 |
கட்டுரை
இலைப் பிரகடனம் வே. ராமசாமி
முன்னதாக
இலை
கடலாகியிருக்க வேண்டியது
வானின் இடத்தில்
வந்திருக்க வேண்டியதும்
அதுவே
ஒருமலை போல்
விம்மிப் புடைக்க
இயற்கை
பச்சை இலையைத்தான்
தேர்வு செய்திருக்கும்
நதியெனக் கிளம்பிய
இலையொன்று
ஆதிநாளில்
ஸ்தம்பித்து திகைத்த போது
முதுகினடியில் நரம்பு ரேகைகளைப்
பெற்றுக் கொண்டது
புளிச்சிக் கீரைகள்
தலைவிரித்த
தோட்டத்தினுள் நின்று
அறிவிக்கிறேன்
இலைகளே வானம்
முன்னாளில்
ஆத்தா-என்
தலையில்
பேன் பார்த்த போது
விரல்களாய் நீண்டன
இலைகள்
முன்னத்தங்கால்
கிளை போட்டு
பின்னத்தங்கால்
தரையூன்றி
அவ்
வெள்ளாடு குடிப்பது
இலைகளின்
முலைப்பால்
இந்த
அலைவீசும் வாழ்வில்
இப்படி இலைகளில்
ஏறிக் கொண்டுதான்
அவ்வப்போது
தப்பிக் கொண்டிருக்கிறேன்
II
இலைகள்
என்னை
லேசில் விடுவதாயில்லை
கனவில்
நுழைந்து விட்டன
அழகிய நடிகையென
தன் ரூபங்களை
காட்டி மயக்கின
ஓரிலையில்
கோடிப்பக்கங்கள் உள்ள
புத்தகம் ஒன்று
புதைந்திருந்தது
எனது
நரம்பெல்லாம்
இலைகள்
அரும்பின
விடியலில்
என்னுடல்
கொடியாகி இருந்தது
இடையன்
தன் ஆடுகளுக்கு
என்னை
கட்டுவானாக
- வே. ராமசாமி
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|