Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கட்டுரை

விடுமுறையின் வறுமை மிக மேல்!
தொ. சூசைமிக்கேல்


பாலைவெளி நிலம்விட்டுப் பரதநன் னாட்டிற்குப்
      பயணமேற் கொள்கிறான் எனது நண்பன் – இனி
நாளைமுதல் மனைமழலை சுற்றமொடு நாட்களை
      நகர்த்திடப் போகிறான் அருமை நண்பன்!

வானூர்தி நிலையத்தில் வழியனுப்ப வந்தார்க்கு
      “வருகிறேன்!” என்றபடி விடைபகர்கிறான் – மனம்
தேனூறும் கற்பனையில் திளைத்தாலும், யாருக்கும்
      தெரியாத சோகமொடு நடைபயில்கிறான்!

விடுமுறைநாள் வரும்!வரும்!என்(று) ஈராண்டுக் காலமாய்
      வெவ்வேறு கனவுலகில் மிதந்திருந்தான் – தனை
விடும்வரையில் அரபிதரும் விதவித நெருக்கடியை
      வேண்டா வெறுப்போடு சகித்திருந்தான்...

ஈரகவை ஆகிவரும் தன்னினிய பொன்மகவை
      எப்போது காண்பதெனும் ஏக்கமுடனே – மன
ஈரமறு காட்டரபி தோட்டமதில் நேற்றுவரை
      எடுபிடியில் இருந்தனன் வாட்டமுடனே…

சம்பளம் ஒழுங்காகப் பெறவில்லை யென்றாலும்
      சாப்பாடு கிடைத்ததால் பிழைத்திருந்தான் – சில
கம்பெனியில் துப்புரவு பணிசெய்து தான்பெற்ற
      காசுதனில் பிறசெலவு கழித்திருந்தான்…

பணம்அனுப்பி வைக்காத வருத்தத்தில் மனையாளின்
      பாசமிகு மடலின்றித் தனித்திருந்தான் – அவள்
சினம்தணிய காசனைத்தும் விடுமுறையில் செல்கையில்
      ‘செக்’காய்க் கொடுத்துவிட நினைத்திருந்தான்…

ஆறேழு மாதமாய்ச் சம்பளம் பாக்கியென
      அரபியிடம் நேற்றுதான் கேட்டுநின்றான் – அதற்(கு)
“யாரேனும் கடனுதவி தருவரெனில் வாங்கிப்போ!
      யான்பிறகு தரலாம்!”என்(று) அரபி சொன்னான்…

“ஒருநாளில் எங்குபோய்க் கடன்வாங்க முடியும்?”என்(று)
      ஊர்போக நின்றவன் அழுது நின்றான்: – “எனில்,
ஒருவாரம் கழித்துப்போ!” என்றந்தக் காட்டரபி
      உரைத்தமொழி கேட்டதும் உறைந்து நின்றான்…

‘கடனாளி யாகநான் விடுமுறையில் செல்வதோ..
      கடவுளே!’ என்றுமனம் கலங்குகின்றான் – ஒரு
முடமான நெஞ்சுடைய முதலாளி யிடம்என்ன
      முறையிட்டும் பலனின்றிப் புலம்புகின்றான்…

வெறுங்கையாய்ச் செல்வதே விதி: இந்த விடுமுறையில்
      வேறெதுவும் நடக்காதென்(று) அறிந்துகொண்டான் – இரு
வருடத்(து) அடிமைவாழ்வைக் காட்டிலும், விடுமுறையின்
      வறுமை மிக மேல் என்று புரிந்துகொண்டான்!...

- தொ.சூசைமிக்கேல் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com