 |
கட்டுரை
ஒரு வசந்தத்தின் இறப்பு சாரங்கா தயாநந்தன்
காலப்பெண் வரைகிற ஓவியத்தில்
கருநிறத் தீற்றலுக்கான
பொழுது முகிழ்க்கிறது.
பூவசந்தத் தேன் காற்று
விடைபெற்றுப் போயாயிற்று.
வருடும் இளந்தென்றலில்
ஏறியமர்ந்து அழுத்துகிறது
கொடுங்குளிர்.
கோபமுறும் காற்று
சொடுக்கும் சாட்டையில்
கம்பளி காவச் சபிக்கப்படுகிறார்கள்
மனிதர்கள்.
கரையோரத்துப் பறவைகளின்
கானங்கள் தொலைத்த துயரில்
உழன்று உறைகிறது
அழகு நதி.
மனதில் பச்சிலைக் கனவுகள்
இன்னமும் மீதமிருக்க
காலம் பூசும் மஞ்சள் வர்ணத்தை
உலுக்கி உதறுகின்றன
மரங்கள்.
சொந்த மொழி கேளாத்தெருக்கள்
சோர்வாய் ஊருகின்றன
உயிர் நெரிக்கும் கயிறுகளாகி.
வெண்பனி மூட்டத் தெருவின்
தொலைவிலிருந்து வெளிப்படும்
வெள்ளையன் ஒருவன்
எனக்குமானதென
நான் நம்புகிற சிரிப்பை
என் கைப்பூனைக்குட்டிக்கு
சிந்துகிறான்.
துயர் சாலைகளில் தொடர்கின்றன
உயிர்களின் பயணங்கள்.
இவ்வாறாக.....இங்கே
ஒரு வசந்தத்தின் இறப்பு
நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
- சாரங்கா தயாநந்தன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|