் கிடைக்காத கேள்வி நிச்சயம் நமக்குள்ளே எழப் போறதே இல்லை. இதை புரிஞ்சிக்கிட்டாலே பாதிபிரச்சினை தீர்ந்துடும்." அவரது இந்த கற்றறிந்தக் கணிப்பு சரி எனத் தோன்றுவதோடு ஆறுதல் தருவதாகவும் இருக்கிறது.

ஒட்டு மொத்தப் பிரச்சினைகளுக்கான ஆசுவாசம் கொள்ளத் தகுந்த ஒரு தீர்வை, எளிய புரிதலில் நம் பயத்தைக் கலையும் சகோதரி, தொடர்ந்து வாழ்வின் வெற்றிக்கு சில சூத்திரங்களை முன் வைத்திருக்கிறார். அவரது இந்த வகைச் சொற்கள், வாழ்வின் முன்னேற்றம் குறித்து தமிழில் பல நூல்களை எழுதிய நம் ஜாம்பவான்களிடமிருந்து வித்தியாசப்பட்டுத் தெரிகிறது.

"வெற்றிங்கறது எவ்வளவு வேகமா உழைக்குறோம்கறதுல இல்லை. எவ்வளவு விவேகமா உழைக்குறோம்கறதுலதான் இருக்கு. நம்ம மூளை எந்த ஒரு செயலயுமே தொடர்ந்து செஞ்சிக்கிட்டிருந்தா அது சம்பந்தமா சிந்திக்கறத நிறுத்திடும். அப்புறமா அந்த வேலைல ஆக்கபூர்வமான மாற்றங்கள எதிர்பார்க்க முடியாது."

"விளையாட்டு வீரர்களை பார்க்கலாம், கிரிகெட் வீரர் ஃபுட்பால் பயிற்சி எடுப்பார், செஸ் வீரர் ஸ்விம்மிங் பயிற்சி எடுப்பார்... அது ஏன் தெரியுமா... மாற்றங்களை நம்ம மூளை எதிர்பார்க்குது. அது நமக்கு ஒரு ரிலாக்சேசனா அமையுது. திரும்ப நம்ம வேலையை புதுப் பார்வையோட தொடர முடியுது..."

"ஒரு நல்ல ஐடியா தோன்றியவுடனே ஆட்டோகிராஃப்க்கு அலைமோதுவாங்கன்னு எதிர்பார்த்துர்றோம். பொறுமை வேணும். அரோக்கியமான குழந்தை பெற்றாலும் அப்பாடான்னு விட்ருவாங்களா? அது நடக்க, பேச, நல்லபடி வளர்க்க இன்னும்ல கேர் எடுக்கணும். என்ன ஐடியாவானாலும் சரி, அதை 'பப்ளிக்'குக்கு கொண்டு வர்றதும் பாப்புலரைஸ் பண்றதும் ஒரு பிராஸஸ்தான். நாம என்ன பண்றோம்னா... குழந்தை பெற்றவுடனே எழுந்து நடக்கனும்னு ஆசைப்படுறோம் நம்ம ஐடியாவை மத்தவங்க சுலபமா ஏற்றுக்கிறனும்னு எதிர்பார்க்கிறோம். அதோட வெற்றியை உடனே பருக பரபரக்கிறோம். அந்த ஒன்றில் வர்ற கஷ்டங்களை எதிர் கொண்டு வெற்றி கொள்ளாம, கொஞ்சமும் நிதானமும் இல்லாம சட்டு சட்டுன்னு முடிவெடுத்துர்றோம்."

"எந்த ஒரு செயல்லேயும் அடுத்த லெவலுக்கு போகும் போது, நம்ம மனசும் உடம்பும் அதை மறுக்கத்தான் செய்யும். ஏதோ நம்மாலே எதுவுமே முடியாதேங்கிற மாயை எழும். வலியும் வேதனையும் தாங்க முடியாமே நம்மை படுத்தும். ஆனா இதை தாங்கக் கூடிய சக்தி நம்ம 'டி.என்.ஏ' விலே இருக்குதுங்கறத தெரிஞ்சுக்கிட்டோம்னா நமக்கு அது ஒரு பெரிய விஷயமாவே தெரியாது. வலியையும் வேதனையையும் தாங்கி கூட்டைவிட்டு வர்ற சின்னப் புழுதானே அழகான வண்ணத்துப் பூச்சியா வானத்திலே சிறகை விரிக்குது."

வாழ்வின் வெற்றி குறித்து தொடர்ந்து பேசும் சகோதரி ஃபஜிலாஆசாத், மேலும் சில ஏற்புடைய விசங்களை பல தலைப்புகளின் கீழ் மிக அழகாக சொல்லிச் செல்கிறார். வாழ்வின் ஓட்டத்தில் பழமையில் தேங்கிவிடாது நம்மைச் சுற்றி புற உலகில் ஏற்படும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள சிபாரிசு செய்கிறார். இன்னும் வாழ்வில் நமக்கு நிதானத்தின் தேவை குறித்தும், குறைகளை கலைய வேண்டிய அவசியம் குறித்தும், குற்ற உணர்ச்சியை விட்டொழிக்க வேண்டியதைப் பற்றியும் நுணுக்கமாக பேசுகிறார்.

"மாற்றங்களை பயமில்லாம ஏத்துக்கறதுக்கு ஒரே வழி, நிறைய தெரிஞ்சுக்கறதுதான்னு அறிஞர்கள் சொல்றாங்க. எப்படி நம்ம ஜீன்ல இயல்பாவே மாற்றத்துக்கு எதிர்ப்பு இருக்குதோ, அதே மாதிரி நம்ம மூளைல புதுப்புது விஷயங்களையும் இடங்களையும் தெரிந்து கொள்ளனும்கற தேடல் இயல்பாவே இருக்குது. நம்ம அறிவை பெருக்கிக்கிட்டோம்னா எந்த ஒரு மாற்றத்தையும் சட்டுன்னு எதிர்க்காம அதன் விளைவுகளை ஆராய்ஞ்சுப் பார்க்க ஆரம்பிச்சுடுவோம். அப்படி பண்ணும்போது நல்ல விஷயங்கள விரைவா ஏத்துக்க முடியும்."

"உனக்கு எப்ப ஒரு பொருளுக்கு தேவை ஏற்பட்டுச்சோ, அப்ப நிச்சயம் அந்தப் பொருளோ, அல்லது அந்த தேவையை பூர்த்தி செய்யக் கூடிய அதே மாதிரி பொருளோ உன்னை சுத்திதான் இருக்கும். இது இயற்கையின் நியதி. நீ கொஞ்சம் நிதானமா இருந்தா உனக்கே புரியும். நம்ம நிதானம் தவறும் போதுதான் எல்லாக் குழப்பமும் ஏற்படுது. வார்த்தை புதிர் விளையாடும்போது கேள்விக் குறியா பதில் குழம்பியிருக்கலாமே தவிர, குடுக்கப்படாமே இருக்காது இல்லையா?! அதே மாதிரி, சின்னதோ பெரிசோ எந்த தேவை ஏற்பட்டாலும் நிதானமா உன்னை சுத்திப் பாரு, நிச்சயம் உன் தேவையை பூர்த்தியாக்கக் கூடிய ஏதோ ஒண்ணு உன் கண்லே படும் அல்லது உன் அறிவுக்கு புலப்படும்."

"இருளைத் துரத்தி வெளிச்சத்தை கொண்டுவர முடியாது. வெளிச்சத்தைப் பரப்பிதான் இருளைத் துரத்தனும். ஒவ்வொரு சின்ன தவறுகளையும் இப்படி யோசிச்சிப் பார்த்துக்கிட்டு இருக்காம இனி ஒவ்வொரு நாள் தூங்கப் போகும்போதும் இன்னைக்கு நல்லதா, அறிவுப்பூர்வமா, என்ன செய்தோம்னு யோசிச்சி, கடவுளுக்கு நன்றி சொல்லு. குறுகுறுப்பு இல்லாத சந்தோஷம் எது தந்ததுன்னு சின்னதா ஒரு 'ஃப்ளாஸ்பேக்' போ, உன் மனசுக்குள்ளே ஒரு நிதானமும் சந்தோஷமும் வரும். எந்த ஒரு விஷயத்தையுமே சரி பண்ணனும்னா அதையே கிளறிட்டு இருக்காம அதை விட்டு மத்த விஷயங்களை கவனிக்க ஆரம்பிச்சுடனும். உள்ளங்கையிலே வச்சி உத்து உத்து பார்த்தா ஒரு சின்னக் கல்லும் பாறாங்கல்லாதான் கனக்கும்."

"எந்த வேலையையும் நாம கவனமா செய்யவேண்டியது ரொம்ப முக்கியம்தான். ஆனா அதுக்காக நாம தப்பே செய்யாம இருக்க முடியாது. வாழ்க்கையே டிரையல் அண்ட் 'எர்ரர்' தான். எந்த ஒரு தோல்வியையும் ஒரு பாடமா எடுத்துகிட்டா நீ இந்த மாதிரி குற்ற உணர்ச்சிக்கு ஆளாகி உன் மூளையிலே இருக்கிற 'ஃபீட் பேக் மெக்கானிஷ'த்துக்கு வேலைகொடுக்க மாட்டோம். அதும் இப்படி நம்மை முடக்கிப் போட முயற்சி செய்யாது."

"நம்ம 'கான்ஷியஸ் மைண்ட்'லே இருக்கிற ஃபீட்பேக் மெக்கானிஷம் நாம என்ன செஞ்சாலும் அதுக்கு ஒரு கமெண்ட் தந்து கிட்டே இருக்கும். அதுக்கு நாம இடம் குடுக்கும் போது, இனி நாம என்ன செய்யனும்கிறதை விட்டுட்டு என்ன செஞ்சிருக்கோம்கிறதை அலச ஆரம்பிச்சிடுவோம். சுருக்கமா சொன்னா நிகழ்காலத்தை விட்டுட்டு, இதை இப்படி செஞ்சிருக்கலாமோ, இது ஏன் இப்படி நடந்துச்சின்னு கடந்த காலத்தையே குற்ற உணர்ச்சியோட சுத்தி சுத்தி வர ஆரம்பிச்சிடுவோம். இதற்கு இடம் குடுத்தா, நம்மை 'டிப்ரஷனாக்கி', கொஞ்சம் கொஞ்சமா நம்மசக்தியை அப்படியே உறிஞ்சி, நம்மை ஒண்ணுமில்லாம செஞ்சிடும். இந்த 'கில்டி பீலிங்'லேயிருந்து விடுபட, நம்மோட 'வேல்யூ சிஸ்ட'த்தை விரிவாக்கிக்கனும். அதை நம்மோட பொது அறிவை பெருக்கிக்கறது மூலமாவும், இந்த உலகத்தை பற்றின பார்வையை விசாலமாக்கிக்கறது மூலமாவும்தான் பண்ண முடியும்."

வாழ்வின் வெற்றிக்கான யதார்த்த கணக்குகளை போட்டுக்காட்டி விளக்கிய சகோதரி, நமக்கு வந்து சேரும் விமர்சனங்களையும், சீண்டல்களையும் நாம் எவ்விதம் எதிர்கொள்ளவது என்பது பற்றி துல்லியமாகப் பேசுகிறார்.

"நமக்குப் புடிச்சமாதிரி மட்டும்தான் மத்தவங்க பேசனும்னு நாம எதிர்பார்க்க முடியுமா என்ன?! நாமதான் எந்த சூழ்நிலையிலேயும் எதை எடுக்கனும், எதை விடனும்ங்கற தெளிவான சிந்தனையோட இருக்கனும். எந்த விமர்சனங்களும் சீண்டல்களும் நம்மை பாதிக்காத வண்ணம் நம் மனசுக்குள்ளேயே ஒரு கவசத்தை உருவாக்கிக்கணும்... பின்னாளில் அந்த விமர்சனங்களே நம்மை இன்னும் இன்னும் பண்பட்டவங்களா மாற்ற உதவ ஆரம்பிச்சுடும்."

இதை இப்படிச் சொன்ன சகோதரி, அடுத்தவர்கள் கூறும் வீண் குறைகள் நம்மை பாதிக்காத வண்ணம் தற்காத்துக் கொள்ளவும் ஓர் உபாயம் சொல்லித் தருகிறார். அவர் சொல்லி இருக்கிற அந்த உபாயம் விசேசமாகவே இருக்கிறது.

"பொதுவா மனித மனசு எந்த ஒரு சூழநிலைலயும் இரண்டு விதமான நிலையைத்தான் எடுக்கும். ஒண்ணு அஃபென்ஸிவ் அல்லது டிஃபென்ஸிவ்... நமக்கு வேண்டியவங்க ஒரு செயலைச் செய்யும்போது டிஃபென்ஸிவ் நிலையை எடுக்கும் மனசு அதே செயலை வேற்று ஆளுங்க பண்ணும்போது அஃபென்ஸிவா மாறிடும். யாராவது நம்மை குறை சொன்னா சட்டுன்னு அவங்க நமக்கு ரொம்ப வேண்டிய ஆளுன்னு திரும்ப திரும்ப மந்திரம்போல நம்ம மனசுக்குள்ளேயே வேகமா சொல்லிக்கணும். ஒரு பத்து விநாடி எதிரில உள்ளவங்க பேசுறது காதில விழாதவாறு நம்ம மனசுல இந்த மாதிரி நினைச்சுட்டோம்னா அதுக்கப்புறம் அவர் என்ன பேசுனாலும் அது நம்மை பாதிக்காது."

வாழ்வின் வெற்றிக்கு நிறைய புத்தகங்களைப் படித்து நம்முடைய 'வேல்யூ சிஸ்ட'த்தை விரிவாக்கிக் கொள்ள பல இடங்களில் அறிவுறுத்தும் சகோதரி, குறிப்பாய் உலகத்தலைவர்களின் எழுத்துகளைப் படிக்கும்படி மறைமுகமாக சிபாரிசு செய்கிறார்.அதைத் தன் தோழியின் சொல்லாக பதிந்திருக்கிறார். அந்த தோழியின் கூற்று ரசனையாகவும், கவிதையாகவும், கவனம் கொள்ளத்தக்கதாகவும் இருக்கிறது. நல்லச் செய்தியை மனதில் சட்டென்று உட்கார வைக்கும் அவரது யுக்தி பாராட்டுதலுக்குறியது.

பல பெரிய தலைவர்களுடைய ஆட்டோபையோகிராபிகளை படிக்கும் என் தோழி சொல்லுவா..."எனக்கு காலை காப்பிக்கு கலாமும், பகல் சாப்பாட்டுக்கு பில்கேட்ஸும் கம்பேனி தர்றாங்க, மஹாத்மாவும் மதர் தெரசாவும் என் மனசை நல்லா பார்த்துகுறாங்க, என்ன பிரச்சிசைன்னாலும் லிங்கனிடமும்; லீ-க்வாந்யூவிடமும் சமர்த்தா கருத்துக் கேட்டுப்பேன்னு சொல்லுவா...."

இந்தக் கட்டுரைகளின் உரையாடல்களில் இருவர் இருவராய் பலதரப்பு மக்களை (அனேகமாக அந்த மக்கள் அவர் நட்பு கொள்ளும் மக்களாக, உறவினர்களாக இருக்கலாம்) முன் நிறுத்தும் சகோதரி, அவர்களின் குணாதிசயங்களையும் அவர்களது பிரச்சனைகளையும் கோடிட்டுக் காட்டி, தான் சொல்லவரும் பிரச்சனைகளின் தீர்வை அந்த இருவரில் ஒருவர் பக்கம் நின்று பேசுகிறார். சில கட்டுரைகளில் தனது பிறந்த மண்ணின் காட்சிகளையும், வேறு சில இடங்களில் படித்து வளர்ந்த வெளிநாட்டு மண்ணுக்குரியக் காட்சிகளையும் கட்டுரையின் பின்புலமாக கொண்டு வருகிறார். பிரச்சனைக்கு தீர்வு சொல்ல கட்டுரைக்குள் இவர் கொள்ளும் ஆவலும், துரிதமும் சாதாரணமானதல்ல!! தேர்ந்த மனிதநேயம் கொண்டவர்களுக்கு மட்டுமே அது சாத்தியம்.

வளரும் நாடுகளில் 'மைண்ட் ஒர்க்ஸ்ஷாப்' பலவடிவங்களில் செயல்படுவதை பலர் அறிந்திருக்க கூடும். அங்கே படித்தவர்கள் மத்தியில் அதற்கு பெருத்த ஆதரவு உண்டு. துறைசார்ந்த வல்லுனர்களால், இந்த ஒர்க்ஸ்ஷாப் நட்சத்திர ஓட்டல்களிலேயே நடக்கிறது. நாட்கணக்கில் அமர்ந்து, அதற்கென ஆகும் அதிகப்படியான டாலர்களையும் பொருட்படுத்தாமல் பலரும் பயிலவே செய்கிறார்கள். மனிதர்கள் இப்படி தங்களது மூளையை தீட்டிக் கொள்ளும் நாகரீகம் தற்சமயம் நம்நாட்டிலும் பரவத் தொடங்கி இருக்கிறது. அதிகப்படியான செலவு பிடிக்கும் இந்தப் பயிற்சி நம் நாட்டின் நடுதரவாசிகளுக்கும், ஏழ்மைக் கொண்டவர்களுக்கும் நிச்சயம் எட்டாகனியே! இதையெல்லாம் யோசித்தவராக, சாதாரண மக்கள் புழங்கும் பத்திரிகையில் அப்படியான பாடங்களை பயிற்றுவிக்க சகோதரி முன் வந்திருப்பது அவரது மனிதநேயத்திற்கு மற்றுமோர் சான்று!

வாழ்வின் முன்னேற்றத்திற்கு வியூகம் கூடிய செயல்பாடுகளை தொடர்ந்து வலியுறுத்தும் சகோதரி, இன்னொரு ஆதாரமான செய்தியை இப்படிச் சொல்கிறார்... "எத்தனை முறை பறந்த விமானமா இருந்தாலும், ஒவ்வொரு 'டேக் ஆப்' க்கு முன்னாலேயும் ஓடித்தானே பறக்கனும்." ஆம்.... ஓடித்தான் பறக்கனும்! ரொம்பச் சரி! ஓட முடியாதவர்கள் கூட ஒப்புக்கொள்ளும் வார்த்தைகள்!

- தாஜ் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

பதிப்பாளர்களின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com