சத்தியத்தின் திசைகள்
“ஆணுறையை உங்கள் வாடிக்கையாளர்கள் தவறாமல் பயன்படுத்த வலியுறுத்த வேண்டும்.”
“வருகிற அவசரக்காரர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை. எங்களுக்கு இது பற்றியெல்லாம் பெரிதாகத் தெரியாது”
தெரஸா விலை மாதர்கள் மத்தியில், ஆணுறைகளைப் பயன்படுத்துவதும், அதன் அவசியமும், அதன் மூலம் அவர்களின் உரிமைகளைக் காப்பாற்றிக் கொள்வதும் பற்றி பேசுகிறாள். எப்படி உபயோகப்படுத்துவது என்று சொல்லித் தாருங்கள். தெரஸா சொல்லித் தருகிறாள். பின்னாளில் தெரஸாவின் கணவன் ஒரு விலைமாதுவிடம் தொடர்பு கொண்டிருப்பதும் அவளின் மகள் திடுமென தான் கர்ப்பமாயிருப்பதைப் பற்றிச் சொல்வதும் அவளுக்கு அதிர்ச்சியளிக்கின்றன. தி குட் லைப் (The Good life) என்ற ஸ்பெயின் நாட்டுப் படத்தில் இது இடம் பெறுகிறது. விளிம்புநிலை மனிதர்களான விலைமாதர்கள், அரவாணிகள், தலித்துகள், பெண்கள், சுற்றுச்சூழலாளர்கள், ஆதிவாசிகள் போன்றோரைப் பற்றி இன்று உலகம் முழுக்கவும் இலக்கியப் படைப்புகளும், திரைப்படங்களும் பெருமளவில் வெளிவருகின்றன. விளிம்பு நிலை மனிதர்களெல்லாம் பின்நவீனத்துவ சமூகத்தினர். பின் நவீனத்துவ மனிதர்கள்.
ஆகாச குசும் ('Akasa Kusum- Flowers in this sky) என்ற இலங்கைப் படத்தில் காபரே டான்சராக பணிபுரியும் இளம்பெண் கர்ப்பமாகி பிறக்கும் குழந்தைக்கு எய்ட்ஸ் என்று தெரிகிறது. அவளது அம்மா முன்னாள் நடிகை, நடிகையாக வாய்ப்பு வந்ததும் பிறந்த குழந்தையையும், கணவனையும் திரைப்படத்துறையில் லைட்பாயாக இருக்கும் தகப்பனின் தூண்டுதலால் ஒதுக்கிவிட்டு நடிகையானவள் அவள். இலங்கையின் போர்ச் சூழல் ஒரே காட்சியில் சிறு செய்தியாக இடம் பெறுகிறது. தொலைக்காட்சி தொடர் நடிகை, பணம் கேட்டு வந்து தொந்தரவு செய்யும் தங்கை, வேலைக்கார அம்மாவின் துயரங்களோடு இப்படம் நிறைந்திருக்கிறது. இதன் இயக்குனர் பிரசன்ன விதாங்கே. இப் படத்தில் இவருக்குத் துணையாக பணிபுரிந்திருக்கிறார்கள் இரு சென்னை இளைஞர்கள். 1. விசுவாமித்திரன் (திரைப்பட விமர்சகர்) 2. மாமல்லன் (குறும்பட இயக்குனர்)
13வது கேரள திரைப்பட விழா (டிசம்பர் 13 - 19) நடந்து முடிந்திருக்கிறது. ஆண்டு தோறும் அதிகரித்து வரும் பிரதிநிதிகள் கூட்டம். (அதிலும் பெரும்பாலும் இளைஞர்கள் யுவதிகள்) ஒரே நேரத்தில் 11 தியேட்டர்களில் திரைப்பட திரையிடல்கள். ஸ்வர்ண் சக்கரம், ராஜாதா சக்கரம், ரசிகர் பரிசு என்று பல லட்சங்கைள கேரள அரசும் பரிசாக அளித்து வருகிறது. சின்ன மாநிலம். சுற்றுலா போன்ற துறைகளாலே வருமானம் ஈட்டும் மாநிலம். ஆண்டுதோறும் திரைப்பட விழாவை கோலாகல விழாவாகக் கொண்டாடுகிது. தொடர்ந்து திரைப்படத் துறையினரே ஆட்சி செய்யும் தமிழகத்தில் இது கனவாகவே இருப்பது ஏன்?
தினமும் கடையைத் திறந்ததும் ஊதுபத்தி, கற்பூரம் காட்டி கடையைத் திறப்பதைப் பார்த்திருக்கிறோம். கடை திறந்ததும் துப்பாக்கியை எடுத்து வெளியில் வந்து நாலைந்து முறை வானத்தை நோக்கி சுட்டு போனியாக்குவதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பாக்கிஸ்தான் மாரா ஆதம் கேல் என்ற வடகிழக்குப் பகுதியில் பர்மா பஜார் கடைகள் போல துப்பாக்கிகள், ஆயுதங்கள் விற்கும் கடைகள். அதில் நடப்பதுதான் துப்பாக்கி சுட்டு போனி செய்யும் காட்சியாகும். Son of a Lion என்ற ஆஸ்திரிலேயா படத்தில் இது மாதிரி ஒரு காட்சி. ஆயுத துப்பாக்கி கடையில் வேலை பார்க்கும் ஒரு பையன் படிக்க ஆசைப்படுகிறான். அப்பா படிப்பு வேண்டாம், துப்பாக்கி வகைவகையாய் செய்து காசு சம்பாதி என்கிறார். பையன் அவரின் பிடியிலிருந்து தப்பித்து ஓடுகிறான். அப்பா சலித்துப் போய் எல்லாவித முயற்சிகளிலும் தோற்று படிப்பதற்கு சம்மதிக்கிறார். பள்ளியில் அவனிடம் பையன்கள் என்னென்ன துப்பாக்கி உனக்குத் தெரியும் என்று கேட்கின்றனர். பையன் தரும் பட்டியலால் ஆசிரியரே வியந்து போகிறார். நான் இதுவரைக்கும் மனிசனெ சுட்டதில்லே. உடம்பில் மயிரிலில்லாத ஒரு சொறிநாயைத்தா சுட்டிருக்கேன்.
ஆஸ்திரேலிய இயக்குனரான பென்ஜமின் ஜில்மொஹா பாக்கிஸ்தானில் சம்பந்தப்பட்ட இடங்களில் தங்கியிருந்து ஆய்வு செய்து இப்படத்தை எடுத்திருக்கிறார். பாக்கிஸ்தான் ஆயுத சப்ளை உற்பத்தியும் ஆயுதக் கடைகளும் அதிர்ச்சி தருகின்றன. இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தேன். இந்த நாட்டில் எனது மகன்கள் பிறந்து வளர்கிறார்கள். இங்கே பணம் முதலீடு செய்து வியாபாரம் பல வருடங்களாய் செய்கிறேன் என்று பிரேசில் மண்ணை ஒரு கையில் அள்ளிக்கொண்டு வெள்ளைக்காரன் உரிமை கொண்டாடி சொல்கிறான். அவனை எதிர்க்கும் பூர்வீக இந்தியக் குடிகளின் தலைவன் அவனுக்கு பதில் எதுவும் சொல்லாமல் கீழே குனிந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வாயில் போட்டுச் சுவைக்கிறான். ஙிவீக்ஷீபீ கீணீtநீலீவீஸீரீ என்ற பிரேசில் படத்தில் இது இடம்பெறுகிறது. தங்கள் மண்ணை இழக்காமல் போராட நினைக்கும் ஆதிவாசிகள் பழங்குடிகள் உலகம் முழுதும் நிறைந்திருக்கிறார்கள். லத்தின் அமெரிக்கப் படங்களாய் பிரேசில், மெக்சிகோ படங்கள் இன்று உலகத் தரத்தில் முன்னனியானவை.
உலகத் திரைப்படங்களில் ஐம்பது சதவீதத்திற்கும் மேல் இலக்கிய படைப்புகளான நாவல்கள், சிறுகதைகளை வைத்து படங்கள் தற்போது வெளிவருகின்றன. நோபல் பரிசு பெற்ற ஜோஸ் சரமாகோவின் நாவலை அடிப்படையாக வைத்து வெளிவந்துள்ள கனடா படமான ஙிறீவீஸீபீஸீமீss அதிர்ச்சி தருகிறது. ஒரு கண் மருத்துவர் காலையில் எழுந்ததும் கண் தெரியாமல் போகவே அதிர்ச்சியாகிறார். நேற்றிரவுதான் ஒரு கண் தெரியாத நோயாளிக்கு வைத்யம் பார்த்தவர். கண் தெரியாதவர்கள் மருத்துவமனையில் குவிகிறார்கள். பிறருக்குப் பரவும் என்று தனியே அடைத்து வைக்கிறார்கள். சாப்பாடு திண்டாட்டம். அதிலும் தாதாவாகும் ஒருகூன் யாரை யார் வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளலாம். யாரை யார் வேண்டுமானாலும் யாரும் புணர்ந்து கொள்ளலாம். எல்லாம் கழிவறைதான். பார்வையற்றவள் என்று உள்ளே தங்கும் மருத்துவரின் மனைவி இவற்றையெல்லாம் பார்த்து சிதைகிறாள். நாலைந்து பேரை அழைத்துக் கொண்டு தப்பிக்கிறாள். வெளி உலகில் எல்லோரும் குருடர்கள். அதிநவீன தொழில் நுட்ப உலகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. சாப்பாடு இன்றி, நிர்வாணமாயும் சபித்தும் நடமாடும் மனிதர்கள். அதிர்ச்சி தந்த பாடம்.
நவீன இலக்கியவாதிகள் கொண்டாடும் மாய யதார்த்தவாதி கார்சியா மார்க்சின் A very old man with enormous wings படமும் இடம்பெற்றது. மார்க்கம் இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார். இது நாடகமாக தமிழில் நடிக்கப்பட்டது. கேரள பல்கலைக்கழகத்தில் திரைப்படவிழாவின் ஒரு நாளில் நான் நானும் என் எழுத்தும் என்ற தலைப்பில் தமிழ்த்துறை மாணவர்கள் மத்தியில் பேசியபோது ஒரு மாணவி காஞ்சீவரம் தமிழ்ப்படம் விழாவில் இடம்பெற்றது பற்றி கேட்டார். தமிழ்ப்படம் எடுக்கக்கூட மலையாள இயக்குனர்தான் கிடைத்தாரா? தமிழர்கள் என்ன செய்கிறார்கள் தங்கர்பச்சானின் பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு மற்றும் சுப்பிரமணியபுரம், மொழி, பருத்திவீரன், வெயில் பற்றி சொன்னேன். பருத்திவீரன் இங்கே சக்கைபோடு போட்டது. சுப்பிரமணியபுரம் இப்போ சக்கை போடு போடுது
காஞ்சீவரம் மலையாள திரைப்பட இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியது. காஞ்சிபுரத்தில் வாழும் நெசவாளர்கள் ஒன்றுபட்டு போராடுவதை சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சூழலில் வைத்து எடுக்கப்பட்ட படம். பிரகாஷ்ராஜிற்கு (நெசவாளர்) தன் மனைவியாக வருகிறவளுக்கு காஞ்சி பட்டுடுத்தி கூட்டிவர ஆசை. நிறைவேறுவதில்லை. மகனின் காதுகளில் சத்திய வாக்காக அவனின் திருமணத்திற்கு காஞ்சி பட்டுப் புடவைதான் என்கிறார். தனியாக தறிக்கு பட்டு தர முதலாளி சம்மதம் தராத சூழலில், வீட்டில் யாருக்கும் தெரியாமல் தறி போட்டு கொஞ்சம் கொஞ்சமாய் பட்டு நூலை திருடி சேலை நெய்கிறார். மகள் பிணமாகக் கிடக்கிறபோது அந்த பட்டு சேலையை அவள்மீது போர்த்துகிறார். பிணத்தின் முகத்தையும் தலையையும் மூடினால் கால் தெரிகிறது. காலை மூடினால் தலை தெரிகிறது. 16 வருடம் நெய்த பட்டு. விரக்தியில் பிரகாஷ்ராஜ் சிரிக்கிறார். 16 வருடமாய் யாருக்கும் தெரியாமல் பட்டு நெய்ய முடியுமா- அப்படி யரு சத்யம் தரும் சடங்கு எங்கிருக்கிறது? கம்யூனிஸ்ட் ஆகும் பிரகாஷ்ராஜ் அப்படி பொய் சொல்லி, கபடமானவரா? லாஜிக் இல்லாத பல சமாச்சாரங்கள் நல்ல திரைப் படத்தின் பெரிய பலவீனங்கள். நெசவாளர்கள் போராடுவதும், தொடர்ந்து இயங்கி கூட்டுறவு சங்கங்கள் மூலம் உயர்வதும் இன்றைய சூழலில் அர்த்தபுஷ்டியான விடயங்கள் (உலகமயமாக்கலில் சிறு தொழில்கள் நசியும் சூழலில்).
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|