|
கட்டுரை
வெக்கை ஆதி
வெயிலில் மழைபோல்
வழியும்
உன் கோப விழிகளின்
கண்ணீர்த்துளிகள்..
குமுறும் வானமாய்
உன் மௌனத்தினுள்
வார்த்தைகள்..
பேசாமலும்
பேசிவிட முடியாமலும்
தாழ்ந்துயரும் உன் பொறுமையின்
அளவுகோடுகள்..
ஆதிக்கச் செருக்கில்
முகம் சுழித்த சொற்களால்
என் குடும்பத்தார்
உன் இதயம் கிழித்த
தருணங்களில்...
நானும்
அமைதியாய் தானிருந்தேன்
உன் அவமானங்களை
கண்டும் காணாத கயவனாய்...
வெயிற்காற்று சுடும்
மின்சாரமற்ற
இந்த இரவில்..
அழுது அழுது
ஆழ்ந்த தூக்கத்தில் எழுந்து
'வெக்கையா?'
'விசுறவா?' என்கிறாய்..
பதிலற்று குற்ற உணர்வில்
நீர் தெளித்த பூவாய்
ஈரமாயின என் இமைகள்..
உன் மனதுக்குள் இருக்கும்
வெக்கைக்கு
யார் விசுறுவது?
- ஆதி ([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
|
|