 |
கவிதை
உறுத்தல்...!
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி
இருந்தபடியேதான் இருந்தாள்
அந்த எழுபது வயதுக் கிழவி.
வருவோர் போவோர் தரும்
இரண்டிரண்டு பிஸ்கட்கள்
அவ்வப்போது யாராவது தரும் - ஒரு
அரை டம்ளர் தேநீர் சகிதம்
அந்த வங்கி வாசல் தேநீர் கடை
அவளின் வாடிக்கை வாழ்க்கை போல.
இடது கையில் இரண்டாயிரம்
சொச்ச விலை ஷூவுடன்
இருந்தேன் நானும் அந்த
இடத்தில் ஒரு தேநீருடன்.
ஒன்றிரண்டு நிமிடங்கள்
ஒருவாறாய் சிந்தித்தவன்
பர்சில் பளபளத்த
பல வண்ண நோட்டுக்களில்
ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்து
ஒரு வாரம் ஆன பின்னும்
குனிந்து அணியும்போதெல்லாம்
இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது
இந்த
இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ.
- செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|