 |
கட்டுரை
ரட்சிப்பின் சூசகம் ஆதவன் தீட்சண்யா
அம்மா தரும் நீராகாரம்
ஆளுக்கொரு கலயம் குடித்துவிட்டு
சூரியனும் நானும்
அதிகாலை கிளம்பினோமானால்
வழியெல்லாம் பராக்கு பார்த்தபடி
உச்சிக்கு வந்துசேர
நடுப்பகல் 12 மணியாகிவிடும்
களைப்பு நீங்க
மேகத்தில் படுத்து
கதைபேசுவோம் கொஞ்சநேரம்
தாகமானால்
வெயிலுக்குள்ளேயே மழை
பெய்வித்து குடிக்க
காக்காய்க்கும் குருவிக்கும்
கல்யாணம் செய்விப்போம்
நடுவானத்திலிருந்து நாலாதிசைக்கும்
குடைக்கம்பி மாதிரி
சூரியன் விரிக்கும் கதிரில்
ஏறி இறங்கி சரித்து
விளையாடுவதில் நேரம் போவதே தெரியாது
வெக்கையில் உப்புப் பூத்து
சூரியக் கதிரொளி மங்கும்போது
தங்கத்தில் லாடமும்
வைரத்தில் சேணமும் பூட்டிய
ஏழுகுதிரை ரதமேறி நீராடப்போவோம்
மலைக்கப்பாலிருக்கும் கடலுக்கு
உன் சகவாசத்துக்காகத்தான்
இன்றும் பொசுக்காமல்
விட்டுவிட்டேன் உலகத்தை என்று
ஒவ்வொரு நாளும்
உறங்கப் பிரியும் முன்
சூரியன் சொல்லும்
நாளைக்கும் விளையாடப்
போகலாமென்பேன் நான்.
- ஆதவன் தீட்சண்யா ([email protected])
இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|