 |
கவிதை
சொற்கள் பற்றி எரிந்துருகிய முகம்
தீபச்செல்வன்
தீயின் கிணறுகள் வெடித்து விரிகிற
நகரங்களில்
உன்னை பற்றியெறித்து விடிந்த
காலையில் உனது
கனதியான சொற்கள் தீப்பிடித்தன.
அணையாத பெருந்தீயில் எரிந்துருகியபோது
நமது தலையின் தீ கனக்கிறது.
வழிகள் அடைபட்டு வீடுகளை தீ வைத்து
வருகிற படைகளிடம்
இனத்தின் வேர் கருகுவதற்கான
தீ எரிக்கிற கோப்பையில்
நமது சொற்கள் போடப்படுகின்றன.
உயிர் வளர்த்த சொற்களினை
தேடுகிற உனது கடைசிச் சொற்கள்
எண்ணையில் மிதக்கிறது.
கதிரைகளை கிழித்தெறிந்த காலையின்
தீயில் சூரியன் வேகிட
வானம் வாடிப்போயிற்று.
தீயெழுதுகிற கவிதையின் சொற்கள்
பற்றி உயிர் எரிகிறது.
இன்னும் அணையாமல் பரவுகிற
தீயில் உனது சொற்கள் பிரகாசிக்க
தீயை கருக்கும் உயிரின் வாசம் பெருகுகிறது.
மண்ணை தின்னுகிற கால்களின்
அடியை உனது நினைவுத் தீயெரிக்கிறது.
உனதுறவுகள் புதைகிற மண்ணில்
எரிபடுகிற சாம்பலில் பெரும் கற்களென
உனது உயிரும் சொற்களும்
அனல் கொண்டு வருகிறது.
எரிந்து கருகிய முகத்தினை தேடுகிறது
நமது சனங்களின் தீக்கிடங்குகள்.
(தீக்குளித்து தியாகச் சாவடைந்த முத்துக்குமரனுக்கு)
- தீபச்செல்வன் ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|