 |
கட்டுரை
மலையாங்குளம் வே. ராமசாமி
எருக்கிலையும்
இலந்தையும் தவிர
எல்லாமிழந்தது
பூமி
தீனியில்லாத
சினைப்பசுவொன்று
குப்பையில்
ஊதிச் செத்தது
ஊர்
காக்கிற அம்மன்
கட்டமன் ஆனாள்
ஆல்
தங்காத ஊரில்
அருகம்புல்
தங்குமா?
பனை
தங்காத ஊரில்
பச்ச நெல்லு
தங்குமா?
சொலவடை
சொல்கிற
பெருசுகள் மனசு
கூமுட்டையென
கலங்கிக் கிடக்கும்
பிள்ளைகள் வாழ்வு நினைத்து
அபலை
கண்ணென
மஞ்சள் பூத்தது
வெள்ளாட்டின் கண்
முன்னோர்
ஆத்மா வாழும்
பெருமரங்கள்
மொட்டையாகின
ஊரில் பாதி
கிரையமானது
ஜெயவிலாஸ் மில்லுக்கும்
ஈரோட்டுக்காரனுக்கும்
உச்சந்தலை
ஊன்றி நின்றாலும்
தலை நனையாத
கிணறுகள் காய
தரைதளிர்த்துக்
கிடக்கின்றன
பரம்பரை நிலங்கள்
எலிப்பொந்தில்
இறங்கிய நீரென
புகுந்த வறுமையில்
திசைக் கொருவராக
தெறித்தோடினர்
வாரிசுகள்
பழகிய காடுகளில்
ஆவிவெந்து
அலைகிறார்கள்
அன்னைமார்கள்
- வே. ராமசாமி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|