 |
கட்டுரை
எது மேல்? தேவமைந்தன்
முகத்தை மறைத்து,
முகவரி மாற்றி,
மற்றவர் ஆக்கம்
மனதினுள் வெறுத்து;
நானே தெரிந்தவன்,
நானே எழுத்து,
நானே அரசியல்,
நானே சரித்திரம்,
நானே உலகம்;
எனக்கே தெரியும்;
லண்டனும் யு.எஸ்'சும்
எவனுக்குத் தெரியும்?
என்று அன்றாடம்
தனக்குள் ளாகவே
முணுமுணுத்து இருக்கும்
முதுமை மேலா?
அடித்தவன் காலடி
அமர்ந்திட மறுத்து;
அடிபட்டவர்களை
அன்புடன் அணைத்து,
நொந்தழும் கண்ணீர்
நாடியே துடைத்து,
காய்ந்த வயிற்றைக்
கனிவுடன் நிரப்பி,
இழந்த நம்பிக்கையை -
பழகிப் பேசியும்,
பாசம் பரிவு
நேசம் காட்டியும் -
மீண்டுமே ஊட்டி;
பண்ணை மனத்தால்
பாதகப் பட்ட
நந்தன் சொந்தமாய்
நாளும் அலைந்து;
உந்தும் வேண்டாம்,
ஊர்தியும் வேண்டாம்,
ரதம் - அதன் நினைப்போ
வேண்டவே வேண்டாம்!
என்றே உங்கள்
நுகத்தடி மறுப்பதால்,
மனிதம் மலர்ந்திடும்
முகத்துடன் நலியும்
இளமை மேலா?
- தேவமைந்தன் ([email protected] )
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|