Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழர்கள் சுமந்த மூத்திரச்சட்டி..
(அந்த ஈரோட்டுக்கிழவரின் நிஜ மூத்திரச் சட்டியும் உபகரணங்களும்)
செந்தில்


ஞாநியின் ஆனந்த விகடன் கட்டுரையை முன் வைத்து......

"பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் என்பான் பாரதி..பிரிட்டீஷாரிடம் இருந்து போலி சுதந்திரம் வேண்டி தேசியவாதிகள் கிளர்ந்த காலத்தில் அந்தகாலச் சூழலுக்கு பொருந்தும்படி சொன்ன பாரதியின் வரிகளை 2007-ல் எடுத்துக் கொண்டு, பத்திரிகையாளர் ஞாநி தனது ஆனந்த விகடன் ஒ..பக்கங்களில் கலைஞரின் முதுமை குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் ஐய்யோ பாவம் கலைஞர் முதுமையால் தள்ளாடுகிறார். அவரை அவரது குடும்பத்தினரும் கட்சிக்காரர்களும் துன்புறுத்துகிறார்கள் என ஆனந்தவிகடனும் ஞாநியும் கசிந்துருகுவது போல தோற்றம் கொண்ட ஐந்து பக்ககட்டுரை அது.

நீதியாக தோன்றுகிற எதுவும் அக்கிரமத்தை சுமந்திருக்கும் என்பதைப் போல மீடியா அதிகாரத்தின் போதையில் ஒரு தரப்பில் நின்று கலைஞரை இழிவு செய்கிற கட்டுரை அது....

இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மாலை முரசு பத்திரிகைக்கு தந்தை பெரியார் வழங்கிய நேர்காணலில் இருந்து சில பகுதிகள் கீழே...

1. கேள்வி:- தங்களைப் போல 95 வயது வரை வாழ வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பதில்:- எப்போதும் ஆக்டிவ்வாக இருக்க வேண்டும்...

2.கேள்வி:- இந்த வயதிலும் பல மைலகள் பயணிக்கிறீர்களே?

பதில்:-வயதுக்கும் பயணத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. என்னை பொறுத்தவரையில் சும்மா இருக்க முடியாது. சுற்றுப்பயணம் செய்தால் நன்றாக இருக்கிறது.

3.கேள்வி:- ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் தூங்குகிறீர்கள்?

பதில்:- சாதாரணமாக எட்டு ஒன்பது மணிக்கு தூங்குவேன். பொதுக்க்கூட்டம் இருந்தால் 11 மணி 12 மணிக்கு தூங்குவேன். எப்படியும் எட்டு மணி நேரம் தூங்கி விடுவேன்.

4.கேள்வி:-ஒரு நாள் பொழுதை எப்படி கழிக்கிறீர்கள்?

பதில்:- முன்பெல்லாம் நிறைய புத்தகங்கள் படிப்பேன் எழுதுவேன். ஆனால் இப்போது படிக்க கஷ்டமாக இருக்கிறது. எழுத சலிப்பாக இருக்கிறது யாராவது எழுதிக் கேட்டால் எழுதித் தருவேன். அத்துடன் முன்புமாதிரி மூளை தெளிவாக இல்லை. கஷ்டப்பட்டு சிந்திக்க வேண்டியிருக்கிறது. முன்பெல்லாம் ஒன்றைப் பற்றி யோசித்தால் தொடர்ச்சியாக வரும். ஆனால் இப்பொழுது நினைவாற்றல் குறைந்து வருகிறது.

5.கேள்வி:- கிளர்ச்சி, போராட்டங்களில் ஏன் நீங்கள் பங்கெடுக்கிறீர்கள்?

பதில்:- என் உடல் வேண்டுமானால் தளர்ந்திருக்கலாம். ஆனால் கிளர்ச்சிகளில் நான் நேரடியாக பங்கு பெற நினைக்கிறேன். நான் என்ன சொல்கிறேனோ அதை நானே முன்னின்று செய்தால் தானே நல்லது. ஒதுங்கிக் கொள்வது எனக்குப் பிடிக்காது.

பெரியார் தனது 95-வயது வயதில் 16-07-1973 மரணிப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன் அளித்த இந்த நேர்காணலின் தொனியை அவர் தி-நகரில் நிகழ்த்திய மரண சாசன உரையிலும் கேட்க முடிகிறது. அந்தப் பேச்சின் ஒலிநாடாவை சமீபத்தில் கேட்க நேர்ந்தது. அதில் பெரியார் பேசும் போது "நான் ரொம்ப சீரியசா இருக்கேன்..” என்று சொல்லிவிட்டு அப்படியே பின் பக்கம் திரும்பி "சீரியஸ்ணா என்னப்பா?”-ணு கேட்கிறார். அதற்கு பின்பக்கம் இருப்பவர்கள் "அரிய கவலையோட” என்கிறார்கள். இதெல்லாம் அந்த ஒலிப்பேழையில் பதிவாகியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சீரியஸ் என்ற சொல்லுக்கு தமிழ் அர்த்தம் பெரியாருக்குத் தெரியாதா என்ன? நினைவு தொடர்பறுந்து போன நிலையில் அவர் பேசுகிறார் என்றுதான் அந்த ஒலிப்பேழையைக் கேட்ட போது புரிந்து கொண்டேன்.

நிற்க...இனி ஞாநியின் கட்டுரைக்கு வருகிறேன்..... ஞாநி எழுதியிருக்கும் ஐந்து பக்கக் கட்டுரையில் இருந்து வெறும் மூன்று விஷயங்களை மட்டும் கீழே தருகிறேன். இதுபோக கலைஞர் மேடையில் அல்லாடுகிறார், தலை தொங்குகிறது, ஞாபக மறதியில் தத்தளிக்கிறார் என்பது மாதிரி ஏராளமான அக்கறைகள்.....

இனி முதல் விஷயத்துக்கு வருவோம்... "84 வயது முதியவர் ஒருவரை அவர் குடும்பமும் நம் சமூகமும் கொடுமைபடுத்திக் கொண்டு இருப்பதை பார்த்து நாம் ஏன் வாய்மூடி சகித்துக் கொண்டு இருக்கிறோம். ஞாநி நீங்கள் வாய் மூடி சகித்துக் கொண்டிருப்பதும் பொறுக்க முடியாமல் வார்த்தைகளை நடுநிலை என்ற பெயரில் கொட்டித் தீர்ப்பதும் உங்களின் உடல் நலம் சம்பந்தப்பட்டது. 84-வயதான கலைஞரை சமூகமும் குடும்பமும் கட்சியினரும் கொடுமைப்படுத்துகிறார்கள் என்று எழுதுகிறீர்களே கலைஞர் உங்களிடம் வந்து "ஞாநி என்னை ரொம்ப கொடுமைப் படுத்துறாங்கய்யா ஒதுங்கலாம்ணு இருக்கேன்..” என சொன்னாரா? அவர் இன்றும் காலையின் ஐந்தரை மணிக்கு அறிவாலயத்துக்கு வருகிறார். நாகநாதன் மற்றும் இன்னொரு நபருடன் அறிவாலயத்தில் நடக்கிறார். உடன் வருகிற இருவருமே கலைஞரின் ப்ரியதுக்குரியவர்கள். நாகநாதன் தவிர இன்னொருவர் இன்னும் சைக்கிளில்தான் அறிவாலத்துக்கு வந்து போகிறார்.

கலைஞரை நாகநாதனும் அந்த இன்னொருவரும் காலை ஐந்தரை மணிக்கே கொடுமை செய்யத் துவங்கி விடுகிறார்கள் பின்னர் குடும்பம் உணவருந்தச் சொல்லி கொடுமைப் படுத்துகிறது. கட்சிக்காரர்கள் கட்சிப் பணிகளுக்கு கட்டளை கேட்டு கொடுமைப்படுத்துகிறார்கள். பின்னர் அரசு அதிகாரிகள் ஆவணங்களைக் கொண்டு காட்டி கொடுமைப்படுத்துகிறார்கள் என உங்களுக்கு தோன்றினால் போலீஸ் ஸ்டேசனில் போய் கலைஞரைக் கொடுமை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என புகார் கொடுக்க வேண்டியதுதானே? வழக்கு என்பது அதோடு தொடர்புடையவரின் வாக்குமூலத்தைப் பொறுத்தே பதிவு செய்யப்படும் என்பது உங்களுக்குத் தெரியும்.

கலைஞரே இது வரை தனக்கு இப்படியெல்லாம் கட்சியிலும் வீட்டிலும் சமூகத்திலும் கொடுமை நடப்பதாக சொல்லவில்லையே? நீங்கள் ஏன் ஆத்திரப்பட்டு கலைஞருக்கு ஒய்வு கொடுக்க விரும்புகிறீர்கள். "மிக அண்மையில் ஒரு வீடியோ காட்சியில் பதிவாகியிருக்கும் ஒரு உரையாடல் இது. சுற்றுப் பயணம் சென்ற இடத்தில் தங்கியிருந்த விடுதியின் அறையில் இருந்து வெளியே வரும் போது அருகில் தனக்கு பாதுகாப்பாக நடந்து வரும் ஆற்காடு வீராசாமியிடம் கருணாநிதி சொல்கிறார். "பாத்ரூம்ல கால் இடறிடிச்சு. வேட்டி ஈரமாயிடிச்சு.. வேற வேட்டி மாத்திக் கட்டிக்கிட்டு வர லேட்டு ஆயிடுச்சு.. (வார்த்தை கோர்ப்பை கவனியுங்கள்) 84-வயது முதியவர் ஒருவர் நம் வீட்டில் இருந்தால் அவர் இந்த நிலையிலும் வேலைக்கு செல்வதை நாம் விரும்புவோமா? அனுமதிப்போமா? கலைஞர் மீது நீங்கள் நிகழ்த்தியிருக்கும் உச்ச பட்ச வன்முறையின் வடிவமாக நான் இதை பார்க்கிறேன்.

நீங்கள் பார்த்த வீடியோ எந்த நபர் எடுத்தது. வீடியோவில்தான் பார்த்தீர்களா?அல்லது கலைஞரின் கழிப்பறையை எட்டிப் பார்த்து எழுதினீர்களா? 84-வயது முதியவர் ஒருவரின் கழிப்பறையை, படுக்கை அறையை எட்டிப் பார்க்கும் அல்லது மூக்கை நுழைக்கும் அதிகாரம் உங்களுக்கு யார் கொடுத்தது? சாலையில் நடந்து போகிற போது எண்பது வயது பெரியவர் ஒருவர் இயலாமை காரணமாக சிறுநீர் கழித்து விடுகிறார். அதைப் பார்க்கிற நீங்கள் அதை ஆனந்த விகடனில் எழுதுவீர்களா?அந்த சாலையோர பெரியவரின் மகனாக உங்களை நீங்கள் ஒரு நிமிடம் கற்பனை செய்வீர்களா? ஏன் அந்த சாலையோர முதியவரின் சிறுநீர் உங்களைப் பாதிக்கவில்லை. கலைஞரின் மூத்திரம் ஏன் உங்களைப் பாதிக்கிறது? அவர் பலகோடி சூத்திர மக்களின் தலைவனாக இருப்பதால் அவரது கழிப்பறையை நீங்கள் எட்டிப் பார்த்திருக்கிறீர்கள் ஞாநி.... அதனுடைய விளைவு தான் இந்திரன் சூத்திரர்கள் மீது இறக்கிய இடியை இப்போது நீங்கள் இறக்குகிறீர்கள்.

திமுகவில் இருக்கும் கவிஞர் சல்மாவின் ஒரு மாலையும் இன்னொரு மாலையும் தொகுப்பில் இப்படி ஒரு கவிதை வரும்...

’யாரேனும் ஒருவர் கொலையாளியாகும் சாத்தியங்களுடன் ஒன்றாகவே உறங்குகிறோம்.. என்று பெண் வலியை பேசும் ஒரு கவிதை அது. இந்த கவிதை உங்களின் படுக்கையறைக்கும் பொருந்தும். அதைப் பற்றிகூட எங்களால் எழுத முடியும். ஆனால் அதை எழுதுவது இன்னொருவரின் அந்தரங்க சுதந்திரத்தினுள் தலையிடுவது என்பதால் எழுத மனம் கூசுகிறது..... ஆனால் நீங்கள் பல முறை கலைஞரின் படுக்கையறைக்குள் ஒளிந்திருக்கிறீர்கள். உங்களின் படுக்கையறைக்குள் பல பேர் ஒளிந்திருக்கிறார்கள் என்கிற யதார்த்தம் தெரியாமல்."

என் அப்பா இந்த நிலையில் அலுவலக வேலைக்குப் போய்க் கொண்டு இருந்தாரானால் நிச்சயம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பும் ஒரு மகனாகவே நான் இருப்பேன்..

உங்கள் அப்பா எந்த வயலை உழுதார், எந்த ஏரைப் பிடித்தார்? கால் வயிற்றுக் கஞ்சிக்காக எந்த ஆண்டையின் வயலில் ரத்தம் சிந்தினார்? ஆனால் இன்னும் எங்களின் அப்பன்கள் ஒரு நாள் உணவுக்காக வயது எண்பதைக் கடந்த பிறகும் கூலி வேலைக்குப் போகிறார்கள். இந்த சென்னை நகரத்தின் சடுதியில் வதைபடும் மகன்கள் நினைத்தால் கூட எங்கள் அப்பன்களின் வேலையைத் தடுக்க முடியாது. காரணம் பசிப்பது எனக்கல்ல எங்களது அப்பன்களுக்கு.... வயிற்றுக்குப் பசிப்பதைப் போல உங்களுக்கும் எனக்கும் கலைஞருக்கும் பசிக்கும் வேறுபட்ட பசிகள். வேறு வேறுபட்ட பசிகள் சூழலுக்கேற்ற பசிகள்..

கலைஞர் விஷயத்தில் அதிகாலையில் அவர் இன்னும் நடக்கிறாரே, நடப்பதால் இந்த 84-வயதில் என்ன சாதிக்க போகிறார்? ஒன்றும் இல்லை. ஆனாலும் நடக்கிறார் அது ஒரு பழக்கம். யார் சொல்லியும் கேட்காத அந்த பெரியவர் எப்போது ஒய்வெடுக்கவேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர நீங்களல்ல. இந்த வயதில் அலுவலகத்துக்குச் செல்லாதீர்கள். முதல்வர் பணியை செய்யாதீர்கள். கட்சிப் பணியை செய்யாதீர்கள் என்பதுதான் கலைஞருக்குக் கொடுக்கிற தண்டனையாக இருக்கும். அந்த தண்டனையை அவரது விருப்பத்தையும் மீறி அவர் மீது திணிக்கிறீர்கள்.

தந்தை பெரியார் தனது 85-வது வயதிலிருந்து மூத்திர வாளியோடு அலைந்தார். அந்த மூத்திர வாளியை மகாலிங்கமும் இமையவரம்பனும் தூக்கிக்கொண்டு பெரியாருக்கு பின்னால் போவார்கள். அது மகாலிங்கமும் இமையவரம்பனும் தூக்கிய மூத்திர வாளியல்ல காலமெல்லம் தங்களுக்காக உழைத்த ஒரு தந்தைக்கு தமிழர்கள் தூக்கிய மூத்திர வாளி. அது போல கலைஞருக்குத் தூக்கவும் வருவார்கள் ஞாநி..

ஏன் கலைஞருக்கு தமிழர்கள் மூத்திர வாளி தூக்கவேண்டும்? தந்தை பெரியாருடன் முரண்பட்டு அண்ணா வெளியேறி திமுகவைத் துவங்கிய பிறகு பெரியாரின் சிந்தனைகளை அரசு மட்டத்தில் கொண்டு போய் பல சட்டங்களாக மாற்றியது கலைஞரின் சாதனைதான். பதவிக்கு வந்த இந்த நாற்பதாண்டுகளில் திராவிட இயக்கம் என்று சொல்லிக் கொள்கிற உங்களின் சகாவான ஜெயலலிதா செய்யாத சாதனைகளை கலைஞர் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக செய்தார். உங்கள் தலைவி மதமாற்றத் தடை சட்டத்தைக் கொண்டு வந்தார். சிறு தெய்வ மரபில் வந்த கிராம கோவில்களில் ஆடு கோழி பலியிடுவதைத் தடுக்க சட்டம் கொண்டு வந்தார். (பெரியார் கூட பலியிடுவதைக் காட்டுமிராண்டித்தனம் என்றார். அதற்காக கிளர்ச்சிகள் நடத்தினார்) ஆனால் உங்களின் சகா கொண்டு வந்த சட்டம் பிஜேபி-காரன் அரசியல் சட்டத்தைத் திருத்தக் கோருவது போலத்தான். சிறு தெய்வ மரபை அழித்து பெருந் தெய்வ பார்ப்பன மரபைக் கொண்டு வருகிற நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

ஆனால் பெரியாரின் நோக்கம் அதுவல்ல தெய்வ மரபையே வேரறுப்பது என்கிற அறிவின் நிலை அது. உங்களுக்கு உறுத்துவதெல்லாம் இன்று திராவிட மக்களுக்கு கடைசி தலைவனாக இருப்பது கலைஞர் மட்டும்தான், இவரையும் அழித்து விட்டால் இந்த மக்களை கலாச்சார ரீதியில் அல்லது சமணர்களைக் கொன்றது போல அழித்தொழித்து விடலாம் என்பதுதான்... இதுதான் உண்மை.. இதை எல்லாம் எழுதினால்.. உடனே நீங்கள் இரண்டு ஆங்கில படங்களைப் பற்றி எழுதுகிற சாக்கில் எழுதுகிறீர்கள். (ஆனந்த விகடனில் லூசுப் பையன் என்கிற காமெடி தொடரில் லல்லுபிரசாத யாதவ் குப்பை அள்ளுவதாக சித்திரித்திருந்தார்கள்) இங்கே நகைச்சுவையாக ஒரு கிண்டல் கட்டுரையில் அரசியல்வாதிகளைப் பற்றி எழுதினால் அடுத்த நாளே சாதி சாயம் பூசப் பார்க்கிறார்கள்.

இத்தனைக்கும் கருப்பொருள் வெறும் குப்பை மேட்டர். ஜனாதிபதி கொலை அரச குடும்பத்தினர் மாமியார் மருமகள் வெறுப்பு போன்ற சிக்கலான விஷயக்கள் அல்ல!.. என 19-09-07 தேதியிட்ட ஆனந்த விகடன் ஒ பக்கத்தில் எழுதியிருக்கிறீர்கள். அதாவது அறிவாலயத்துக்கு முன்னால் இந்தியாவின் ரயில்வே துறை அமைச்சர் குப்பை பொறுக்குகிறார் என எழுதுவீர்கள் அது வெறும் காமெடி. வரவேற்கிறேன். முரசொலி என்கிற கலைஞரின் கட்சிப் பத்திரிகை தவறாகத்தான் எழுதிவிட்டது. அய்யா போயஸ் கார்டனுக்கு முன்னால் துக்ளக் சோ மலம் அள்ளுகிறார் என உங்களின் காமெடி போனா எழுதுமா?

சுப்பிரமணிய ஸ்வாமி, ஜெயேந்திரர் எல்லாம் சிந்தாதிரிப் பேட்டையில் குப்பை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள் என எழுத முடியுமா? அதை ஆனந்த விகடன் வெளியிடுமா? எழுத மாட்டீர்கள் அப்படியே எழுதினாலும் அது வெறும் குப்பை மேட்டர் ஆகிவிடாது. சூத்திரன் ஒருவனைப் பற்றி எழுதினால் அது குப்பை மேட்டர். பார்ப்பனரான உங்களைப் பற்றி எழுதினால் அது ஜாதி மேட்டரா? எந்த ஊர் நியாயமப்பா......இது?

எங்களைப் பொறுத்த வரையில் கலைஞரோடு எங்களுக்கும் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. அது உங்களை விட தீவீரமானது. ஆனால் நாங்கள் அவரை விமர்சிப்பதற்கும் நீங்கள் அவரை விமர்சிப்பதற்கும் பெருத்த வேறுபாட்டைக் காண்கிறோம். எங்களின் விமர்சனம் அரசியல் ரீதியிலானது. உங்களின் விமர்சனம் வன்மமானது. அது ஒரு தரப்பினரை குஷிப்படுத்துகிறது. அது எப்படி துவங்குகிறது என்றால் கடந்த காலத்தில் நீங்கள் எழுதிய எல்லா ஒ பக்கங்களையும் பாருங்கள் அதில் ஜெயலலிதவை நீங்கள் அணுகிய முறையும் கலைஞரை நீங்கள் அணுகிய முறைக்கும் பாரதூரமான வேறுபாடு இருக்கும். அத்வானியையும் கலைஞரையும் ஒப்பிடுவதன் மூலம் அத்வானியை உயர்த்திப் பிடிக்கிறீர்கள், கலைஞரின் மீது வெறுப்பை உமிழ்கிறீர்கள்.

பல்லாயிரம் இஸ்லாமிய உயிர்கள் மடிய காரணமாக இருந்த பாசிச அத்வானியும் கலைஞரையும் ஒப்பிடுவதே உங்களின் அரசியலில் நேர்மையின்மையைக் காட்டுகிறது. இதுவரை நீங்கள் பல சமூக பிரச்ச்னைகளிலும் கொண்டிருந்த மதிப்பீடுகளையும் சந்தேகிக்கத் தூண்டுகிறது. அடுத்து ஆனந்த விகடனும் ஜுனியர் விகடனும் கலைஞர் தடுமாறுகிறார் என்கிற பிரச்சாரத்தை தொடர்ந்து செய்தபடி இருக்கிறது.

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் "பந்தை உச்ச நீதி மன்றம் தடுத்து விட்டதே? என கலைஞரைப் பார்த்து கேட்கிறார். அதற்கு கலைஞர் பதில் சொல்கிறார் “தடுக்க தடுக்க பந்து உந்தும்..” என்று பதிலளிக்கிறார். தடுமாற்றம் தடுமாற்றம் என கொக்கரிக்கிற நீங்கள் எங்கே தடுமாறினார் என குறிப்பாக சொல்லமுடியுமா? அப்படியே தடுமாறினாலும் என்ன? எம்.ஜி.ஆரை பார்த்து இந்த கேள்விகளை கேட்க உங்கள் மனம் ஏன் வரவில்லை? எம் ஜி.ஆர் தனது கடைசி காலம் முழுக்க செயல்படாத ஒரு நிலையில்தானே முதல்வர் பதவியில் இருந்தார்.

நீங்கள் கலைஞரைப் பற்றி தொடர்ந்து எழுதுவதன் ரகசியம் என்ன? கலைஞர் குடும்பத்துக்குள் ஏற்பட்ட பிளவுதான் காரணம். மாறன் குடும்பத்தினர் திமுகவில் இருந்து பிளவுபட்ட போது அதை ஊதி வளர்த்தது சில பழைய பார்ப்பனர்களும் சில புதிய பார்ப்பனர்களும்தான். உங்களுக்கு சாலை க்ளியர் ஆனது மாறன் குடும்பம் பிரிந்த போதுதான். காரணம் சன் தொலைக்காட்சியில் விகடன் டெலி விஷ்டாசுக்கு இரண்டு தொடர்கள் வருகிறது. ஒரு பக்கம் பிஸ்னஸ். இன்னொரு பக்கம் கலைஞரைத் திட்ட முடியாமல் தள்ளாடியது விகடன். மாறன் குடும்பம் பிரிவுக்கு முன்னர் வாசன் குழும இதழ்கள் கருணாநிதி என்கிற சொல்லை ஒப்பீட்டளவில் மிக மிக குறைவாகவே பயன்படுத்தி வந்தது.

ஆனால் மதுரை தினகரன் சம்பவங்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க கலைஞர் எதிர்ப்பு என்கிற ஒரு கொள்கை முடிவை எடுப்பதன் மூலம் ஆனந்த விகடனை கலைஞர் வாங்கினார் என்ற குற்றச்சாட்டை முறியடிப்பது ஒரு நோக்கம். (சரி வைகோ ஏன் அப்படி ஆனந்த விகடனை மாறன் கலைஞர் குடும்பம் வாங்கி விட்டது என சொன்னார். அந்த அளவுக்கு இவர்கள் அப்போது கலைஞருக்கு ஜால்ரா அடித்தார்கள். கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் திமுக பெரும்பான்மை இடங்களில் ஜெயிக்கும் என திமுக-வுக்கு ஆதரவாக வெளியிட்டார்கள். அதனால்தான் வைகோ அப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு வாசன் இதழ்களுக்கு நெருக்கடி கொடுத்தார்) கலைஞர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திய வாசன் குழும இதழ்கள் கலைஞரைத் திட்டுவதன் மூலம் சன் டிவியை திருப்திப்படுத்தி தொழிலை விருத்தி செய்வது.

இன்னொரு பக்கம் ஆனந்த விகடன் நடுநிலை நாளேடு என்கிற தோற்றத்தை உருவாக்குவது இதுதான் ஆனந்த விகடனின் திட்டம். பேசாப் பொருளை பேச துணிவதல்ல ஞாநியின் பாணி. விற்கிற பொருளை (ஆனந்தவிகடனில்) விற்கிற தந்திரம் தான் ஞாநியின் பாணி. ஏனென்றால் ஞாநியால் ஆனந்த விகடனில் பேச முடியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. கலைஞரைப் பற்றி இங்கு யாரும் பேசிவிடலாம் என்பதில் இருந்து உங்களின் விற்பனை துணிச்சல் துவங்குகிறது. கலைஞரைப் பற்றி நீங்கள் எழுதியதில் பாதி ஜெயலலிதா பற்றி போயஸ்கார்டன் பற்றி சசிகலாவுக்கும் அம்மாவுக்கும் உள்ள உறவு பற்றி எழுதியிருந்தால் நடப்பதே வேறு. விற்பனை செய்ய ஆனந்த விகடனும் இருக்காது விற்றுப் பிழைக்க நீங்களும் இருக்க மாட்டீர்கள்.

ஞாநி அவர்களே நீங்கள் பேசாப்பொருள் எவ்வளவோ இருக்கிறது. பேசுங்கள் எல்லாவற்றையும் பேசுங்கள். முகமூடியைக் கழட்டி வைத்து விட்டுப் பேசுங்கள். வன்மமற்ற முறையில் பேசுங்கள்.. நியாயமாக பேசுங்கள். கலைஞரைப் பற்றி கூட. அப்படி பேசுவதற்காக நான் கலைஞரின் மகனாக இருந்தால் என்பது போன்ற வெற்று வார்த்தைகளை போலியாக எழுதாதீர்கள். நீங்கள் ஒரு போதும் கலைஞரின் மகனாக முடியாது ஏனென்றால் தந்தையை ஒருவன் தலையை எடுப்பேன் நாக்கை வெட்டுவேன் என்றால் தந்தையை பழித்தவனைத்தான் மகன் முதலில் கண்டிப்பான். பின்னர் தந்தையிடம் உரிமையோடு சண்டையிடுவான்.. ஆனால் நீங்கள் உங்களின் நுணுக்கமான தந்திரத்தின் பேரில் தந்தையைப் பழித்தவனையும் தந்தையையுமே ஒரே தராசில் வைத்து அளக்கிறீர்கள். தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள். உங்களின் பார்ப்பன தராசு மனுதர்மம் என்னும் சூத்திர மகக்ளுக்கு எதிரான தர்மத்தை சுமந்திருக்கிறது...

இவ்விதமாய் இந்த கட்டுரையை பாரதிதாசனின் கவிதையை போட்டு முடிக்கிறேன்...

"பள்ளம் பறிப்பாய், பாதாளத்தின் அடிப்புறம் நோக்கி அழுந்துக அழுந்துக! பள்ளந் தனில் விழும் பிள்ளைப் பூச்சியே! தலையைத் தாழ்த்து! முகத்தை தாழ்த்துதோளையும் உதட்டையும் தொங்கவை! ஈனஉளத்தை உடலை உயிரைச் சுருக்கு! நக்கிக் குடி அதை நல்ல தென்று சொல்! தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து போ....."


(நன்றி: http://meeralkal.blogspot.com)


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com