Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteraturePoem
கவிதை

கோசலன் கவிதைகள்


நான் தொலைக்கும் நான்

என் நடைபாதையில்
முன்னும் பின்னுமாய்
ஆகி
எந்த வீதியில் நான் நடக்கையிலும்
நிழலாய் இருந்தென்னை
குற்றம் கண்பதாய்
ஆரம்பிக்கிறது
உங்களின் தத்துவங்கள்.

சுளுக்குப் பிடித்துப் போன
உங்களின் கழுத்தின் பார்வைத்திசையில்,
விதிகளை வரையும் உங்கள்
கரங்களில் கதியில்,
எங்குமே...
சாக்கடை சலசலத்து ஓடுவதாய்
தோன்றுகிறதெனக்கு.
அதுதான் உங்கள் சங்கீதம் எனில்
நிச்சயம் எனக்கது
நிம்மதி தருவதாய் இல்லை.

என் அடையாளங்கள்
உங்களை பிணத்திற்கலையும்
மிருகங்கள் ஆக்குகிறதெனில்

உயிரில் உள்ள இறுதி
மூச்சையெறிந்து,
நாகரிகம் பெறா..
மொழிகளறியா தேசத்தில்
போய் விழுவேன்.

அங்கே
பாதம் தொடும் சடை வளர்த்து
மரப்பீப்பாய்களில் நிறைந்திருக்கும்
மதுவை ஏந்தி
கடைவாய்களில் வழிய
முன்னிருப்பவனின் முகமதில்
உமிழ்ந்து பின்தொடரும்
பொழுதின் இரத்தம் வழிந்து
களைப்புற்று இருக்கையிலே..

மங்கல் வெளிச்சமதில்
அரைகுறையை அவிழ்ந்துப்போட்டாடும்
தடித்த உதடுகள் பொருந்திய
ஒருத்தியை
பிடித்துப் புணர்ந்து ஒரு பிள்ளை
செய்வேன்
“அம்மா” என்னும் சொல் அறியமாலே...

நான் முற்றத்தில் இருக்கிறேன்

அம்மா நான் முற்றத்தில் இருக்கின்றேன்.
மழை கிளறும் மண்வாசனையையோ
இலைகளிடை தெரியும் நிலவினையோ
நான் ரசித்தபடியில்லை.

என் மரணத்திற்கான அழைப்பு
தெரு முடக்குக்கு வந்துவிட்டது.
நாய்களின் குரைப்புகளை தாண்டி
எழப் போகும் ஓரோசையை கேட்டபடியே
நீ உள்ளிருப்பாய்....

எனக்கான உன் ஆயிரம்
நேர்த்திகள் தோற்றுவிட்டதாய்
அப்போது உணராதே...

என் பிறப்பை போலவே
என் வாழ்வும் இப்போது உனக்கு
எனக்கும் வரமாயிருக்க
நேர்ந்ததே..

இருள் கவியும் பொழுதுகளில்
நான் காவி வந்தவைகளை அறியாமலே
நீ பிட்டு அவித்த படியிருப்பாய்.

என்னை சூழ்ந்த உன் கற்பனைகளையும்
காலையில் ஒலித்த கோவில் மணியையும்
அப்பாவின் தேவாரங்களையும் தாண்டியே
நாங்கள் போனோம்.

நேற்று வந்த பொழுதுகள் எமை கவ்வி
நாளை எழுத அழைத்திற்று.
காற்றைப் போலவும், நீரைப்போலவும் நெருப்பைப்
போலவும் எமையுணர்ந்தோம்.

கட்டைகள் கிழித்தறிந்த காயத்தை
ஒரு துணியில் மறைத்த போதுவுன்
சேலைச் சூட்டை மறந்தோம்

கசகச இருட்டினில் உன்னை அழைத்து,
பிட்டைத் தின்றபடியே அழுமுன் கண்களில்
முன் எங்கள் இலட்சியங்கள் கூறி நின்றோம்.

உன் நேர்த்திகள் பலித்ததாய் கொண்டாடும்
பொழுது நேற்று வாய்த்ததுனக்கு,
இன்றிரவும் பிட்டை தின்றபடி சொல்ல
இலட்சியங்கள் எதுவும் என்னிடம் இல்லை
என்றாலும்..

இவரென்றும் அவரென்றும் அறியாதவர்
என்னை உடல் என்று ஆக்கும் போது,
கூச்சலிடாதே, கத்தியழாதே, வெளியே வராதே.
இன்னும் நீ
இன்னொருத்திக்கும் நேர்த்தி
வைக்கவும்
விரதம் இருக்கவும் வேண்டியிருக்கிறது
அம்மா.

- கோசலன் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com