பெருநெருப்பிற்கு ஈரமில்லை
ஆசிரியவுரை
தோழர்கள் சீமான், கொளத்தூர் த.செ. மணி, பெ. மணியரசன் மூவரும் கோவைச் சிறையிலிருக்கின்றனர். நூறாண்டுகளுக்கு முன் 09.07.1908 லிருந்து 01.12.1910 வரை வ.உ.சிதம்பரனார் அடைக்கப்பட்ட அதே சிறையில், அவர் இருந்த அறைக்கு அடுத்த அறைகளில் இவர்கள் இருக்கின்றனர். வ.உ.சி இருந்தது முதலாம் எண் அறையில். இப்போது அது நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. இதற்கு அடுத்து உள்ள 2-ஆம் எண் கொட்டடியில் பெ.ம. அடைக்கப்பட்டுள்ளார். 4-ஆம் எண்ணில் சீமான், கொளத்தூர்மணி இருவரும் உள்ளனர்.
வ.உ.சி. இந்திய விடுதலைக்காக சிறையிலிருந்தார். இவர்கள் ஈழ விடுதலைக்காக சிறையிலிருக்கின்றனர். இந்தியா விடுதலை அடைந்தது. ஆனால் தமிழ்நாடு விடுதலை பெறவில்லை. உலக அளவில் 9 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழினம் தனக்கென ஒரு நாட்டை இன்றும் பெறவில்லை. கொள்ளுத் தாத்தா காலம் தொடங்கி கொள்ளுப் பேரர்கள் காலம் வரை தமிழர்கள் நாட்டு விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் சிறைக்குப் போய்க் கொண்டுதானிருக்கிறார்கள்.
ஈழ விடுதலை முற்றி நிற்கிறது. காட்டுயானை புகுந்து முற்றிய கதிர்களை தின்று, மிதித்துத் துவைத்து நாசம் செய்வது போல் சிங்களப்படை ஈழ விடுதலையை நாசம் செய்கிறது; இந்தியா அதற்குத் துணை செய்கிறது. இந்திய விடுதலைக்கு, திலகர், காந்தி, நேதாஜி தலைமையை ஏற்றுத் தமிழர்கள் எவ்வளவோ ஈகம் செய்தார்கள். ஆனால் இந்தியா தமிழர்கள் விடுதலைக்குத் துணையாக இல்லை; இந்தியா தமிழகத் தமிழர்களை அடிமையாகவே வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் விடுதலைக்கு எதிராக முன்பு படையை அனுப்பியது; இப்போது படைக் கருவிகளையும், பயிற்சியாளர்களையும் அனுப்புகிறது.
இந்தியா என்று நாம் குறிப்பிடுவது சாரத்தில் இந்திய ஆளும் வர்க்கத்தைத் தான். பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளிய, பார்ப்பனிய, இந்தி ஆதிக்க சக்திகளைத்தான். இந்த ஆளும் சக்திகளை அன்றும் இன்றும் பிரதிநிதித்துவப்படுத்துவது காங்கிரசுக்கட்சி; அதற்கோர் இணை அமைப்பாக இப்போது பாரதிய ஜனதா கட்சி உருவெடுத்துள்ளது. தமிழ் இனத்திற்கு இரண்டகம் செய்வதைத் தனது பிறவிக் கடமையாகக் கொண்ட கட்சி காங்கிரசு!
காங்கிரசின் வடநாட்டுத் தலைவர்களைப் பார்த்த அன்று அண்ணா சொன்னார். “வடவர் நம்மவரும் இல்லை; அவர்கள் நல்லவரும் இல்லை’’ என்று! தனிப்பட்ட வாழ்க்கையில் ஊழலற்றும் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியில் சிற்சில நல்ல திட்டங்களை நிறைவேற்றியும் தமிழ் மக்களிடம் நன் மதிப்பைப் பெற்ற காமராசர் கூட வடநாட்டுத் தலைவர்களின் விசுவாசத் தளபதியாகவே செயல்பட்டார். காங்கிரசின் இரண்டகத்தால், மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபோது, திருப்பதி, சித்தூர்பகுதிகளை ஆந்திரத்திற்கும், கோலார்தங்கவயல், கொள்ளே காலம் பகுதிகளைக் கர்நாடகத்திற்கும், தேவிகுளம் பிர்மேடு நெய்யாற்றங்கரை, செங்கோட்டை வட்டக் கிராமங்கள் போன்றவற்றைக் கேரளத்திற்கும் பறி கொடுத்தோம். பிறகு கச்சத்தீவைத் தூக்கி சிங்களர்க்குக் கொடுத்தார் இந்திராகாந்தி இப்பொழுது கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை அன்றாடம் சுட்டுக் கொல்கிறது சிங்களப்படை.
காவிரி, முல்லைப்பெரியாறு ஆகிய ஆற்று நீர்உரிமைகளைக் கன்னடர்களும் மலையாளிகளும் பறித்துக் கொள்ள துணை போனது காங்கிரசுக் கட்சி. காங்கிரசுக் கட்சியின் தமிழர் எதிர்ப்புக் கொள்கைகளைப் பா.ச.க.வும் பின்பற்றுகிறது. தாகம் தணிக்கக் குடிநீர்த் திட்டத்தைத் தமிழக எல்லைக்குள் ஒகேனக்கல் அருகே நிறைவேற்றுவதையும் கன்னடர்கள் தடுக்கிறார்கள். காங்கிரஸ், பா.ச.க. ஆட்சிகளின் துணையோடுதான் கன்னடர்கள் தமிழர்களுக்கெதிராக வெறியாட்டம் போடுகிறார்கள்.
காவிரி உரிமையைத் தடுத்து, வெற்றி கொண்ட செருக்குடன், கன்னடர்கள் ஓகேனக்கல் பகுதி முழுவதையும் கர்நாடகத்துடன் சேர்க்க வேண்டும் என்று கூச்சலிடுகின்றனர். ஓசூருக்குள் புகுந்து தீவட்டி ஊர்வலம் நடத்தி, அதையும் கர்நாடகத்துடன் சேர்க்கவேண்டும் என்று ஆரவாரம் செய்கின்றனர். தமிழினத்திற்கு இத்தனைக் கேடுகளைக் காங்கிரசுக்கட்சி செய்தாலும் அதனுடன் கூட்டணி சேர தமிழகக் கட்சிகள் போட்டி போடுகின்றன. தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் காங்கிரசுடன் கூட்டணி காண்பதில் பேரார்வம் காட்டி வருகின்றன. இவ்விரு கழகங்களில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைக் காங்கிரசு தன்வசம் வைத்துக்கொண்டுள்ளது.
தமிழகக் காங்கிரசுப் புள்ளிகள் கோயில் மாடுகளைப் போல் கொழுத்துத் திரிகிறார்கள். மக்கள் பணியோ, கட்சிப் பணியோ ஆற்றாமல் கழகங்களின் துணையுடன் மக்களவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகி விடுகிறார்கள். இதனால் தங்களுக்குள் முட்டிக்கொள்வது, மோதிக்கொள்வது, வெட்டிக்கொள்வது, வேட்டி சட்டையைக் கிழித்துக்கொள்வது என்பதையே முழுநேரப் பணியாக அவர்கள் கொண்டுள்ளனர்.
காமராசருக்குப் பிறகு, தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்குப்பெற்று சொந்தக்காலில் நிற்கக்கூடிய தலைவர் யாரும் உருவாகவில்லை. அவ்வாறு தலைவர் ஒருவர் தனிச்செல்வாக்குப் பெறுவதை அக்கட்சியின் அனைத்திந்தியத் தலைமை அனுமதிப்பதில்லை. மாநிலங்களில் காங்கிரஸ் புள்ளிகளிடையே குழுச் சண்டையை வளர்த்து விடுவதை தமது அமைப்புக் கொள்கையாகக் கொண்டிருந்தார் இந்திராகாந்தி. அவர் மகன் ராஜீவ்காந்தி அதே தந்திரத்தைப் பின்பற்றினார் மருமகள் சோனியாகாந்தியும் அதே உத்தியைப் பின்பற்றுகிறார். இதனால் தலைமையிடம் ஒருவருக்கெதிராக இன்னொருவர் கோள்மூட்டி விடுவதையே தங்களின் அரசியல் பண்பாகத் தமிழகக் காங்கிரசுப் புள்ளிகள் வளர்த்துக் கொண்டுள்ளனர். தங்களுக்குள் காட்டிக் கொடுத்து கட்சித் தலைமையிடம் நல்லபெயர் வாங்கும் பழக்கத்தில் ஊறிப்போன அவர்கள், தமிழ் இனத்தைக்காட்டிக் கொடுத்துப் பிழைப்பு நடத்துகின்றனர்.
ஈரோட்டில் 14.12.2008 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி நடத்திய “தமிழர் எழுச்சி உரை வீச்சு’’ பொதுக்கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குனர் சீமான், பொியார்திராவிட கழகத் தலைவர் கொளத்தூர்மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ. மணியரசன் ஆகிய மூவரும், “அன்னை சோனியாகாந்தியை இழிவாகப் பேசினர் ராஜீவ்காந்தி மரணத்தைக் கொச்சைப்படுத்தினர், எனவே இவர்களைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கவேண்டும்’’ என்று ஈரோடு மாவட்டக் காங்கிரசுத் தலைவரும் மொடக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பழனிச்சாமி காவல் துறையில் புகார்செய்தார். உடனே, தமிழகக் காங்கிரசுத் தலைவர் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சனம் உள்ளிட்டோர் சோனியாவை இழிவுபடுத்தி, ராஜீவைக் கொச்சைப்படுத்திய மூவரையும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளவேண்டும் என்று கூக்குரலிட்டனர்.
ஒருவாதத்திற்காக நாம் கேட்கிறோம், சோனியாவையும், ராஜீவ்காந்தியையம் இழிவாகவோ, கொச்சையாகவோ பேசினால் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்பிடிக்க முடியுமா? அவ்வாறு சட்ட விதிகள் இருக்கின்றனவா? இல்லை. மானம் போய்விட்டதாகக் காங்கிரசுப் பெருச்சாளிகள் கருதினால், தனியே மான இழப்புவழக்குப் போடவேண்டும். அதற்குத் தேசியப் பாதுகாப்புச் சட்டம் எப்படிப் பொருந்தும்? அல்லது பிரிவினைத் தடைச்சட்டம் எப்படிப் பொருந்தும்? தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை ஆதாித்துப் பேசினார்கள், ஆகவே தளைப்படுத்துங்கள் புதிய என்று பின்னிணைப்பு சேர்த்தார்கள்.
தடை செய்யப்பட்ட அமைப்பிற்குக் கருத்தளவில் ஆதரவு தெரிவிப்பது குற்றமாகாது என்று ஏற்கெனவே வைகோ வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ராஜீவ்காந்தி, ஈழத்தமிழர்கள் மீது அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரப்புப் படையை ஏவி, ஆறாயிரம் தமிழர்களை ஆண்கள்-பெண்கள்-முதியோர்-குழந்தைகளைக் கொன்று குவித்தார். இதற்காக ராஜீவ்காந்தியை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் வன்மையாகக் கண்டிக்கிறோம். ராஜீவ்காந்தியைக் கண்டிப்பது ராஜீவ்காந்தியைக் கொச்சைப்படுத்துவதாகுமா?
இந்தியா மிகப்பொிய சனநாயக நாடு, என்று பீற்றிக்கொள்ளும் காங்கிரசார், ஆட்சித்தலைவர் செய்த அட்டூழியங்களைக் கண்டிக்கக்கூடாது என்கிறார்களா? ஒரு வேற்றுநாட்டில் இத்தாலிக்காரர்களை அரசு சுட்டுக்கொன்றால் அந்த அரசுக்கு, சோனியாகாந்தி ஆய்த உதவி செய்வாரா?
ஈழத்தில் தமிழினத்தை இனப்படுகொலை செய்யும் சிங்களப்படைக்கு ஆய்தங்கள் வழங்குகிறாரே சோனியாகாந்தி எப்படி? சாகின்றவர்கள் தமிழர்கள் என்பதால் தானே? இந்த அட்டூழியத்தை சுட்டிக்காட்டி சோனியாகாந்தியைக் கண்டித்தால் அது அந்த அம்மையாரை இழிவு படுத்தியதாகுமா?
கொல்லப்படுவது தமிழினம் என்ற வஞ்சக நோக்கில் தானே, இந்திய அரசு ஈழத்தில் போர்நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசைக் கோரவில்லை. கடந்த அக்டோபர் 2-ஆம் நாளிலிருந்து ஈழத்தில் போர்நிறுத்தம் கோரி தமிழகத்தில் பரந்துபட்ட மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம், மனிதச்சங்கிலி, அனைத்துக்கட்சி தூதுக்குழு என்ற வடிவங்களில் மன்மோகனிடம் போர் நிறுத்தம் கோரப்பட்டது.
இந்திய அரசு ஏன் போர்நிறுத்தம் கோரவில்லை. போய்ப்பேசுகிறேன் என்ற பிரணாப்முகர்ஜி ஏன் இலங்கை போகவில்லை? சாகின்றவர்கள் தமிழர்கள் என்ற காரணந்தானே! இனப்படுகொலை செய்யும் சிங்களர் ஆரியர், கொல்லப்படும் ஈழத்தமிழர் வரலாற்றுப் பகைவர் என்ற ஆரிய அளவு கோலை வைத்துத் தானே இந்திய ஆளும் வர்க்கம், இலங்கைக்குப் படைக்கருவிகள் அளிக்கிறது, பயிற்சியும் தருகிறது.
ஆரியத்திற்கு எதிராகத் திராவிட அரசியல் பேசிய தி.மு.க. என்ன செய்கிறது? பதவிக்காக, பணத்திற்காகத் தில்லிக்குக் காவடி தூக்கி கங்காணிவேலை பார்க்கிறது. திராவிடத்தின் பெயாிலேயே, பார்ப்பனியக் கட்சியாகிவிட்டது அ.இ.அ.தி.மு.க. அது விடுதலைப் புலிகளுக்கெதிராகப் பகைமை கக்குகிறது. ஆனால் தமிழக மக்கள் ஈழத்தமிழர்களுக்காதரவாகவும், விடுதலைப் புலிகளுக்காதரவாகவும் விடாமல் கிளர்ச்சிகள் நடத்துகிறார்கள். ஈரோடைப் பேச்சுக்காக மூவரைச் சிறைப்படுத்தியதைக் கண்டித்து காங்கிரசு பெருச்சாளிகளுக்கெதிராகத் தமிழகமெங்கும் போராடுகிறார்கள். இந்தப் போராட்டங்களை சட்டம் அனுமதிக்கிறதா இல்லையா என்று யாரும் பார்க்கவில்லை. போராட்டங்கள் சட்டத்தை மாற்றட்டும்.
இந்திய அரசே, தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஏற்பிசைவு வழங்கு!’’ என்ற முழக்கம் விண்ணைப் பிளக்கட்டும் !
தடைகளைத் தகர்க்கட்டும்!
பெரு நெருப்புக்கு ஈரமில்லை!
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|