 |
கவிதை
பயணிகள் கவனிக்கவும் கே.ரவிசங்கர்
ஒரு ரயில் நிறுத்தம்
கண்டிப்பாக ஐந்து நிமிடம்
நின்று கிளம்பி விடும்
நூறு ரூபாய் கொடுத்து
நான்கு சமோசாவும் இரண்டு டீயும்
ஒரு கை கேட்கிறது
கேட்டதை கொடுத்து மீதி சில்லரையும்
கொடுக்கிறார் மறக்காமல்
இட்லி பொட்டலமும் சாம்பார் பாக்கெட்டும்
கொஞ்சம் கெட்டி சட்னியும் கூட
கேட்ட இன்னொரு கைக்கு கொடுக்கிறார்
அடுத்த ஸ்டேஷனில் நிற்காது
தீர விசாரித்து ஒரு கை
பத்து ரூபாயும் அறுபது காசுகளும்
எண்ணிப்பார்த்து கொடுத்து
வாங்கிக் கொள்கிறது
சில கைகள் ஏதோ வாங்கிக்
கொண்டு பதிலுக்கு கிழிந்த நோட்டுக்கள்
உடைந்த நாணயங்கள்
தயிர் சாதத்திற்கு பதிலாக லெமன் ரைஸ்
மாற்றிக்கொள்கிறது ஒரு கை
அந்த கைக்கு கூட்டி கழித்து
கூட குறைய இல்லாமல்
கொடுக்கிறார் துல்லியமான சில்லரை
இதை அந்த குப்பைத் தொட்டியில் போடு
என்று சொன்ன - ஒரு
சிறுமி கைக்குப் பணிகிறார்
ஊசிப்போச்சு என்று பாதி
சாப்பிட்டுவிட்டு மீதியை நீட்டுகிறது
முகத்தில் பருக்கைகளுடன் ஒரு கை
வண்டியின் கூடவே ஒடி
உள்ளே போய் அந்த கையைப் பார்த்து
கொடுத்து விட்டு பிளாட்பாரத்தின்
கடைசி சிமெண்ட் சதுர நுனியில்
உயிர்பிடித்து இறங்கும் அவர்
சட்டக் கல்லூரி வாசலில்
ஆயுதம் தாங்கிய் கைகளின்
ஏதோவொன்றின் அப்பாவாக
இருக்கலாம்.
- கே.ரவிசங்கர் ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|