 |
கவிதை
இலக்குமணராசா கவிதைகள்
1.பிழைப்பு
உடைந்த முகம்
ஒன்று
உடையாத கண்ணாடியில்!
ஒட்டி வைக்க
முயற்சிக்கும் விரல்களுக்கு
தட்டு படாமல்
விரிசல்கள்!
உணரவில்லை கண்கள்
இரத்தம் சிந்திய
கைகளை!
மிச்சமாய் வலி
மட்டும்
இதயத்தில்!!
எவனோ சொன்னான்
அது நானாம்!
என்ன
முட்டாள்தனம்!
ஏகத்தாளமாய் சிரித்தேன்
உடன் சிரித்தது
அந்த கண்ணாடி பிம்பம்!!!
2. சுயம்
யாவரும் பார்க்க
நிகழும் வல்லுறவின்
வலியோடு
தன் சுயம்
இருப்பு அடையாளங்கள்
எல்லாம் இழந்து
சிலையாகி இறந்தது
ஒரு கல்!
நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த தடையும் இல்லை!
3.யாரோ
சற்று முன்
நொடி பொழுதில்
யாரோ திறந்து மூடிய
என் அறைக்கதவு
சப்தமாய் சிரித்தது
என்னுள் நிராகரிப்பின்
வலியுணர்த்தி!
4.(மின்)அஞ்சல் பெட்டி
அழகிழந்து
கிழிந்து
பயன்பாடற்று
தெருவோர குப்பையில் வீழ்ந்த
அந்த கைப்பைய்யில்
பணம் தேடும் ஒரு பிச்சையின்
விரல்கள் எப்பொழுதும்
மறப்பதில்லை
முன் ஒரு நாளில்
கிடைத்த ஒற்றை ரூபாயையும்
அது தந்த மகிழ்சியையும் !
- இலக்குமணராசா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|